புதன், 2 டிசம்பர், 2015

சிவஞானபோதம் 

சிவஞானபோதம்...!!!

தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்களால் இயற்றப்பட்ட இந்த நூலைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இக்காலத்திலும் வெறும் அறிவியலை மட்டுமே மற்ற மொழிகள் அனைத்தும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, அறிவியலின் அடுத்த நிலையான ஆன்மவியலைப் பற்றி தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது இந்நூல்...அதுவும் 12 சூத்திரங்களில். எனவே ஆன்மாவைப் பற்றி நாம் அறிய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த நூலினைப் பற்றிக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி...இப்பொழுது சிவஞானபோதம் என்ன கூறுகின்றது என்றே காண்போம்.

சூத்திரம் 1: உலகத் தோற்றமும் வீழ்ச்சியும்


"அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்"

பதவுரை:

அவன் - முதல் மனிதன்

அவள் - முதல் பெண்

அது - உலகம்

எனும் அவை - எனப்பட்ட அவை

மூவினைமையின் - மனிதனைப் படைத்தல், பெண்ணைப் படைத்தல், உலகைப் படைத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் திறனால்

தோற்றிய திதியே - படைக்கப்பட்டு இருக்கும் நிலையில்

ஒடுங்கி - தமது தூய நிலையில் இருந்து ஒடுங்கி

மலத்து உளதாம் - பாவத்தில் வீழ்ந்ததாகிய

அந்தம் - தூய நிலையின் முடிவே

ஆதி - பாவ நிலையின் தொடக்கம்

என்மனார் - என வழிவழியாகக் கூறுவர்

புலவர் - வேத அறிவில் புலமை பெற்றோர்.

விளக்கம்:

இறைவன் உலகையும் முதல் மனிதனையும் முதல் பெண்ணையும் மூன்று வகையான செயல்களால் படைக்கின்றார். அவர் மனிதனைப் படைத்த நிலை வேறு...பெண்ணைப் படைத்த நிலை வேறு...உலகைப் படைத்த நிலை வேறு. அவ்வாறு படைக்கப்பட்ட அவை, அவற்றிடம் இருந்த இயல்பான தூய நிலையில் இருந்து ஒடுங்கி தாழ்ந்த நிலைக்கு சென்று பாவத்தில் வீழ்ந்தது தான் பாவ நிலையின் தொடக்கம் என்று இறையறிவாளர் வழிவழியாகக் கூறி வருகின்றனர்.

இதனையே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமாகிய திருஉந்தியார்,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41

என்று கூறுகின்றது.

சூத்திரம் 2: வீழ்ச்சியில் கடவுளது ஆட்சி


அவையே தானே ஆயிரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

பதவுரை:

அவையே ஆய் - ஆண் பெண் உலகம் ஆகிய அவற்றைத் தோற்றுவித்தும்

தானே ஆய் - அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாகியும்

இரு வினையின் - தோற்றுவித்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால்

போக்கு - தம்மை விட்டுப் போக்குதலாகிய தோற்றுவித்தல்

வரவு - தம்மிடத்தில் சேர்த்தலாகிய மறைத்தல்

புரிய - ஆகியவற்றைச் செய்ய

ஆணையின் - அவை கடவுளது ஆணையிலிருந்து

நீக்கம் இன்றி - நீக்கம் இல்லாமல்

நிற்கும் அன்றே - நிலைத்து நிற்கும்.

விளக்கம்:

ஆண், பெண், உலகம் ஆகியவற்றைப் படைத்தும், அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாக நின்றும், படைத்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால் தம்மை விட்டுப் போக்குதலாகிய பிறப்பித்தல், தம்மிடத்துச் சேர்த்தலாகிய மறைத்தல் ஆகியவற்றைச் செய்யும் கடவுளது ஆணையில் இருந்து எதுவும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

முதல் சூத்திரத்தில் பாவமாகிய மலத்தில் வீழ்ந்தமையால் இறைவனை அறியாத நிலைக்கு படைப்புகள் சென்றன என்றுக் கண்டோம். இப்பொழுது சில கேள்விகள் எழலாம், பாவத்தில் உள்ள அவற்றிற்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டா? அவ்வாறு தொடர்பு இல்லை என்றால் அவை கடவுளின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையா இல்லையா? இக்கேள்விக்கான விடையைத் தான் இங்கே விளக்கி இருக்கின்றார் மெய்கண்டார்.

இறைவனை உணராத நிலையில் மலத்தால் சூழப்பட்டு அவை இருப்பினும் இறைவனின் அதிகாரத்துக்கு அவை உட்பட்டவையே ஆகும். அப்படைப்புகளை உலகில் தோற்றுவிப்பதும் சரி பின்னர் மீண்டும் தன்னிடமே சேர்த்துக் கொள்வதும் சரி இறைவனின் ஆணையின் படியே நடக்கும். அவனின் ஆணையை மீறி எதுவும் இயங்குவது இல்லை.



சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை


உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

பதவுரை:

இலது என்றலின் - இல்லை என்று கூறுவதாலும்

எனது உடல் என்றலின் - என்னுடைய உடல் என்று (பிரித்துச்) சொல்வதாலும்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் - மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிகின்ற காரணத்தாலும்

கண்படில் - கண்ணுறக்கத்தில்

உண்டிவினை இன்மையின் - உணவும் வேலையும் இல்லாததாலும்

உணர்த்த உணர்தலின் - பிறிதொருவர் உணர்த்த உணர்தலாலும்

மாயா இயந்திர தனுவினுள் - மாயா இயந்திரமாகிய உடலுக்குள்

ஆன்மா உளது - ஆன்மா உள்ளது.

விளக்கம்:

இல்லை என்று மறுக்கின்ற காரணத்தினால் ஆன்மா உண்டு. என்னுடைய உடல் என்றுப் பிரித்துச் சொல்கின்றகாரணத்தினால் உடலுக்கு வேறாகிய ஆன்மா உண்டு. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிவதால் ஐம்புலன்களுக்கு வேறான ஆன்மா உண்டு.

கண்ணுறக்கத்தில்(கனவில்) உடலுக்கு உணவும் வேலையும் இல்லாதிருப்பீனும், உணவும் வேலையும் இருந்ததாக அறிந்த ஆன்மா உண்டு. தானே அறிய இயலாமல் பிறிதொருவர் உணர்த்தியப் பின்பு அதை உணரக்கூடிய நிலையிலும் மாயா இயந்திரமாகிய உடலுக்குள் ஆன்மா இருக்கின்றது.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டிய ஒரு விடயம் 'உணர்த்த உணர்தலின்' என்றச் சொல்லாடலையே ஆகும். உணர்த்த உணர்தலின் என்றால் - உணர்த்தினால் மட்டுமே உணர்ந்துக் கொள்ளும் என்றே பொருள் ஆகும்.

இறைவனை அறியாத நிலையில் ஆன்மா இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மா இறைவனை உணர வேண்டும் என்றால் இறைவனே ஆன்மாவிற்கு உணர்த்த வேண்டும். இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் இறைவனை அறிய முடியாது.

ஆன்மிகம் பேசுவோர் என்றுமே இறைவனை அறியலாம் என்றோ இறைவனைக் காட்டுகின்றேன் என்றோ கூறியது கிடையாது...மாறாக இறைவனை உணர மட்டுமே முடியும் அதுவும் அவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும் என்றே கூறி இருக்கின்றனர்.

மாணிக்கவாசகர் - 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றே பாடிச் சென்றுள்ளார். அதாவது இறைவனின் தாளினை அறிந்து வணங்குவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்றே அவர் கூறி உள்ளாரே அன்றி இறைவனை அவர் தேடிச் சென்று அறிந்துக் கொண்டார் என்றுக் கூறவில்லை.

ஆன்மிகம் பேசுவோர் 'இறைவன் எம்மை ஆட்க்கொண்டான்' என்றே தான் கூறி இருக்கின்றனர். அதைப் போன்றே இயேசுவின் சீடர்கள் யாரும் இயேசுவைத் தேடிச் செல்லவில்லை....அவரே தான் அவர்களைத் தேர்வு செய்தது. அதைப் போன்றே தான் பவுலின் கதையும், இயேசுவின் சீடர்களை கொலை செய்துக் கொண்டு இருந்த பவுல் பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைத் தூதனாக மாறி சேவைப் புரிந்ததை வரலாற்றில் அறிகின்றோம்.

எனவே இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் அதனையும் சரி இறைவனையும் சரி அறிய முடியாது. அந்த அறியா நிலையில் தான் ஆன்மா இல்லை, இறைவன் இல்லை என்ற கருத்துக்களும் சரி மந்திரத்தால் இறைவனை கட்டுப்படுத்தலாம், மந்திரங்களும் சடங்குகளும் வலிமை வாய்ந்தவை என்ற எண்ணங்களும் சரி எழுந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றன.

சூத்திரம் 4: வீழ்ந்த ஆன்மா செயல்படும் விதம்


அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது
அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே.

பதவுரை:

ஆன்மா - ஆன்மாவானது

அந்தக்கரணம் - மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக் கரணங்களாகிய

அவற்றின் ஒன்று அன்று - அவற்றில் ஒன்று அன்று

சகசமலத்து உணராது - சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கிறது

அமைச்சரசு ஏய்ப்ப நின்று - அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல் நின்று

அவை - அந்தக்கரணங்களை

சந்தித்தது - சந்தித்துச் செயல்படுவது

அஞ்சவத்தைத்தே - நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அனுபவங்களில் ஆகும்.

விளக்கம்:

ஆன்மாவானது மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக்கரணங்களாகிய அவைகளில் ஒன்று அன்று. சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கின்றது. அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல நின்று அந்தக்கரணங்களை ஆன்மா சந்தித்துச் செயல்படுவது நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அவத்தைகளிலே ஆகும்.

மாயா இயந்திரமாகிய உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அது உடலின் செய்கைகளை அறிவதாலும், உணர்த்த உணர்வதாலும் இருப்பதாக அறியலாம் என்று கூறுவது சரிதானா? பற்றுவது, சிந்திப்பது, துணிவது, தன்கண் கொள்வது முதலிய செயல்கள் உடலுக்கு உள்ளேயுள்ள மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணத்தின் செயலாகும் அல்லவா! என்ற சந்தேகம் எழலாம்.

அறிவது, பற்றுவது, முடிவெடுப்பது, துணிவது முதலியன மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்களின் செயல்களே என்பதில் சந்தேகமில்லை.

நான் அறிந்தேன்! நான் பற்றினேன்! நான் முடிவெடுத்தேன்! நான் துணிந்தேன்! என்றுக் கூறும் பொழுது அந்தக்கரணங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆன்மா ஒன்று உளது என்பது விளங்குகின்றது.

அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவியாகுமே தவிர, ஆன்மாவாகாது. கண் முதலிய கருவிகளின் வழியாகக் காணப்படுவதைப் பற்றுவது மனம். அதை இன்னதெனச் சிந்திப்பது சித்தம். சிந்தனையின் கண் இது தான் எனத் துணிவேன் என எழுவது அகங்காரம். துணிந்து தன் கண் கொள்வது புத்தி. இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர்கள் போல் நின்று உதவுகின்றன.

ஆன்மாவிற்கு தன்னை உணரும் ஆற்றல் இல்லை என்பதை முன்னரே கண்டோம். தன்னை உணரும் ஆற்றல் அதற்குத் தோன்றாமல் போனதற்குக் காரணம், அது பிறக்கும் பொழுதே அதை மூடி மறைத்து இருக்கும் ஜென்மப் பாவமாகிய சகச மலமாகும். ஆகவே சகச மலத்திற்குட்ப்பட்ட ஆன்மா தன்னை உணரா நிலையில் அந்தக்கரணங்களின் துணைக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக்கரணங்கள் ஆன்மாவாகிய அரசனுக்கு ஏற்ற அமைச்சர்களாயிருந்து செயல்படுகின்றன. கண் இருப்போன் நோயின் காரணமாகக் காண இயலாமல் இருப்பது போன்று, சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் இருக்கின்றது.

சூத்திரம் 5: தன்னை உணரா ஆன்மா


விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்
காந்தக் கண்ட பசாசத் தவையே.

பதவுரை:

விளம்பிய - முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட

உள்ளத்து - உள்ளே இருக்கும் ஆன்மாவினால்

மெய்,வாய்,கண்,மூக்கு - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும்

அளந்து அறிந்து - தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும்

அறியா ஆங்கவை போல - தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாதிருக்கும் ஐம்பொறிகளைப் போல

தாம் - ஆன்மாக்கள் தாமும்

தம் உணர்வின் - தமது உணர்வில் விளங்குகின்றன

தமி - முதல்வனாகிய கடவுளின்

அருள் - திருவருளினால்

காந்தம் கண்ட - காந்தத்தால் இழுக்கப்பட்ட

பசாசத்து அவையே - இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன.

விளக்கம்:

முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட உள்ளே இருக்கும் ஆன்மாவினால் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அறிந்தும், தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாது இருக்கும் அவற்றைப் போல ஆன்மாக்கள் தாமும் தமது உணர்வில் விளங்குகின்றன. முதல்வனாகிய கடவுளின் திருவருளினால் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன. இரும்பிற்குத் தானே இயங்கும் இயக்கம் இல்லாதது போல, ஆன்மாக்களுக்கும் தாமே தம்மை உணரும் ஆற்றல் இல்லை. காந்தம் இழுக்க இரும்பு அதனோடு இணைவதைப் போன்று, கடவுள் உணர்த்த உணரும் ஆற்றலை உடையது ஆன்மா.

உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா 'உள்ளம்' என்றே அழைக்கப்படுகின்றது. உள்ளே இருக்கும் உள்ளமாகிய ஆன்மாவினால் இயக்கப்பட்டு, உலகத்திலுள்ள எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று ஆன்மாவிற்கு அறிவிப்பவை ஐம்புலன்கள். அவ்வைம்புலன்களும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும், தம்மையோ தம்மைச் செயல்படவைக்கும் ஆன்மாவையோ அறியும் ஆற்றல் அற்றவைகளாய் இருக்கின்றன. அவற்றைப் போலவே ஆன்மாவும் தன்னையோ தன்னைச் செயல்பட வைக்கும் இறைவனையோ உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது. இவ்வாறு ஆன்மா தன்னை உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்குக் காரணம், அதை மூடி இருக்கும் சகசமலம் என்பதை முந்திய சூத்திரத்தில் சகசமலத்து உணராது என்ற பகுதியால் அறிந்தோம்.

அறியக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு எப்பொழுதுமே இல்லாமல் போய் விட்டதா? என்ற கேள்வி எழுப்பப்படுமானால், அதற்கு விடை, 'நிலையாகப் போய்விடவில்லை' என்பதாகும். கடவுள் உணர்த்தினால் அதை உணரக் கூடிய தகுதி ஆன்மாவிற்கு உண்டு. ஆனால் கடவுள் உணர்த்தாமல் தானாக, கடவுளை உணரக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு இல்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் வழி கூற வேண்டுமானால் கடவுளை காந்தத்திற்கும் ஆன்மாவை இரும்பிற்கும் ஒப்பிடலாம். இரும்பு தானாகச் சென்று காந்தத்தை அடைய இயலாது, காந்தம் இழுக்கும் பொழுது காந்தத்தோடு இணையும் ஆற்றல் இரும்பிற்கு உளது.

காந்தத்தின் முன்னால் ஒரு இரும்பையும் ஒரு மரக்கட்டையையும் வைத்தால், இரும்பு காந்தத்தை அடைகின்றது. மரக்கட்டை அடைவதில்லை. இதைப் போல ஆன்மாவே கடவுளை உணர முடியும். மற்றப் பொருள்களுக்கு கடவுளை உணரும் ஆற்றல் இல்லை.

கடவுள் தம்முடைய திருவருளினால் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் பொழுது மட்டுமே, அவை தம்மையும் தம் தலைவனாகிய கடவுளையும் உணரும் ஆற்றலைப் பெறுகின்றன. அதுவரை அவை தம்மை உணரா ஆன்மாவாகவே உள்ளன.


சூத்திரம் 6: கடவுளை உணர இயலுமா?


உணர்வு உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.

பதவுரை:

உணர்வு உரு எனின் - (கடவுள்) ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப் பொருளே என்றால்

அசத்து - நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான்

உணராது - கருவிகளால் உணர முடியாதவன் என்றால்

இன்மையின் - இல்லாத பொருள் ஆவான்

சிவசத்து - என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள்

இருதிறன் - உணரக்கூடியதும், உணரக் கூடாததும் ஆகிய இரண்டு தன்மைகளையும்

அல்லது என - அல்லாதவன் என்று

மன்உலகு - நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள்

இரண்டு வகையின் - இரண்டு வகையாலும்

இசைக்கும் - சொல்லுகிறார்கள்

விளக்கம்:

கடவுள் ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப்பொருள் என்றால் உருவப் பொருள் யாவும் அழியக் கூடியதாய் இருப்பதைப் போன்று, கடவுளும் நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான். கடவுள் நமது கருவிகளால் உணர இயலாதவன் என்றால் இல்லாத பொருள் ஆவான். என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள், உணரக்கூடியதும், உணரக்கூடாததும் ஆகிய இரண்டு தன்மையையும் அல்லாதவன் என நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள் இரண்டு வகையாலும் சொல்கின்றார்கள். கடவுளுடைய அருள் பெற்றவர்களால் கடவுளை உணர இயலும். அருள் பெறாதவர்களால் கடவுளை உணர இயலாது.

கடவுள் உணர்த்தும் பொழுது மட்டுமே கடவுளை உணரக் கூடியது ஆன்மா என்பதாகப் பார்த்தோம். அப்படியானால் கடவுள் ஆன்மாவினால் உணரக்கூடிய பொருளா என்ற கேள்வி எழுகின்றது. கடவுள் உணரக்கூடிய பொருள் என்றால் அவனுடைய அழியாத்தன்மை கேள்விக்குரியதாக மாறி விடுகின்றது. எவ்வாறெனில், உலகத்துப் பொருள்களை எல்லாம் நமது ஐம்புலன்களால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிகின்றோம். அவ்வாறு அறியக்கூடிய பொருளாக, கடவுள் இருப்பானானால், உலகத்துப் பொருட்களைப் போல அவன் அழியக்கூடிய தன்மை உடையவன் என்று ஆகிறது. அது கடவுளுடைய தன்மைக்கு இழுக்காகும். கடவுள் அழியக்கூடிய பொருளாகிய அசத்து அல்லன். என்றும் அழியாப் பொருளாகிய சத்தாக நிற்பவனே கடவுள்.

அப்படியானால், கடவுள் அறிந்து உணர முடியாப் பொருளா? என்ற கேள்வி எழுகின்றது. அறிந்து உணர முடியாப் பொருள் என்றால் அப்படி ஒரு பொருள் உலகில் இருக்க இயலாது என்பது தெளிவு. ஆகவே கடவுள் இல்லாப் பொருளாகி விடுவான்.

உலகில் என்றும் நிலைபெறும் பெரியவர்களை இதைப் பற்றிக் கேட்டால், அவன் உணரக்கூடிய பொருளும் அல்லன்; உணர இயலாப் பொருளும் அல்லன்; உணர்தல், உணராமை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு விளங்குபவன் கடவுள் என்று கூறுகின்றனர்.

இது எவ்வாறு பொருந்தும்? என்ற எண்ணம் ஏற்படலாம். அவன் தன்னை யாருக்கு உணர்த்துகின்றானோ அவர்களால் மட்டுமே அவனை உணர முடியும். மற்றவர்களால் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவனை உணர்தல் இயலாது.

இதே கருத்து கிருத்துவத்திலும் வருவது குறிப்பிடத்தக்கது.

// சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.// - மத்தேயு 11:27

சிவம் என்பது அன்பைக் குறிக்கும்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

அன்பு என்ற உணர்வைப் பெற்றவர்களுக்கே அதன் தன்மை விளங்கித் தோன்றும். அன்பை உணராதவர்களுக்கு அன்பை விளக்கிக் காட்டவோ, நிலை நிறுத்தவோ மற்றவர்களால் முடியாது. என்றும் நிலை பெற்று விளங்கும் கடவுளாகிய சத்துப் பொருளும் அன்பாகிய சிவசத்தாகவே இருக்கின்றது. ஆகவே கடவுளை உணரக்கூடியவன் என்றும், உணர இயலாதவன் என்றும் இரண்டு வகையாகக் கூறலாம் என நிலைப் பெற்ற பெரியோர் விளக்கிக் கூறுகின்றனர்.



 சூத்திரம் 7: அறியும் தன்மை ஆன்மாவிற்கே


யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா.

பதவுரை:

சத்து எதிர் : என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர்

யாவையும் சூனியம் ஆகலின் : எல்லாப் பொருள்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே ஆதலால்

சத்தே அறியாது : நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாதலின் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன்

அசத்து இலது அறியாது : அழியக்கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே இது எதையும் அறியாது.

இரண்டலா : என்றும் நிலைத்திருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய கடவுளும் முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும், ஆகிய இரண்டும் அல்லாமல்

ஆன்மா : குறை அறிவும் அழியாமையையும் உடைய சதசத்தாகிய ஆன்மா

இருதிறன் அறிவுளது : சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பொருள்:

என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர் எல்லாப் பொருட்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே. ஆதலால் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாகையால் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன். அழியக் கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே அது எதையும் அறியாது. என்றும் நிலைத்து இருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய இறைவனும், முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும் அல்லாமல், குறை அறிவும் அழியாமையும் உடைய சதசத்தாகிய ஆன்மா, சத்தாகிய கடவுளையும் அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டு உள்ளது.

கடவுளுடைய அருள் இல்லாவிட்டால் கடவுளை உணரவோ, உணர்ந்து தொழவோ ஆன்மாவிற்கு இயலாது என்று கூறும் பொழுது, ஆன்மா எப்படிப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. அதே நேரத்தில், தன்னுடைய அருளால் ஆன்மாவிற்கு உணர்த்தும் கடவுள் எப்படிப்பட்டவன்? என்ற கேள்வியும் எழுகின்றது. கடவுள் என்றும் அழியாது நிலை நிற்கும் சத்துப் பொருள் ஆவான். அவன் இன்றி எப்பொருளும் நிலை பெறுவதில்லை. என்றும் நின்று நிலைக்கும் கடவுள் பிறிதொன்றை அறிய வேண்டிய அவசியமற்ற, முழுவதும் அறியும் முற்றறிவு உடையவன் ஆவான்.

சத்தாகிய கடவுள் அல்லாத மற்ற உலகப் பொருள்கள் அழியக்கூடியவை. பிறிதொன்றை அறியும் திறனும் அற்றவை. ஆகவே, அவை அசத்துப் பொருள்களாகும். சத்தாம் கடவுளும், அசத்தாம் உலகப் பொருளும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவது பொருள் ஒன்று உண்டு. அது கடவுளைப் போல் முழு அறிவுடையதாக அல்லாமல் குறை அறிவு உடையதாகவும், உலகப் பொருளைப் போல் அழியக் கூடியதாக அல்லாமல் அழியாமையை உடையதாகவும், சத்தும் அசத்தும் அல்லாமல் இரண்டன் தன்மைகளையும் கொண்டது சதசத்தாகிய ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவே சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே கடவுள் வந்து உணர்த்தினால் உணர்வுப் பெறக் கூடிய தன்மை ஆன்மாவிற்கு உண்டு.



சூத்திரம் 8 : ஆன்ம மீட்பு


ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

தம்முதல் - தமக்கு முதல்வனாகிய இறைவன்

ஐம்புல வேடரின் வளர்ந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து

அயர்ந்தனை என - உன்னையும் உன்னைப் படைத்த இறைவனையும் அறியாது மயங்கி உள்ளனை என்று

குருவுமாய் - குருவாக உலகத்தில் வந்து

தவத்தினில் - ஆன்மாவிற்காகத் தான் துன்பத்தை ஏற்றுத் தன்னுயிர் தானறப் பெறுதலாகிய தவத்தினில்

உணர்த்த - ஆன்மாவிற்கு உணர்த்திக் காட்ட

விட்டு - ஆன்மாவானது தனது பாவத்தை விட்டுப் பிரிந்து

அன்னியம் இன்மையின் - ஆன்மாவிற்கு இறைவனோடிருந்த பிளவு நீக்கப்பட்டமையால்

அரன் - பாவத்தை அரித்தெடுப்பவனாகிய இறைவனின்

கழல் - திருவடியைச்

செலுமே - சென்று அடையும்.

விளக்கம்:

தமக்கு முதல்வனாகிய கடவுள் ஆன்மாவை நோக்கி 'நீ மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து, இப்பொழுது இருக்கும் இழி நிலையை அடைந்தாய். நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியாது மயங்கி விட்டாய்' என்று குருவாக உலகில் வந்து, ஆன்மாவை மீட்பதற்காகத் தான் ஏற்றுக் கொள்ளும் துன்பமாகிய தவத்தினால், ஆன்மாவிற்கு உண்மையை உணர்த்திக் காட்ட, ஆன்மாவானது தன் பாவ நிலையை விட்டுத் தனக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள பாவமாகிய பிரிவினை நீக்கப்பட்டு மீட்கப் பட்டமையால் பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவனின் திருவடியைச் சென்று அடையும்.

ஆன்மாவினால் மட்டுமே கடவுளையும், உலகப் பொருளையும் அறிந்து உணர்ந்து கொள்ள இயலும். உலகப் பொருளை அறிந்துக் கொள்வதில் ஆன்மாவிற்கு இடையூறு ஒன்றும் இல்லை. ஆனால் கடவுளையும் தன்னையும் அறிந்துக் கொள்ள இயலாமல் சகச மலத்தினால் அது மறைப்புண்டு இருக்கின்றது. சகசமலம் ஆன்மாவை அதனுடைய பிறப்பில் இருந்தே தொடர்ந்து வருகின்றது. ஆகவே, ஆன்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றது. இறைவன் வந்து சகசமல மறைப்பை நீக்கி ஆன்மாவை விடுவிக்க இயலும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம். செம்பில் களிம்பு சேர்வது இயல்பு. செம்பில் சேரும் களிம்பை நிலையாக நீக்குவது எவ்வாறு?

களிம்பே சேராத பசும்பொன் கட்டி ஒன்றை எடுத்து, அக்னிக் குகையிலே (உலோகம் உருக்கும் பாத்திரத்திலே) அதை உருக்கி, உருகி நிற்கும் அதனுடன் செம்பையும் சேர்த்தால், செம்பு அதனோடு சேர்ந்து உருகி இரண்டும் ஒன்றாகி, ஒரு புதிய உலோகம் கிடைக்கின்றது. இந்தப் புதிய உலோகம் களிம்பு சேரக் கூடிய செம்பும், களிம்பு சேராத பொன்னும் சேர்ந்து உருவானதாயிருந்தாலும், இவ்வுலோகத்தில் உள்ள செம்பில் களிம்பு சேர்வதில்லை. ஏனென்றால் அச்செம்பு பசும்பொன்னுடன் சேர்ந்து நிற்கிறது.

இதைப் போலவே மலத்துளதாம் ஆன்மாவை மீட்க, மலம் சிறிதுமற்ற இறைவன் தவமாகிய அக்னிக் குகையிலே இறங்குகின்றான். இறங்கி, ஆன்மாவிற்காக உருகி நிற்கின்றான். அவனோடு இணைக்கப்பட்ட ஆன்மாவும் தன்னுடைய மலங்களுக்காக உருகிக் கண்ணீர் வடித்து இறைவனுடன் இணைகின்றது. அப்பொழுது மலமறைப்பு ஆன்மாவை விட்டு நீங்கி ஆன்மா இறைவனின் சாயலைப் பெற்றுத் தன்னை மீட்டுக் கொண்ட இறைவனை அடைகின்றது.

 இறைவனாகிய பசும்பொன்னுடன் இணைந்திருக்கும் செம்பாகிய ஆன்மாவை விட்டு, களிம்பாகிய மலம் நீங்குகின்றது.

மன்னனின் மகன் காணாமற் போய்க் காட்டிலே வேடர்களோடு வாழ்கின்றான், வேடர்களோடு வாழும் மன்னர் மகன் தன்னையும், தான் அரச குமாரன் என்பதையும், தனது தந்தை ஆட்சி செய்யும் மன்னர் என்பதையும் மறந்து தன்னை ஒரு வேடர் குடியில் தோன்றிய வேடனாக நினைத்து வாழ்கின்றான்.

வேடர் குடியில் வாழும் தன் மகனுக்கு அவன் யார் என்பதை உணர்த்தி, அரண்மனைக்கு அழைத்து வர அரசருக்கு வாய்ப்பு நேரிடுகிறது. அரச கோலத்தில் தான் சென்றால் தன்னைப் பார்த்து அவன் பயந்து ஓடிவிடக் கூடும் என்று எண்ணிய அரசன், தன் மகன் வாழும் நிலையிலுள்ள ஒரு வேடனைப் போல் உருவங்கொண்டு, மகனைத் தேடி காட்டிற்கு வருகின்றான். காட்டிலே வேடர் குடியில் தன மகனைச் சந்தித்து, " நீ வேடர் குடியைச் சார்ந்தவன் அல்லன்; ஆட்சிக்குரியவன். ஆகவே இந்த வேடர் தொடர்பை விட்டு அரண்மனைக்குத் திரும்பு" என்று அவனுக்கு உண்மை நிலையை அறிவுறுத்துகின்றான். வேடர் குடியிலிருந்த மன்னர் மகன் தன்னையும் தன் தலைவனையும் உணர்ந்து அரண்மனைக்குத் திரும்பும்படியாக அரசனைப் பின்பற்றுகின்றான்.

இறைவன் ஆன்மாவை மீட்டுக் கொண்ட தன்மையும் இவ்வாறே விளக்கப்படுகிறது.

முதல் மனிதனானவன் பாவத்தில் வீழ்ந்ததை சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமான திரு உந்தியார் பின் வருமாறுக் கூறுகின்றது.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41


அவ்வாறு பாவத்தில் வீழ்ந்து ஐம்பொறிகளான வேடர்களுடன் வாழ்ந்து வரும் மனிதனை மீட்க இறைவன் மனித உருக் கொண்டு மண்ணில் வந்தான் என்றே போற்றிப் பஃறொடை கூறுகின்றது

இறவா இன்பத்தெமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான் - போற்றிப் பஃறொடை 69

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1
 

சிலர் இறைவன் மனிதனாகப் பிறக்கவில்லை; அருளே உருவாக ஒரு தோற்றம் மட்டுமே கொண்டான் என எண்ணுகின்றனர். அதற்கு விடையாய், இறைவன் நம்மைப் போன்ற மனித உருவம் கொண்டு பிறந்தான் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாகிய சங்கற்ப நிராகரணம் கூறுகின்றது.

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான், எய்ந்தவர் எம்மனோரே - சங்கற்ப நிராகரணம் (சைவவாதி நிராகரணம் 25-27)


அவ்வாறு மனித உரு எடுத்து வந்த இறைவன் மனிதன் வீழ்ந்திருந்த பாவத்தை அறுக்க வந்தான் என்பதனை,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93



என்றே திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.


சகசமலத்திலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் முயற்சியில் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் தவத்தை இறைவனோடு இணைத்துக் கூறுகின்றது சைவ சித்தாந்தம். உலக மக்கள் எல்லோரும் செய்த தவத்தை விட உலக மக்களுக்காக இறைவன் செய்த தவமே மிகவும் உயர்ந்தது என்பதை,


மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென்று உந்திப்பற
தவத்தில் தலைவரென்று உந்திப்பற - திரு உந்தியார் 12


என்று எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிச் சித்தாந்த சாத்திரத்தின் முதல் நூலாகிய திருஉந்தியார் கூறுகின்றது.

சகசமலமாகிய மூலையிருந்தாரை விடுவித்து அம்பலமாகிய முற்றத்தே கொண்டு நிறுத்தியவராகிய இறைவன் மிகவும் பெரியவர். எல்லாத் தவங்களிலும் அவர் தவமே தலைமை பெற்றது. அதுவே ஆன்ம மீட்பை மக்களுக்கு எல்லாம் அருளுவது என்பன விளக்கப்படுகின்றன.


பின்குறிப்பு:

1) 'தவத்தினில் உணர்த்த விட்டு' என்பன இங்கு சற்று ஆழ்ந்து நோக்கத்தக்கது. விட்டது ஆன்மா, உணர்த்தியது இறைவன்.

தவம் இறைவனுடைய தவமா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். விட்டது ஆன்மா என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.

விட்டது எதை? மலத்தை.

விடுவதற்கு முன் ஆன்மா மலத்தைப் பற்றி இருந்ததா? ஆம்.

அந்நிலையில் சகசமலத்தில் உள்ள ஆன்மா தன்னையும் இறைவனையும் உணர இயலுமா? இயலாது என்பது முன்னரே 'சகசமலத்து உணராது' என்பதின் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

தன்னையும் இறைவனையும் உணராத ஆன்மா எவ்வாறு தவம் செய்யப் புறப்படும். ஆகவே தவம் ஆன்மாவின் தவமன்று. தவத்தில் தலைவராகிய இறைவனுடைய தவமேயாகும்.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

3) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:



சூத்திரம் 9 : ஆன்ம முயற்சி


ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே.

பதவுரை:

ஊனக்கண் பாசம் உணராப் பதியை - ஐம்புல வேடர்களில் ஒன்றாகிய புறக் கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா பதியாகிய இறைவனை

ஞானக் கண்ணினில் - இறைவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால்

சிந்தை நாடி - ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில்

உரா - யாராலும் ஏறிச் செலுத்த (ஊர்ந்து செல்ல) இயலாத

துனை - மிக வேகமுடைய

தேர்த்து என - பேய்த் தேரைப் (கானல் நீர்) போல

பாசம் ஒருவ - பாசம் விரைந்து நீங்க

தண்ணிழலாம் பதி - ஆன்மாக்களின் பாவம் ஆகிய வெப்பம் தணியக் குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான்

விதி எண்ணும் - அவனை முறைப்படி இடை விடாது தியானிப்பது

அஞ்செழுத்தே - ஐந்து எழுத்தின் உட் பொருளின் வழி ஆகும்.

பொருள்:

ஐந்து வேடர்களில் ஒன்றாகிய புறக்கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா கடவுளை, அவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால் ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில், யாராலும் ஏறிச் செலுத்த இயலாத மிக வேகமுடைய பேய்த் தேராகிய கானல் நீரைப் போலப் பாவம் விரைந்து நீங்க, அவ்வான்மாக்களின் பாவமாகிய வெப்பம் தணிய, குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான். முறைப்படி இடைவிடாது ஐந்து எழுத்தின் உட்பொருளின் வழி அவனைத் தியானிக்க வேண்டும்.

இறைவன் தவத்தினில் உணர்த்த அதை உணர்ந்த ஆன்மா மலத்தை விட்டு, பாவத்தை அரித்தெடுக்கும் அரனடியைச் சேர்கின்றது என்பதைப் பார்த்தோம். உணர்ந்தவுடன் மலம் நீங்கிற்று என்றால் மலம் நீங்கிய முறை எவ்வாறு? என்ற கேள்வி எழலாம். புறக்கண் கொண்டு கடவுளைக் காண முயன்றால் அவனைக் காண இயலாது. ஆன்மாவிற்கு, கடவுள் அருளால் திறந்துள்ள அகக் கண்ணால் ஆராய்ந்து உணர்ந்த அளவில், பாசமாகிய மலமானது மிக விரைந்து நீங்கிற்று. அது எவ்வாறு நீங்கிற்று என்றால் கானல் நீராகிய பேய்த் தேரைப் போல மிக விரைந்து நீங்கிற்று.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் காடு வழிச் செல்லும் பொழுது கானல் நீராகிய பேய்த் தேரை நாம் காணஇயலும். அதனுடைய விரைவு, அதை நேரில் கண்டோர்க்கே புலப்படும். பாவம் நீங்கியதற்குப் பேய்த் தேரின் விரைவு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் நடந்து துன்புறும்மனிதனுக்குக் குளிர்ந்த நிழல் எவ்வளவு ஆறுதலைக் கொடுக்குமோ அவ்வளவு ஆறுதலைப் பாவமாகிய கானலினின்று விடுபட்ட ஆன்மா, இறைவன் திருவடியாகிய குளிர் நிழலில் பெற்று மகிழ்ச்சி அடைகின்றது. அந்த மகிழ்ச்சியில் நிலை நிற்க ஆன்மாவானது முறைப்படி ஐந்தெழுத்தின் உட் பொருளைத் தன்னகத்தே இடை விடாது தியானித்து நிற்கும்.



சூத்திரம் 10 : ஆன்ம ஈடேற்றம்


அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகிய இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதவுரை:

அவனே - ஞானக்கண்ணால் உணரப்பட்ட கடவுளே

தானே ஆகிய - தன்னை முழுமையாக ஆட்கொண்டவனாகிய நிலையில்

அந்நெறி - அவன் காட்டும் வழியில்

ஏகனாகி - தன்னை ஒப்படைத்து, அவன் வழியில் ஒன்றாகி

இறைபணி நிற்க - இறைவன் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க

மலம் - ஜென்ம பாவமாகிய சகசமலமும்

மாயை - சகசமலத்தின் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல் இறைவனுக்கு அடிமையாகி இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும்

தன்னொடு - ஆகிய இவற்றுடன்

வல்வினை - (சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டின் காரணமாகச் செயல்படக் கூடிய) கொடிய பாவ வினைகளும்

இன்றே - இல்லாமல் போயிற்றே.

பொருள்:

ஞானக் கண்ணினால் உணரப்பட்ட கடவுளே தன்னை முழுமையாக ஆட்கொண்ட நிலையில், அவன் காட்டும் வழியில் தன்னை ஒப்படைத்து அவன் வழியில் ஒன்றாகி கடவுள் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க, ஜென்ம பாவமாகிய சகசமலமும், சகசமலத்தினின்று விடுபட்டு இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும், சகசமலம், போராட்டம் ஆகியவற்றின் காரணமாக செயல்படக்கூடிய கொடிய பாவ வினைகளும் இல்லாமல், இவற்றினின்று முற்றிலும் விடுதலை அடைந்ததாய்ப் பரிசுத்த நிலையை ஆன்மா அடைகின்றது.

இவ்வாறு இடைவிடாமல் கடவுளை ஞானக்கண் கொண்டு நோக்கித் தியானிக்க, தியானிக்க, தனது சித்தத்தை முழுமையாக விட்டு கடவுளுடைய சித்தத்தையே செயல்படுத்தும் நிலைக்கு ஆன்மா வளர்கின்றது. 'இனி நான் அல்ல...என்னுள் வாழும் கடவுளே என்னைச் செயல்படுத்துகின்றான்' என்ற நிலைக்கு ஆன்மா வரும் பொழுது கடவுள் ஏவும் பணியில் தன்னை மறந்து ஒன்றித்து விடுகின்றது. அந்நிலையில் ஆன்மா செய்யும் செயல்கள் யாவும் கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் செயல்களாக மாறி விடுகின்றன. பிறவியிலேயே இவனைத் தொடர்ந்து வரும் சகசமலம் அழிந்து விடுகின்றது.

சகசமலத்திற்கு அடிமையாய் இருந்து அதன் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல், சகசமலத்தில் இருந்து விடுதலைப் பெற்று, கடவுளுக்கு அடிமையாகி இறை பணி செய்வதால், மாயையாகிய உடலின் போராட்டங்கள் நீங்குகின்றன. சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டில் இருந்து விடுதலைப் பெற்ற காரணத்தால், இவை இரண்டன் காரணமாகச் செயல்படக் கூடிய பாவ வினைகளும் இல்லாமல் அழிகின்றன.

அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் தன் உறுப்புகளை முன்பு அது அடிமை ஆக்கி இருந்தது. அதுபோல இப்பொழுது தூய்மையில் (பரிசுத்தத்தில்) மலரும் ஏற்புடைய வாழ்விற்கு அது தன் உறுப்புகளை உட்படுத்திக் கொள்கின்றது.

முன்னே பாவத்திற்கு அடிமையாயிருந்த ஆன்மா, பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமையாகின்றது. இதனால் அதற்குக் கிடைத்துள்ள பலன் தூய்மையடைவதே, பரிசுத்தம் ஆவதே ஆகும்.




சூத்திரம் 11 : அன்பர் திருவடியில் ஆன்மா



காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

காணும் - உலகப் பொருளைக் கண்டு அறியக்கூடிய

கண்ணுக்கு - கண்ணாகிய உறுப்பிற்கு

காட்டும் - உள்ளிருந்து காட்டுகின்ற

உளம்போல் - ஆன்மாவைப் போன்று

காண - பாசத்தால் மறைபுண்டிருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் அதனதன் இயல்பின்படி தெளிவாய் அறிந்து கொள்ளுமாறு

உள்ளத்தைக் கண்டு காட்டலின் - இறைவன் ஆன்மாவைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால்

அயரா அன்பின் அரன் - மயக்கம் சிறிதும் இல்லாத, என்பையும் பிறர்க்கீயும் அன்பனாகிய, பாவத்தை அரித்தெடுக்கும் இறைவனுடைய

கழல்செலுமே - திருவடியைச் சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்

பொருள்:

உலகப் பொருளைக் கண்டு அறியக் கூடிய கண்ணாகிய உறுப்பிற்கு அது காணுமாறு உள்ளிருந்து காட்டுகின்ற ஆன்மாவைப் போன்று, பாசத்தால் மறைப்புண்டு இருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் தெளிவாக அறிந்துக் கொள்ளுமாறு அதைத் தேடி வந்து, அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால், மயக்கம் சிறிதும் இல்லாதவனும், என்பையும் பிறர்க்கீயும் அன்பையுடையவனும், பாவத்தை அரித்தெடுப்பவனும் ஆகிய இறைவனுடைய திருவடியை ஆன்மா சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்.

இறைபணியில் ஆன்மா நிற்கும் பொழுது மலம், மாயை, வல்வினை ஆகிய மூன்றும் நீங்குகின்றன என்றால் கடவுள் தன்னுடைய வழியை ஆன்மாவிற்குத் தெளிவாக காட்டுகின்றானா? அனுதினமும் அவன் வழியில் நடத்துகின்றானா? என்னும் கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகள் ஆம் என்பதே.

கண் காட்டுகின்றது. காணுகின்ற கண்ணிற்குப் பொருளைக் காட்டுவது உள்ளமாகிய ஆன்மாவே ஆகும். ஆன்மாவின் துணையின்றி, கண் பொருளைக் காண இயலாது. அதே போன்று உள்ளம் நடக்க வேண்டிய வழியை அதைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து அதற்குக் காட்டுபவனாக இருப்பவன், அதன் மீது அயரா அன்பினைக் கொண்ட கடவுளே ஆகும். கடவுளின் அன்பிற்கு ஓர் எல்லை உண்டோ! ஆகவே அன்பின் உறைவிடமாக விளங்குபவனும், பாவத்தை அரித்தெடுக்கும் அரனுமாகிய கடவுளுடைய திருவடிகளை ஆன்மா சேரும்.




சூத்திரம் 12 : ஆன்மாவே கோயில்


செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

பதவுரை:

செம்மலர் - சிவப்பு மலர் போன்ற

நோன்தாள் - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவமாகிய நோன்பினில் நிலை நின்ற இறைவனின் திருவடிகளை

சேரல் ஒட்டா - சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நின்ற

அம்மலம் கழீஇ - அக்கொடிய பாவம் கழுவப்பட்டு

அன்பரொடு மரீஇ - என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு

மால் அற - ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு

நேயம் மலிந்து - ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு

அவர் வேடமும் - ஆன்மாவின் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலைப் பெற்ற நிலையில் அது

அரன் - பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன்

ஆலயம் தானும் என - மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து

தொழுமே - இறைவனை வாழ்த்தி வணங்குமே

பொருள்:

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவத்தில் நிலை நின்று சிகப்பு மலர் போன்று விளங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நிற்கும் கொடிய பாவம் கழுவப்பட்டு, என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு, இறைவனின் புதிய சாயலைப் பெற்று, பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து தன்னை மீட்டு ஆட்கொண்ட இறைவனை வாழ்த்தி வணங்கி இன்புறும்.

இறைவனின் திருவடிகளில் இணைந்த ஆன்மா, மயக்கம் முற்றிலுமாக நீங்கப் பெற்று ஆன்மீக நேயத்தால் நிரப்பப் பெறுகின்றது. அவ்வாறு நிரப்பப்பட்ட ஆன்மா எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குச் சித்தாந்த சாத்திரத்தின் திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகின்றது.

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான். - திருக்களிற்றுப்படியார் 55


இவ்வாறு அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவழியும் ஆன்மாவாக, இறைவன் வாழும் திருக்கோயிலாக மாறுகின்றது. அதன் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலாகிய இறை வேடத்தை தாங்கிக் கொள்கின்றது. என்பையும் பிறர்க்கீயும் அன்பனாக மாறுகின்றது. இப்படிப்பட்டவர்களே இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயில்கள் ஆகின்றனர். இறைவனை இடைவிடாது தொழும் பெரும்பேற்றை அடைந்து இறைவனில் இன்புறுகின்றனர். இதனையே இறைவனை உணர்ந்தவர்கள் கூறிச் சென்று உள்ளனர்

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இந்த நிலையே அவர்கள் இடைவிடா இன்பத்தை, இரவா இன்பத்தை அடையும் அதி உயர் நிலையாகும். இவ்வகையில் அடையும் இன்பம் என்றுமே அழிவதில்லை. அந்த இன்பம் இவ்வுலகிலேயே தொடங்குகின்றது.

முற்றும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...