வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கில்கமேக்ஷ் காவியம்

கில்கமேக்ஷ் காவியம் .... உலகின் முதல் இதிகாசம்...


கில்கமேக்ஷ் காவியம்’ என்பது மெசப்பட்டோமியாவை ஆண்ட கில்கமேக்ஷ் என்ற 
மாமன்னைப் பற்றிய பெருங்கதை. 

பேரரசர் கில்கமேக்ஷ் வாழ்ந்த காலமாக கி.மு 4000 என்று சொல்கிறார்கள். 
அதாவது கிறிஸ்த்துவுக்கு முன் நாலாயிரம் வருடங்கள். 

உலகில் எந்த மதமும் தோண்றியிருக்காத காலம் என்று யூகிக்கிறார்கள். 

சுமேரியர்களிடமிருந்தே ஆசிய நாகரீகம் தோண்றியிருக்கும் என்று நம்புவதால் 
இந்த யூகம்.சரி கில்கமேக்ஷ் கதையைப் பார்ப்போம். 

(சுமேரிய மொழியில் இருந்தே திராவிட மொழிகள் உருவான என்றொரு கருதுகோள் 
இருப்பது தெரியுமா ) 

உருக் நகரை கில்கமேக்ஷ் ஆள்கிறான். 

இளம் பிராயத்தில் பெரிய வீரனாயிருக்கிறான்.காளையை போன்ற சக்தி வாய்ந்த 
உடலைக் கொண்டிருக்கிறான்.அவனை வெல்ல யாருமில்லை அந்த நாட்டில்.பார்க்கும் 
பெண்களையெல்லாம் அடைய ஆசைப்படுகிறான். 

அருரு என்னும் பெண் தெய்வம் கில்கமேக்ஷை எதிர்க்க அவனைப்போல பலம் வாய்ந்த 
ஒருவனை பூமிக்கு அனுப்பவேண்டும் என்று கொஞ்சம் களிமண்ணை எடுத்து பிசைந்து 
எறிகிறாள்.அது பூமியில் விழுந்து “என்கிடு” என்கிற மனிதனாக பிறக்கிறது. 

என்கிடு மிருங்களோடு மிருகமாக வளர்கிறான்.ஆனால் மிகபலசாலி. 

என்கிடுவை காட்டில் பார்த்த வேட்டைக்காரன் அரசன் கில்கமேக்ஷிடம் 
என்கிடுவின் வலிமையை பற்றிச் சொல்கிறான். கில்கமேக்ஷ் ஆச்சர்யபட்டு 
வேட்டைகாரனிடம், ஒரு தாதியை என்கிடு முன்னால் நிற்க செய்யவும் என்று 
உத்தவிடுகிறான். 

அதுபோலவே ஒரு அழகான பெண் ஆடையில்லாமல் என்கிடு முன் நிற்க, என்கிடுவின் 
ஆண்மை விழித்துக்கொள்கிறது. ஏழுநாள் ஏழுபகல் காமம் துய்கிறான். பின் 
மிருகங்களோடு செல்லும் போது ,மிருகங்கள் அவனை சேர்த்துகொள்ள மறுக்கின்றன( 
தாதியுடன் உள்ள உறவால் மிருகங்கள் அவன் மனிதனே என்று தெரிந்து 
கொள்வதால்).தாதி அவனை அன்போடு அழைத்துப்போகிறாள். போகும் வழியில் 
இடையர்கள் என்கிடுவை வரவேற்கிறார்கள். 

என்கிடுவுக்கு தாதிக்கும் ரொட்டியும் பாலும் 
கொடுக்கிறார்கள்.மிருகச்சூழ்நிலையில் வாழ்ந்த என்கிடுவுக்கு எப்படி 
ரொட்டியையும் பாலையும் சாப்பிட வேண்டும் என்று கூடத் தெரியாது. தாதிதான் 
சொல்லிக்கொடுக்கிறார். பதிலுக்கு அந்த கொடுங்காட்டில் உள்ள 
சிங்கங்களையும்,ஒநாயையும் கொன்று குவித்து இடையர்களுக்கு உதவி செய்கிறான் 
என்கிடு 

அப்போது இடையர்களிடம் வந்து சும்மா கதைப்போக்காக கில்கமேக்ஷின் பெண் 
வேட்டைகளைப்பற்றி சொல்ல என்கிடுவுக்கு கோபம் வருகிறது. “யார் அந்த 
கில்கமேக்ஷ்” என்று அவனுக்கு பாடம் கற்றுக்கொடுக்க போகிறான் என்கிடு. 
அங்கே கில்கமேக்ஷ் என்கிடுவுக்காக காத்திருக்கிறான். இருவருக்கும் கடும் 
சண்டை. 
சண்டையின் முடிவில் கில்கமேக்ஷ் ஜெயித்தாலும், என்கிடுவை அவனுக்கு 
பிடித்திருக்கிறது. என்கிடுவுடன் நண்பானாகிறான். இருவரும் நட்பை வளர்த்து 
கொள்கிறார்கள். 

இப்போது அவர்கள் நாட்டின் பக்கத்தில் உள்ள மிகப்பெரிய காட்டில் உள்ள 
“ஹம்பாபா” என்னும் அரக்கனை கொல்ல போகிர்றார்கள் கில்கமேக்ஷும் 
என்கிடுவும்.கொல்வதற்கு முன் சூரிய கடவுளிடம் வேண்டி பல வரங்களை பெற்றுக் 
கொள்கிறான் கில்கமேக்ஷ்.எட்டு வகையான காற்றும் அவனுக்கு துணையாக 
இருக்கும் என்று வரம் கொடுக்கிறார் சூரியக்கடவுள்.இந்த ‘ஹம்பாபா’ 
மிகப்பெரிய வீரன். அந்த காட்டில் அவன் அனுமதி இல்லாமல் யார் வந்தாலும் 
கொன்று விடுவான்.ஆனால் கில்கமேக்ஷும் என்கிடுவும் பயப்படாமல் 
சென்றார்கள். 

அவர்களைப் பார்த்ததும் ‘ஹம்பாபா’ தாக்க வருகிறான்.ஆனால் எட்டுவகையான 
காற்றும் ஹம்பாபாவை நோக்கி சுழன்று அடிக்கின்றன.ஹம்பாபா அது தாங்க 
முடியாமல் கில்கமேக்ஷிடம் மன்னிப்பு கேட்கிறான்.கில்கமேக்ஷ் இரக்கப்பட்டு 
மன்னிக்க தயாராகும் போது , என்கிடு தடுக்கிறான். ”கொடியவனுக்கு இரங்காதே! 
நீதியை விட்டுவிடுபவன் எல்லாம் விதிவசம் போய்விடுவான்” என்று சொல்லி 
கில்கமேக்ஷ் மற்றும் என்கிடு இருவரும் ஹம்பாபாவை கொன்று 
விடுகிறார்கள்.’என்கில்’ என்ற பூமிதேவதைக்கு மட்டும் இது பிடிக்கவில்லை. 

இப்படி ஹம்பாபாவை கொன்று கில்கமேக்ஷ் தன் நண்பனோடு நாடு திரும்பும் போது, 
கில்கமேக்ஷின் தேஜசையும் அழகையும் கண்டு வியந்து காதல் கடவுள் “இஸ்தார்” 
காதலிக்கிறாள். தன்னுடைய காதலை கில்கமேக்ஷிடம் சொல்ல, “முடியாது.நீ 
இதற்கு முன்னர் காதலித்தவர்கள் எல்லாம் அழிந்துதான் 
போயிருக்கிறார்கள்.என்னால் உன்னை திருமணம் செய்து விதைகளை கொடுக்க 
முடியாது என்கிறான். 

இதனால் இஸ்தார் கோபமடைந்து தன் தந்தைகடவுள் “அனு” விடம் சொல்லி தேவக்காளை 
ஒன்றை கில்கமேக்ஷ் மீது ஏவி விடுகிறாள். ஆனால் கில்கமேக்ஷ் என்கிடுவின் 
துணையோடு அந்த காளைமாட்டை கொன்று விடுகிறார். 

இப்போது என்கிலும், இஸ்தாருமாகிய இரண்டு தேவதைகளும் தெய்வ சபையை கூட்டி 
கில்கமேக்ஷ் மற்றும் என்கிடுவின் அட்டகாசம் கூடுகிறது. கடவுளின் ஆதரவு 
உடையவர்களையே கொன்று விடுகிறார்கள். ஆகையால் கில்கமேக்ஷ் என்கிடு 
இருவரில் யாராவது ஒருவர் சாக வேண்டுமென்று சொல்கிறார்கள். 

என்கிடு கடும் காய்ச்சல் வந்து பண்ணிரெண்டு நாட்கள் உடல்நலமில்லாமல் 
இறந்து விடுகிறான். தன் அருமை நண்பன் என்கிடுவின் இறப்பு கில்கமேக்ஷின் 
துக்கத்தை அதிகரிக்க செய்கிறது. என்கிடுவை வைத்து ஏழு பகல் ஏழு இரவு 
ஒவென்று அழுதான். பின் நிறைய தங்ககங்கள் வைரங்கள் வைத்து அடக்கம் 
செய்தான். 

என்கிடுவின் மரணம் தன்னை செயல் படவிடாத துக்கத்தை கொடுக்க, அழியாத 
வாழ்வைத்தேடி கில்கமேக்ஷ் தன் பயணத்தை தொடங்குகிறார். 

தூரதேசத்தில் ’உத்தனபித்தம்’ என்ற மாமனிதர், பெருவெள்ளத்தில், உலகமே 
அழியும் போது பிழைத்தவர் என்பதால் அவரைப்பார்த்தால் விடைக்கிடைக்கும் 
என்று நினைத்து கில்கமேக்ஷ் அவரை நோக்கி தன் பயணத்தை தொடங்கினான். 

பல நாட்கள் நடந்த பிறகு அங்கிருந்த இருட்டான மாக்ஷு பாதையை இரண்டு தேள் 
மனிதர்கள் காவல்காப்பதைப் பார்க்கிறார். 

அவர்கள் இந்த மாக்ஷு பாதை இருட்டானதென்றும். அதில் போனால் எதுவும் 
தெரியாதென்றும் எச்சரித்தார்கள்.ஆனாலும் கில்கமேக்ஷ் தான் போக 
விரும்புவதாய் சொல்ல கில்கமேக்ஷை போக அனுமதிக்க, பல நாள் நடந்து முடிவில் 
சூரிய ஒளியை காண்கிறான். 

அங்கே திராட்சை ரசம் செய்யும் சிதூரி என்னும் 
பெண்ணைப்பார்க்கிறான்.சிதூரி இறப்பில்லாத வாழ்க்கை கிடைக்க சாத்தியமில்லை 
என்கிறாள்.ஆனால் கில்கமேக்ஷ் பிடிவாதமாய் இருக்க “இதோ இந்த கடற்கரையில் 
தான் ஊழிவெள்ளத்தில் தப்பித்த ’உத்தன்பித்தம்’ பெரியவரின் தோணிக்காரர் 
“ஊர்சனாபி’ இருக்கிறார்.அவரிடம் கேள் என்று சொல்ல, கில்கமேக்ஷ் 
ஊர்சனாபியிடம் சரணடைகிறான். 

ஊர்சனாபி அவனை பலகடல்கள் தாண்டி உத்தன்பித்தம் இருக்கும் ஊருக்கு 
கூட்டிச்செல்கிறார். 

அங்கே உத்தன்பித்தம் கில்கமேசை வரவேற்கிறார்.தன்னுடைய கதையை சொல்கிறார் 
உத்தன்பித்தம். 

யூப்பரிட்டிஸ் நதியோரம் உள்ள சுருப்பாக் என்னும் நகரத்தில் பல வருடம் 
முன் பிறந்து வளர்ந்தவர் உத்தன்பித்தன். அப்போதுதான் மனித நாகரீகம் 
தோண்றியமையால் மனிதர்கள் எப்போதும் கத்திக்கொண்டே 
இருந்தார்களாம்.அத்னைக்கண்டு வெறுப்புற்ற தெய்வங்கள் உலகை நீரால் அழிக்க 
திட்டமிட்டதாம். 

உத்தன்பித்தன் கனவில் “இயா” என்னும் தேவதை தோண்றி ‘நீ பெரிய கப்பல் 
கட்டு.அதனுள் எல்லா ஜீவராசிகளையும் ஜோடியாக சேகரித்து கொள்.உலகம் 
அழிந்ததும் வெளியே வா “என்றது. அதன் படியே ஒரு ஏக்கர் அளவுக்கு பெரியாதான 
கப்பலை செய்து அதனுள் ஜீவராசிகளை வைத்து வெள்ளம் வற்றியதும் வெளியே 
வருகிறார் உத்தன்பித்தம். பின் தெய்வங்களில் ஆசி வாங்கி இறப்பில்லாத 
வாழ்வை பெறுகிறார். 

கில்கமேக்ஷ் தனக்கு இறப்பில்லா வாழ்க்கை தத்துவத்தை சொல்லக் 
கேட்கிறார்.அதற்கு உத்தன்பித்தம் “நீ ஏழூநாட்கள் தூங்காமல் இருந்தால் அதை 
சொல்வேன் ” என்று சொல்வார்.ஆனால் கில்கமேக்ஷால் இருக்க முடியாது. நன்றாக 
தூங்கிவிடுவார். 

உத்தன்பித்தத்தின் மனைவி தினமும் ஒரு ரொட்டியை சுட்டு கில்கமேக்ஷ் முன்பு 
வைத்து விடுவார். கில்கமேக்ஷ் கண்முழித்ததும் தன் முன்னே ஏழு ரொட்டிகள் 
இருப்பது பார்த்து ‘இப்படி தூங்கிவிட்டேனே’ என்று வருந்துகிறான். 

உத்தன்பித்தம் உடனே பரிதாபமாகி “கில்கமேக்ஷ் கொஞ்ச தூரம் கடலில் போனது. 
கடலுக்கு அடியில் இருக்கும் ரோஜா பூவின் செடியை சாப்பிட்டால் நீ இறப்பு 
இல்லாத வாழ்வை அடையலாம் “ என்பார். 

கில்கமேக்ஷ் அதை தின்பதற்கு பெரு முயற்சி செய்யும் போது அதை ஒரு 
நீர்பாம்பு தின்று கில்கமேக்ஷின் லட்சியத்தின் மேல் மண்ணைப் போட்டு 
விடுகிறது. 

இப்படியாக மனிதனாய் பிறந்தால் இறந்தே தீரவேண்டும் என்ற உண்மையை 
கில்கமேக்ஷ் கண்டு கொள்கிறான். 

மறுபடி தன்னுடைய நாடான உருக் திரும்பி, நாட்டை சீர்திருத்தி நன்றாக 
ஆண்டு, மிக நல்ல மன்னனாக உயிர் துறக்கிறான். 

இப்போது நான் கொடுத்தது மிகச் சின்ன கதை சுருக்கம் மட்டுமே... 

டாக்டர் எஸ்.தியாகராஜா எழுதிய ‘கில்கமேக்ஷ் காவியம்” என்ற புத்தகத்தில் 
படித்தை மிக மிக சுருக்கமாக எழுதியிருக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...