செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-10



பிள்ளை ஆர் யார் - 
பிள்ளையார்...!!!
சிவன் பார்வதியின் மூத்தப் பிள்ளை. இறைவனின் பிள்ளை ஆன இவர் தமிழால் மரியாதைக்குரிய 'ஆர்' விகுதிப் பெற்று பிள்ளையார் ஆகின்றார்.
அதாவது தமிழில் எவ்வாறு 'ன்' என்பது ஆணைக் குறிக்கும் விகுதியாக இருக்கின்றதோ அதே போல் 'ஆர்' விகுதி என்பது ஒருவரை மரியாதையாக குறிக்க பயன்படுகின்றது...
தந்தை + ஆர் - தந்தையார்.
தாய் + ஆர் - தாயார்.
அதேப்போல் இறைவனின் பிள்ளை என்ற சிறப்பு காரணத்தால் அந்தப் பிள்ளைக்கு 'ஆர்' விகுதி வழங்கப்பட்டு அவர் பிள்ளையார் ஆகின்றார்.
பிள்ளை + ஆர் - பிள்ளையார்.
சரி இலக்கணம் போதும். இனி நாம் விநாயகரின் கதைக்கு வருவோம்.
புராணங்களின்படி விநாயகர் பார்வதியால் அவர் உடலில் இருந்த அழுக்கினைக் கொண்டு மனித உருவில் உருவாக்கப்படுகின்றார். பின்னர் ஒரு கட்டத்தில் சிவனை இவர் பார்வதியின் பொருட்டு எதிர்க்க வேண்டி வர சிவனால் தலை வெட்டப்பட்டு வீழ்கின்றார். அதனைக் கண்டு வருந்திய பார்வதி கடுஞ் சினம் கொண்டு தேவர்களுக்கு எதிராக எழ, பார்வதியின் சினத்தினை நீக்க ஒரு யானையின் தலையை விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு மீண்டும் சிவன் உயிர் தருகின்றார். மேலும் இனி என்னை நோக்கி வருபவர் யாராக இருந்தாலும் உன்னைக் கண்ட பின் தான் என்னைக் காண முடியும் என்ற வரமும் விநாயகருக்கு சிவன் வழங்குவதாக புராணம் நீள்கின்றது.நிற்க.
மேலே உள்ள கதையின் படி தனது தந்தையின் கையாலேயே மரணமுற்று பின் மீண்டும் தன் தந்தையாலேயே உயிர் பெறுகின்றார் பிள்ளையார். அதாவது அவரின் மரணமும் உயிர்த்தெழுதலும் அவரின் தந்தையினாலேயே நிகழ்கின்றது. இப்பொழுது நாம் இதைப் போன்ற கதைகள் அதாவது ஒரு கடவுள் இறந்து மீண்டும் உயிர்தெழுந்த கதை உலகில் வேறு எங்காவாது இருக்கின்றதா என்று நோக்கினால், ஆம் இருக்கின்றது என்பதே பதிலாக வருகின்றது.
அந்தக் கதையின் நாயகர் - இயேசு கிருத்து. இவரும் இவரின் தந்தையின் ஆணைப்படியே பலியாகி பின் மீண்டும் தன் தந்தையின் அருளாலேயே உயிர் பெற்று எழுவதாக இவரின் கதை நீள்கின்றது.
அதாவது இரண்டு பேருமே கடவுளின் பிள்ளைகள். இருவருமே தங்களது தந்தையால் மரணத்தை தழுவுகிறார்கள். பின்னர் மீண்டும் தங்கள் தந்தையின் அருளாலே உயிர்த்து எழுகின்றார்கள்.
ம்ம்ம்...ஆச்சர்யமான ஒற்றுமை தான். ஆனால் இருவரும் ஒருவர் தான் என்று நாம் கருத இந்த ஒரு ஒற்றுமை நிச்சயம் பற்றாது. எனவே வேறு ஏதாவது ஆதாரங்கள்...ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்று நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. இந்நிலையில் தான் அவ்வை பாட்டியார் நம்முடைய துணைக்கு வருகின்றார் அவரின் விநாயகர் அகவல் நூலினை ஏந்திக் கொண்டு.
இதோ அவரின் நூலில் உள்ள ஒரு பாடல்.
"குருவடி வாகிக் குவலயந் தன்னில்
  திருவடி வைத்துத் திறமிது பொருளென
  வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
  கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே"
இந்தப் பாடல் மூலம் அவ்வையார் விநாயகரை 'குருவாக இந்த உலகில் பிறந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களின் பாவத்தினை கோடு ஆயுதத்தால் நீக்கினார்' என்று கூறுகின்றார். ஆச்சர்யமாக இதுவும் இயேசு கிருத்துவின் கதையோடு பொருந்துகின்றது.
இயேசுவின் கதைப்படி அவர் மக்களின் பாவத்தினைப் போக்க இவ்வுலகில் பிறந்து பின்னர் அவர்களுக்காக உயிர் துறந்து மக்களின் பாவத்தினை களைந்தார். மேலே அவ்வையாரும் இதைப் போன்ற ஒரு விடயத்தையே கூறுகின்றார். அதுவும் கோடு ஆயுதத்தின் மூலம் மக்களின் பாவத்தினை போக்கினார் என்றும் கூறி இருக்கின்றார். அது என்ன கோடு ஆயுதம்... ஆய்வாளர்களின் கூற்றினைக் காண்போம்.
சிலுவையில் அறைந்து மக்களைக் கொள்வது என்பது ரோமர்களின் பழக்கம். இப்பழக்கம் இந்தியாவில் கிடையாது.
சிலுவைகளில் மக்களைப் பலியிடும் பழக்கம் இந்தியாவில் என்றுமே இருந்தது கிடையாது. எனவே சிலுவையைப் பற்றி இங்கே மக்கள் அதிகம் அறிந்து இருக்க வாய்ப்பு கிடையாது. எனவே தான் சிலுவையை (அது கோடுகளின் வடிவமாகத் தானே இருக்கின்றது) கோடு ஆயுதம் என்றே அவ்வை குறித்து இருக்கின்றார் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எனவே இயேசு மக்களின் பாவம் நீக்க சிலுவையில் பலியானதையே விநாயகர் அகவலில் அவ்வையார் அவ்வாறு விநாயகரை வைத்து குறிப்பிட்டு இருக்கின்றார் என்று நாம் கருத முடிகின்றது என்பது ஆய்வாளர்களின் கருத்து.
ம்ம்ம்... இரண்டு கதைகளும் ஒத்து தான் போகின்றன. ஆனால் இதோடு நாம் நின்று விடாத படி மேலும் சில விடயங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
உதாரணத்துக்கு விநாயகரின் புராணக் கதையிலே அவர் பார்வதியின் உடலில் இருக்கும் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டு உள்ளது. இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது. உலகினையே படைத்த அன்னையானவள் அவளின் அன்புப் புதல்வனை அவள் உடலின் அழுக்கினைக் கொண்டா உருவாக்குவாள்? வேறு வழியே பார்வதி தேவிக்கு இருந்து இருக்காதா என்ன என்ற கேள்வி இயல்பாக எழும் தானே. ஆச்சர்யமாக இந்தக் கேள்விக்கு பதில் விவிலியத்தில் இருந்து வருகின்றது.
"நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்." - II கொரியந்தியர் (5 : 21)
மேலே உள்ள வரியின்படி இறைவன் மனிதர்கள் யாவரும் நேர்மையுள்ளவர்களாக மாற ஒரு பாவமும் அறியாத அவரின் பிள்ளையை மனிதர்களுக்காக பாவம் ஆக்கினார் என்று இருக்கின்றது. அதாவது மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் அவர்களுக்காக இறைவனின் மகன் சுமப்பதாக விவிலியம் விவரிக்கின்றது. இதையே தான் நம்முடைய புராணக் கதையும் மறைமுகமாக பிள்ளையார் பார்வதியால் அழுக்கினை வைத்து உருவாக்கப்பட்டதாக கூறுகின்றது.
மேலும் விவிலியத்தில் 'என் வழியாகவே இறைவனை அடையலாம்' என்று இயேசு கூறுவதாக வருகின்றது. இங்கு நம் புராணங்களிலும் விநாயகரை வழிப்பட்ட பின்பு தான் தன்னிடம் வர முடியும் என்று சிவன் கூறியதாக இருக்கின்றது.
இவ்வளவு ஒற்றுமைகள் எதேச்சையாக தோன்றி இருக்குமா? அல்லது உண்மையிலையே நம்முடைய புராணக் கதைகளுக்கு உள் அர்த்தங்கள் வேறு இருக்கின்றனவா... நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது.
சரி...விநாயகர் தான் இயேசு என்றால் பின்னர் எதற்காக யானைத் தலையுடன் அவர் காட்சி அளிக்கின்றார் என்ற கேள்வியும் இங்கே எழும்பலாம். இந்தக் கேள்விக்கான விடைக்கும் நாம் மீண்டும் இயேசுவை காண வேண்டி இருக்கின்றது.
இயேசு உயிர் துறக்கும் வரை இருந்த நிலை வேறு. சாதாரண மனிதனாக அவர் இருந்தார்.
உயிர் பெற்று எழுந்தப் பின்பு இருந்த நிலை வேறு. தெய்வத் தன்மையுடன் அவர் திகழ்கின்றார். இந்த இரண்டுத் தன்மைகளுக்கும் வேற்றுமைகள் உண்டு.
அந்த வேற்றுமைகளை வெளிப்படுத்தவே,
உயிருடன் இருந்த விநாயகர் - மனித வடிவாகவும்
இறந்து உயிர்தெழுந்த பின் - யானைத் தலையுடனும் இருக்கின்றார்.
அதாவது இறக்கும் முன் அவர் இருந்த நிலை வேறு...இறந்து மீண்டும் உயிர் பெற்ற பின்பு அவர் இருந்த நிலை வேறு. இதனையே புராணக் கதைகள் மூலம் நம் முன்னோர்கள் விலகிச் சென்று உள்ளனர். ஆனால் காலப்போக்கில் அந்தப் புராணக் கதைகளுக்கு வேறு அர்த்தங்கள் கற்ப்பிக்கப்பட்டு அவை நிலை தாழ்த்தப்பட்டன என்பது சோகமான வரலாறு.
சரி அந்த கதை இப்பொழுது நமக்குத் தேவை இல்லை. இப்பொழுது நாம் இயேசுவே விநாயகராக நம்முடைய மண்ணில் குறிக்கப்பட்டு இருக்கலாம் என்று பார்த்தோம். இறைவனின் ஒரு பிள்ளையை பார்த்தாயிற்று. இன்னும் மூன்று பேர் மீதம் உள்ளனர். காண்போம்.
முருகா... குமரா ... வேலவா !!!
பி.கு:
விநாயகரைக் குறித்த தகவல்கள் எந்த சங்க இலக்கியங்களிலும் சரி இயேசுவுக்கு முந்தைய கால நூல்களிலும் சரி கிடைக்கப் படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. மேலும் இதுவரை கி.பி 5 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் விநாயகரின் சிலைகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது...
கபாலீசுவரர் கோவில்...!!!
சைவ சமயத்தின் முதல் கோவில் என்ற பெருமையுடன் இன்று மயிலையில் நின்று கொண்டு இருக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கோவில். ஆனால் நாம் முந்தையப் பதிவுகளில் பார்த்தபடி இக்கோவில் ஆரம்பத்தில் இருந்தே மயிலையில் இருந்து இருக்கவில்லை மாறாக இன்றைய சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் தான் இக்கோவில் இருந்தது என்றும் கி.பி 16 நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த போர்துகேசியர்களால் இந்த கோவில் இடிக்கப்பட்டு பின்னர் இன்று இருக்கும்  மயிலையில் மீண்டும் கட்டப்பட்டு உள்ளது என்று அறிகின்றோம்.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.
௧) ஏன் போர்துகீசியர்கள் இக்கோவிலை இடிக்க வேண்டும். அவர்களுக்கு தேவாலயம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்றால் வேறு இடமா கிடைக்கவில்லை?
இக்கேள்விக்கு விடையாய் நமக்கு வரலாறு தரும் பதில் - தோமாவின் கல்லறை. ஆம். தோமாவின் கல்லறையின் மேல் கபாலீசுவரர் கோவில் கோவில் கட்டப்பட்டு இருந்தமையால், ஒரு கிருத்துவ துறவியின் கல்லறையின் மேலே வேறு சமயத்தினரின் கோவில் இருப்பதா என்று எண்ணியே அவர்கள் இக்கோவிலை இடித்து வேறு இடத்தில் கட்டுகின்றனர். பதிலாக அந்த கிருத்துவ துறவியினை சிறப்பிக்க ஒரு தேவாலயத்தினையும் கட்டுகின்றனர். அது தான் இன்றைய சாந்தோம் தேவாலயம்.
சரி...இப்பொழுது நம் முன் இருக்கும் விடயங்களை சற்று உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கின்றது.
கபாலீசுவரர் கோவில் - சைவ சமயத்தின் முதல் கோவில். இதற்கு முந்தைய கோவில்கள் என்று எதுவும் கிடையாது.
தோமா - இயேசுவின் பன்னிரு சீடர்களுள் ஒருவர். கிருத்துவர்.
அப்படியிருக்க தோமாவை சிறப்பிக்க அவரின் கல்லறையின் மேல் முதல் சைவ சமயக் கோவிலை எழுப்பக் காரணம் என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழும். அதற்கு விடையாய் நாம் முந்தையப் பதிவுகளில் தோமா கிருத்துவின் கருத்துக்களை இந்தியா கொண்டு வந்தார் என்றும் அக்கருத்துக்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றும் அதனால் அவரை சிறப்பிக்கவே அக்கோவில் கட்டப்பட்டது என்பதை கண்டோம். ஆனால் அக்கருத்தினை நாம் சான்றுகள் இன்றி நிரூபிக்க முடியாது. காரணம் வேதங்களில் இருந்தே சைவமும் வைணவமும் தோன்றின என்றக் கருத்துக்கள் இன்று மக்களிடையே பரவி இருக்கின்றது. எனவே இப்பொழுது நாம் நம்முடைய கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றுக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் ஒரு கருத்தினை தெளிவாக நாம் கண்டுக் கொள்வது நல்லது.
வேதங்களில் கோவில் வழிபாட்டு முறை பற்றி எந்தொரு தகவலும் இல்லை. கோவில் வழிபாட்டு முறை வேத முறை அல்ல.(வேதங்களைப் பற்றி நாம் மற்றொரு பதிவில் விரிவாக காண்போம்).
சரி. இப்பொழுது நாம் சான்றுகளைத் தேடுவோம். அதற்கு நாம் முதலில் இயேசுவினைக் காண வேண்டி இருக்கின்றது.
இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இப்பொழுது நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அவர் எங்கு வைத்து சிலுவையில் அறையப்பட்டார் என்பதே. வரலாற்றின் படி இயேசு கல்வாரி அல்லது கல்கொதா என்ற மலையில் வைத்தே கொல்லப்படுகின்றார். இங்கே நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு விடயம் என்னவென்றால் கல்வாரி அல்லது கல்கொதா என்றால் 'கபாலத்தின் இடம்' அல்லது 'கபாலம் இருக்கும் இடம்' என்றே பொருள் தருவது தான். மேலும் விவிலியத்தின் படியும் இந்தச் செய்தியினை நாம் அறிகின்றோம்.
" கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது," - மத்தேயு 27 :33
"கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்." - லூக்கா 23 : 33
எனவே கபாலம் போன்றுக் காணப்படும் மலையில் இயேசு கிருத்து உயிர் துறந்தார் என்று நாம் அறிகின்றோம். ஒரு வேளை இந்த செய்தியின் மூலமாகவே முதல் சைவ சமயத்தின் கோவிலுக்கு கபாலீசுவரர் கோவில் என்று பெயர் வந்து இருக்கலாமா?
ம்ம்ம்... செல்லாது செல்லாது!!! கபாலம் அப்படின்னு பெயர் ஒற்றுமை மட்டும் இருந்தால் போதுமா...அத வச்சி என்னனாலும் சொல்லலாமா என்று சொல்லுகின்றீர்களா. சரி தான். மேலும் கபாலம் என்ற சொல் பொருந்தி வந்தாலும். ஈசுவரன் என்ற பெயர் இடிக்கின்றதே. இக்கோவில் இயேசுவினைக் குறிக்க கட்டப்பட்ட ஒன்று என்றால் ஈசுவரனுக்கும் இயேசுவுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. நல்ல வேளை நம்முடைய இந்த கேள்விக்கு நீண்ட காலம் பதிலினைத் தேட வைக்காது விடையினை அதோ நம்முடைய மகாகவி பாரதியார் அவர்களே கொண்டு வந்துக் கொண்டு இருக்கின்றார்.
"ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்;
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேச மா மரிய மக்தலேனா
நேரிலே இந்த செய்தியைக் கண்டாள்;
தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;" - என்று இயேசுவினைப் பற்றிய தனது கவிதையில் குறிப்பிடுகின்றார்.
அதாவது இயேசுவினைக் குறிக்க ஈசன் என்ற சொல்லை பயன்படுத்தி இருக்கின்றார். ஏன் பாரதி அவ்வாறு குறிப்பிடுகின்றார் என்று கண்டால், எபிரேயத்தில் 'ஜோசுவா' என்று இருக்கும் பெயர் ஆங்கிலத்தில் 'ஜீசஸ்' என்றும் அரபியில் 'ஈசா' என்றும் ஒலித் திரிபு பெற்று இறுதியில் தமிழில் ஈசன் என்றும் இயேசு என்றும் ஒழி மாற்றம் பெற்று வந்து இருக்கின்றது என்று மொழி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எபிரேயம் - ஜோசுவா
ஆங்கிலம் - ஜீசஸ்
அரபி - ஈசா
தமிழ் - ஈசன்/இயேசு
அவர்கள் கூற்றுக்கு உறுதுணையாய் இருப்பது போல ஈசன் என்ற பெயர் கிருத்துவுக்கு முந்தைய காலத்தில் எங்கும் பயன்பட்டு இருக்கவில்லை.
எனவே ஈசன் என்ற சொல் இயேசுவினைக் குறிக்கும் என்றால் கபால மலையில் உயிர் துறந்து பின்னர் மக்களுக்காக உயிர்தெழுந்த வந்த இயேசுவினையும் (ஈசன்) சிறப்பித்து 'கபாலீசுவரன் கோவில்' கட்டப்பட்டது என்றும் நாம் கருத முடிகின்றது.
அட ஒரு பக்கத்து கதையை மட்டும் கேட்டு தீர்ப்பு எழுதுனா எப்படிங்க...இந்து சமயத்தின் கருத்தையும் கேளுங்கள்...அதையும் பார்த்து தானே நாம் முடிவு செய்ய முடியும் என்று கூறுகின்றீர்களா... சரி தான். இப்பொழுது இந்து சமயம் கூறும் கதையினைக் காண்போம்.
புராணங்களின் படி சிவனும் பார்வதியும் ஒன்றாய் இருந்த பொழுது அதை பிரமன் கண்டுக்கொண்டே இருந்தாராம். அதைக் கண்டு சிவன் சினமுற்று பிரமனின் ஒரு தலையைக் கொய்து விட்டாராம். அதற்கு பரிகாரமாக பிரமன் இவ்விடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூசைகள் செய்து சிவனின் கோபத்தை தனித்தாராம். இது தான் புராணத்து கதை. இன்னும் பல கதைகள் இருக்கின்றன. ஆனால் பிரமனின் கபாலத்தினை ஈசுவரன் கொய்ததால் கபாலீசுவரன் கோவில் என்று இக்கோவில் பெயர் பெற்றது என்பதே முக்கியமான புராணக் கதை. இப்பொழுது இந்தக் கதையினை ஆராய்வோம்.
சென்ற பதிவுகளில் பிரமன் பெருமாளின் மகன் என்பதனைக் கண்டோம். மேலும் சைவ வைணவத் தத்துவங்களின் படி சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான்.
நில்லுங்கள் நில்லுங்கள்...சிவனும் விஷ்ணுவும் ஒன்றா... என்று கேட்பவர்களுக்கு இதோ முதல் ஆழ்வார்களுள் ஒருவரான பேயாழ்வாரின் பாடல்.
"தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து."
இப்பாடல் மூலம் சிவனும் விஷ்ணுவும் ஒன்று தான் என்பது தெளிவாகின்றது. எனவே இந்நிலையில் பிரமன் சிவனுக்கும் மகனாகின்றார். எனவே புராணக் கதையின் படி தன் தந்தை தன் தாயுடன் இருப்பதை பிரமன் காண்பதாக வருகின்றது (இப்படி எல்லாம் இருந்தா பெரியார் என்ன சின்ன குழந்தை கூட பிரமனை கல் எடுத்து அடிக்கும்...அடிக்கணும்). இப்பொழுது இது கடவுளுக்கு பொருந்திய செயலா என்று நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது. நிச்சயம் இல்லை. இக்கதை இறைவனுக்கு சிறப்பினை அளிப்பதாக இல்லை. ஆனால் இக்கதை முதலில் இவ்வாறு இருக்க வில்லை என்றும் பின்னரே மாற்றப்பட்டது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கருத்துப்படி தந்தை இறைவன் தன்னுடைய மகனின் சாவுக்கு காரணமாக இருக்கின்றார். ஆனால் மகனோ இறந்தாலும் மீண்டும் உயிர்தெழுந்து வருகின்றார். இதை உணர்த்தவே பிரமன் சிவன் அவர்களை வைத்து இந்தக் கதை கூறப்பட்டதாகவும். பின்னர் கதைகள் மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதை சற்று விரிவாக பார்ப்போம்.
பிரமன் - சிவனின் பிள்ளை. இவர் படைப்புக் கடவுளாக கூறப்பட்டு உள்ளார். உயிர்களின் படைப்புக்கு இவரே காரணம். ஆனால் அதிசயத்தக்க விதத்தில் இவ்விடயம் கிருத்துவுடனும் ஒத்து போகின்றது.
விவிலியத்தில் படைப்புக்கு காரணமாக இயேசுவே கூறப்பட்டு உள்ளார்.
"சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" - யோவான் 1 : 3
ஆய்வாளர்களின் கருத்துப்படி இயேசுவினாலையே படைப்புகள் தோன்றின என்பதை உணர்த்தவே பிரமன் என்ற உருவகம் தோற்றுவிக்கப்பட்டது. சரி இப்பொழுது மீண்டும் கதைக்கு வருவோம்.
சிவன் தன் மகனாகிய பிரமனின் தலையை கொய்கின்றார். பொதுவாக ஒருவரின் தலையைக் கொய்தால் அவர் மரணம் அடைவார். ஆனால் இங்கே பிரமன் மரணம் அடையவில்லை. காரணம் அவருக்கு வேறு தலைகள் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. எனவே அவர் உயிர் பிழைத்து இருக்கின்றார்.
எனவே சிவனால் மரணமடைய வேண்டிய பிரமன் மரணம் அடைய வேண்டிய நிலை வந்தும் உயிர் கொண்டு இருக்கின்றான். அதாவது சாவை வென்று இருக்கின்றான். இயேசுவைப் போல....இயேசுவாக!!! இந்தக் கதை தான் பிற்காலத்தில் பலவாறாக திரிபு படுத்தப்பட்டு உள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
எனவே மரணம் அடைய வேண்டிய கடவுள் தன் தந்தையின் அருளால் மரணத்தை வென்று உயிர்தெழுந்த விடயத்தை சிறப்பிக்கவே கபாலீசுவரர் கோவில் கட்டப்பட்டது என்ற கருத்தினையே இந்துக் புராணமும் கூறுகின்றதை நாம் அறிகின்றோம். சுருக்கமாக கூற வேண்டின் இயேசுவின் கதையையே பிரமனை வைத்து கூறப்பட்டு இருக்கும் புராணமும் கூறுகின்றது.
எனவே இயேசுவின் கருத்துக்களை இந்தியாவுக்கு கொண்டு வந்த தோமாவின் கல்லறையில் அவரைச் சிறப்பிக்க அவரின் செய்திகளின் அடிப்படையில் அமைந்த சைவ சமயத்தின் முதல் கோவிலை கட்டுகின்றனர் மக்கள்.
ஆனால் காலப்போக்கில் சைவ வைணவ அர்த்தங்களும் மாற்றப்பட, கிருத்துவமும் மாற்றப்படுகின்றது. எனவே இரண்டும் தங்களின் ஒற்றுமைகளை மறந்து இரு வேறு சமயங்களாக தோன்றுகின்றன. இந்நிலையில் தான் போர்துகீசியர்கள் கபாலீசுவரர் கோவிலை இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தை கட்டுகின்றனர். இதுவே ஆய்வாளர்களின் கருத்து.
சரி சைவ சமயத்தின் முதல் கோவிலின் வரலாற்றினைக் கண்டாயிற்று. பிரமனையும் கண்டாயிற்று. எவ்வாறு அவை இயேசுவுடன் தொடர்பு படுத்தப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் கண்டு இருக்கோம். ஆனால் இன்னும் சில சந்தேகங்கள் இருக்கலாம். காரணம் வேதங்களில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றே நமக்கு கூறப்பட்டு உள்ளது. நாமும் அதைத் தான் நம்பிக் கொண்டு இருக்கின்றோம். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களை சற்று கண்டு கொண்டு வந்துவிட வேண்டி இருக்கின்றது.
சைவ வைணவ சமயங்கள் என்றால் என்ன? சைவ வைணவ சமயங்களுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா?
காண்போம்...!!!
வேதங்களும் சைவ வைணவமும் - 
வேதங்கள்!!!
இந்து சமயத்தின் அடிப்படை கருத்துக்களைக் கொண்டவை இவை என்று சிலரால் இன்று நம்பப்பட்டும் அவ்வாறே பரப்பப்பட்டும் இருப்பவை. நாம் முந்தைய பதிவுகளில் சைவ வைணவ சமயங்களே ஒன்றிணைக்கப்பட்டு இந்து சமயம் என்று வழங்கப்பெருகின்றன என்று கண்டோம். இந்நிலையில், அதாவது இந்து சமயத்தின் அடிப்படை வேதங்களே என்ற கருத்து நிலவும் பட்சத்தில் நாம் இந்த வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களின் அடிப்படை வேதங்களா... காண்போம்.
இன்று உங்களுக்கு பிடித்த கடவுள் யார் என்று மக்களிடம் கேள்விகள் கேட்டால் 'சிவன்,முருகன்,பிள்ளையார்,பெருமாள்,அம்மன்,இராமன்' போன்ற பெயர்கள் பதிலாக வருமே அன்றி 'இந்திரன்,வருணன்,அக்னி,வாயு,பிரசாசுபதி' போன்ற பெயர்கள் பதிலாக வரும் வாய்ப்புகள் மிக அரிது. இப்பொழுது நாம் இந்த கடவுளரின் பெயர்களைப் பற்றி பார்ப்போம்.
சிவன்,முருகன்,பெருமாள் போன்ற பெயர்கள் சைவ வைணவ சமயக் கடவுள்களின் பெயர்கள். இந்தப் பெயர்கள் எதுவும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்திரன்,வாயு,அக்னி போன்ற பெயர்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுள்களின் பெயர்கள். இக்கடவுள்களுக்கே வேதத்தில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அவ்வாறு வேதத்தில் சிறப்பிக்கப்பட்டு இருக்கும் இக்கடவுள்கள் சைவ வைணவ சமயங்களில் ஏதோ ஒரு மூலையில் இருப்பதையே நாம் இன்று காண முடிகின்றது. ஏன் இந்த மாற்றம்... வேதத்தில் இருந்தே சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றால் வேதம் போற்றிய இந்திரன்,வருணன் போன்ற கடவுள்களைத் தானே சைவ வைணவ சமயங்களும் போற்றி இருக்க வேண்டும் மாறாக வேறு தெய்வங்களை முதன்மைப்படுத்தி அச்சமயங்கள் விளங்கிக் கொண்டு இருப்பது ஏன்?
சரி பெயர்கள் மாறி உள்ளன. இருக்கட்டும். இப்பொழுது இன்னொரு விடயத்தினை நாம் காண வேண்டி இருக்கின்றது.
பலி வழிபாடு...!!!
வேதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள தெய்வங்கள் அனைவருக்கும் பலி இட்டு வணங்கும் முறையே காணப்படுகின்றது. இறைவனை கவர பலி தேவை என்பதே வேதக் கொள்கை. வேதங்கள் இக்கருத்துக்களையே கூறுகின்றன. சரி இப்பொழுது இந்த பலி இடும் பழக்கம் சைவ வைணவ சமயங்களில் காணப்படுகின்றனவா என்று கண்டால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது.
சிவன் கோவில்களிலோ அல்லது பெருமாள் கோவில்களிலோ பலி இடும் பழக்கம் கிடையாது. அங்கே பலிபீடங்கள் இருக்கின்றன அனால் பலி கிடையாது. இப்பழக்கமே முருகன் கோவிலிலும் சரி பிள்ளையார் கோவில்களிலும் சரி கடைப்பிடிக்கப்படுகின்றன. அதாவது இன்று பெருவாரியான மக்களால் வணங்கப்படும் தெய்வங்களுக்கு பலி இட்டு வணங்கும் வழிபாட்டு முறை இல்லை.
அட என்னங்க இன்றும் நம்முடைய ஊர்களில் அய்யனாருக்கும் சரி மற்ற குல தெய்வங்களுக்கும் சரி விலங்குகளை பலியிட்டு வழிபடும் பழக்கம் இருக்கின்றதே இதுக்கு என்ன சொல்றீங்க என்ற கேள்வி இப்பொழுது எழலாம். நியாயமான கேள்வி தான். இந்தக் கேள்விக்கு விடையினை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் மீண்டும் சைவ வைணவ சமயத்துக்கும் வேதங்களுக்கும் வரலாம்.
வேதங்கள் - பலி வழிபாட்டு முறையினை உடையவை.
சைவ வைணவ சமயங்களிலோ பலி கிடையாது. ஏன் இந்த வேறுபாடு என்று வினவின் நமக்கு இரு தரப்புகளிடம் இருந்து இரு வேறு பதில்கள் வருகின்றன. ஒரு தரப்பினர் வேதங்களை நம்பிகின்ற தரப்பினர். மற்றொருவர் கடவுள் நம்பிக்கை அற்ற தரப்பினர். இப்பொழுது அவர்கள் கூறும் கூற்றினைக் காண்போம். முதலில் வேதங்களை நம்பும் தரப்பினரின் கூற்றினைக் காண்போம்.
இவர்களின் கூற்றின் படி வேதங்களில் பலி வழிப்பாட்டு முறை இருந்தாலும் வேதாந்தங்களில் பலி மறுப்பு கோட்ப்பாடுகள் இருக்கின்றனவே. எனவே பலி மறுப்பும் வேதங்களின் கோட்பாடுகளே என்கின்றனர். ஆனால் இப்பொழுது நமக்கு சில கேள்விகள் எழுகின்றன... ஏன் இந்த திடீர் மாற்றம். வேதாந்தங்கள் வேதத்தின் அடிப்படையில் எழுந்தன என்றால் திடீர் என்று கோட்பாடுகளின் ஏன் மாற வேண்டும். பலி என்ற விடயம் ஒன்று தான் என்று இல்லை பல விடயங்கள் வேதங்களுக்கும் வேதாந்தங்களுக்கும் இடையே மாறுபடுகின்றன. வேதத்தில் இருக்கும் இயற்கை வழிபாட்டு முறை வேதாந்தத்தில் இல்லை மாறாக ஒரு கடவுள் வழிபாட்டு முறை காணப்படுகின்றது. மேலும் வேதத்தில் இல்லாத ஆன்மா, மனிதன் இறைவனை அடைய வழி போன்ற பல கருத்துக்கள் வேதாந்தத்தில் காணப்படுகின்றது. வேதத்திற்கும் வேதாந்தங்களுக்கும் ஏன் இந்த வேறுபாடு என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை. சைவ வைணவத்துக்கும் வேதத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காண நாம் வேதாந்தங்களை அணுகினால் கேள்வி வேதத்திற்கும் வேதாந்தத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் ஏன் என்ற நிலைக்கு சென்று விட்டது. இக்கேள்விக்கு விடை இதுவரை கிட்டாததால் நாம் இப்பொழுது மற்ற கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது.
அட கொஞ்சம் நில்லுங்க... வேதம் அப்படின்னு சொல்றீங்க சரி... அது தெரியும்... வேதாந்தங்கள் அப்படின்னு சொல்றீங்களே அப்படினா என்னனு சொல்லுங்க...அப்படினா தான படிக்குற எல்லாத்துக்கும் புரியும் அப்படின்னு கேட்குறீங்களா சரி தான்.
வேதாந்தங்கள் என்றச் சொல் - வேதா + அந்தங்கள் - அதாவது வேதத்தின் முடிவு பொருளைத் தருபவை என்று பொருள் தருவது. இதனை உபநிடங்கள் என்றும் வழங்குவர். இவை வேதங்களைத் தொடர்ந்து அவற்றை விளக்க எழுதப்பட்டவை. எழுதப்பட்டதின் காரணத்தை நாம் பின்னர் காண்போம். இப்பொழுது நாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூறும் கருத்தினைக் காண்போம்.
அவர்களின் கூற்று நம்மை சமண புத்த சமய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றது. நாம் முன்னரே அம்மதங்களைப் பற்றிக் கண்டு இருக்கின்றோம். அவை பலி மறுப்பு கோட்பாடு உடைய சமயங்கள். கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி பத்தாம் நூற்றாண்டு வரை இந்திய மண்ணில் நிலை பெற்று சிறந்து விளங்கிய சமயங்கள். அதுவும் அசோகரின் காலத்தில் கொடி கட்டி பறந்த சமயங்கள். அக்காலத்தில் மக்கள் பலர் இச் சமயக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு இருந்ததால் பலி இடும் பழக்கங்கள் சற்று நலிவடைந்து இருந்தன. சரி இப்பொழுது நாம் இவர்களின் கூற்றினைக் காண்போம்.
பலி வழிபாட்டினை உடைய மக்கள், பலி மறுப்பு சமயங்களான சமணத்திற்கும் புத்ததிற்கும் மக்களிடையே பெருகும் செல்வாக்கினைக் கண்டு, மக்களை தன் பால் இழுக்க பலி வழிப்பாட்டு முறையினை மாற்றி பலி இல்லா முறைகளை வகுத்துக் கொண்டனர். அவ்வாறு மாற்றி தங்களது செல்வாக்கையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக் கொண்டனர். எனவே தான் இன்றைய சைவ வைணவ சமயங்களில் பலி என்பது இல்லை. இதுவே அவர்களின் கருத்தாக இருக்கின்றது.
ம்ம்ம்...ஏற்றுக் கொள்ள கூடிய கருத்து தான். மக்கள் மத்தியில் ஒரு கருத்து வலு பெற்று வருகின்றது என்றால் அக்கருத்துகளை வைத்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்ளும் வழிகளை உருவாக்கிக் கொள்கின்றவர்களை நாம் இன்றளவிலும் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம். எனவே சமண புத்தக் கொள்கைகளை சேர்த்துக் கொண்டு வேதக் கருத்துக்கள் உருமாறி இருக்கலாம் என்ற இவர்களின் கண்ணோட்டத்தை நாம் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவர்களின் கூற்றிலேயும் ஒரு கேள்வி எழுகின்றது.
௧) சமண புத்த சமயங்கள் பலி மறுப்புச் சமயங்கள். ஆனால் சைவ வைணவச் சமயங்களோ பலி நிறைவேற்றச் சமயங்கள். அதாவது பலி நிறைவேறி விட்டது இனிமேல் பலி தேவை இல்லை என்ற கொள்கை உடைய சமயங்கள். எனவே தான் அக்கோவில்களில் பலிபீடங்கள் இருக்கின்றன ஆனால் பலி இல்லை. எனவே சமண புத்த சமயத்தில் இருந்து இந்தக் கொள்கையை (பலி இல்லா வழிபாடு) சைவமும் வைணவமும் பெற்று இருந்தன என்றால் இவற்றில் ஏன் இந்த வேறுபாடு என்றும் நாம் ஆராய வேண்டி இருக்கின்றது. இதனை நாம் பின்னர் காண்போம்.
சரி இப்பொழுது நாம் கண்ட வரை...
௧) வேதக் கடவுள்கள் சைவ வைணவத்தில் சிறு நிலையில் இருப்பதும், சைவ வைணவக் கடவுள்களை பற்றி வேதத்தில் குறிப்புகள் காணப்படாது இருப்பதும்
௨) பலி கோட்பாடுடைய வேதத்தில் இருந்து எவ்வாறு பலி இல்லா வழிப்பாட்டுடைய சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்ற கேள்விக்கு விடை இல்லா காரணத்தினாலும்
௩) வேதத்தில் காணப்படும் பல கடவுள் வழிப்பாடு முறை மற்றும் இயற்கை வழிப்பாட்டு முறை போன்றவை சைவ வைணவத்தில் காணப்படாதமையும்
௪) சைவ வைணவத்தில் இருக்கும் ஒரு மூலக் கடவுள் (சைவம் -சிவன், வைணவம்-விஷ்ணு) என்ற கோட்பாடு வேதத்தில் காணப்படாதமையும்
௫) சைவ வைணவ சமயத்தின் அடிப்படையான இறைக் குடும்ப வழிப்பாட்டு பழக்கமும், அவதாரக் கோட்பாடும் வேதத்தில் காணப்படாதமையும்
சைவமும் வைணவமும் வேதங்களில் இருந்து தோன்றிய சமயங்கள் அல்ல என்று நாம் கூறுவதற்கு வழி வகுக்கின்றன. சரி வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றவில்லை என்றால் அவை எவற்றில் இருந்து தோன்றின...பின்னர் வேதங்கள் என்றால் என்ன...அவற்றின் காலங்கள் என்ன? ஏன் வேதங்களில் இருந்து சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்கள் நிலவுகின்றன?
இக்கேள்விகளுக்கு நாம் விடையினை காண்போம்...!!!

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-9


கிருத்துவமும் இந்தியாவும் -
கி.பி 52...!!!
தூய தோமா இந்தியா வந்ததாக சொல்லப்படும் காலம்.
கிருத்துவின் கருத்துக்களைப் பரப்புவதற்காக கடல் கடந்து தமிழகத்தின் மேற்கு பகுதியை வந்தடைந்து, பின்னர் இந்திய தேசம் முழுவதும் தனது பணியை மேற்கொண்டு இறுதியில் தமிழகத்தில் மயிலையில் சிலரால் கி.பி 72 ஆம் ஆண்டில் கொல்லப்படுவதாக நீள்கிறது இவரது வரலாறு. இது தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுபவர்கள் கூறும் கூற்று.
இதனை மறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கின்றனர்.
"ரோம மன்னன் ஆகசுடசு காலத்து நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன சரி...இந்தியாவின் வட பகுதியில் கொண்டாபோரசு என்ற அரசன் ஆண்டான். அதுவும் சரி. ஆனால் இதை மட்டும் வைத்துக் கொண்டு தோமா இந்தியா வந்தார் என்றுக் கூறுவது எவ்வாறு சரியாகும். அசோகர் பௌத்தத்தை பரப்பினார் என்றால் அதற்கு சான்றாய் இந்தியா முழுவதும் பௌத்தக் கருத்துக்கள் காணப்படுகின்றன. அதைப் போலவே தோமாவும் கிருத்துவின் கருத்துக்களைப் பரப்ப வந்தார் என்றால் கிருத்துவின் கருத்துக்கள் இங்கே காணப்பட வேண்டுமே. அவ்வாறுக் காணப்பட்டால் தானே அவர் வந்தார்...சேவை செய்தார் என்றுக் கூற முடியும். அவ்வாறு சான்றுகள் இல்லாமல் எவ்வாறு தோமா இந்தியா வந்தார் என்று ஏற்றுக் கொள்ள முடியும்?" என்பதே அவர்களின் கூற்றாக இருக்கின்றது.
நியாயமான கேள்விதான். தோமா இந்தியா வந்து இருந்தால் கிருத்துவின் கருத்துக்களும் அவருடனே வந்து இருக்க வேண்டுமே. இந்தியாவினில் பரவி இருக்க வேண்டுமே. அவ்வாறு இருந்தால் தானே தோமா இந்தியா வந்தார் என்றுக் கூற முடியும்.
எனவே இப்பொழுது நாம் இந்தியாவில் தோமா கொண்டு வந்த கிருத்துவின் கருத்துக்களுக்கு சான்றுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை காண வேண்டி இருக்கின்றது.
முந்தைய பதிவுகளில் நாம் பார்த்தபடி சிலுவை கிருத்துவர்களின் சின்னம் அல்ல. மாறாக திருநீறே அவர்களின் சின்னம் என்று நாம் கண்டு இருந்தோம்.
இந்நிலையில் சில கேள்விகள் இயல்பாகவே எழலாம்...!
இந்துக்களும் திருநீற்றினை இடுகின்றார்கள்...அதே முறை தான் கிருத்துவத்திலும் இருக்கின்றது. ஏன் இந்த ஒற்றுமை? ஒரு வேளை இரண்டு மதங்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? இல்லையெனில் எதேச்சையாக வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் உருவான இரு மதங்களில் ஒரே மாதிரியான பழக்கம் தற்செயலாக உருவாகி இருக்குமோ?
இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் நமது இலக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.
கிருத்துக்கு முற்பட்ட காலத்து தமிழ் இலக்கியங்களிலும் சரி, சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று பெரும்பாலானோரால் நம்பப்படும் வேதங்களிலும் சரி திருநீற்றினைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. கிருத்துக்கு பிற்பட்ட தமிழ் இலக்கியங்களில் திருநீற்றினைப் பற்றிய செய்திகள் பல காணப்படுகின்றன ஆனால் கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் இது வரை திருநீரைக் குறிக்கும் செய்திகள் காணப்படவில்லை.
அதைப்போலவே சிவலிங்கத்துடன் நந்தி இணைந்து இருப்பது போல் உள்ள வழிப்பாட்டு முறையும் கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களிலும் சரி வேதங்களிலும் சரி காணப்படவில்லை. ஆனால் அத்தகைய வழிபாட்டு முறை விவிலியத்தில் குறிக்கப்பட்டு இருப்பதை நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்.
சிவலிங்கம்/கல் வழிபாட்டு முறை கிருத்துக்கு முந்தைய கால இலக்கியங்களில் பல கிடைத்தாலும் நந்தி/கன்றுக்குட்டி உடன் இருப்பது போன்ற வழிபாட்டு முறை கிருத்துக்கு பிந்தைய கால இலக்கியங்களிலேயே காணப்படுகின்றது.
இங்கே தான் நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள வழிபாட்டு முறைகள் இன்று சைவ வைணவ சமயங்களில் பழக்கத்தில் உள்ளன. ஆனால் சைவ வைணவ மதங்களின் அடிப்படை என்று கூறப்படும் வேதங்களிலோ அந்த வழிப்பாட்டு முறைகளைப் பற்றிய குறிப்புகளே இல்லை, மேலும் கிருத்துவுக்கு முற்பட்ட கால இலக்கியங்களில் அந்த பழக்க வழக்கங்கள் இந்தியாவினால் நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை கிட்டவில்லை.
அப்படி இருக்கையில் விவிலியத்தில் காணப்படும் அந்த பழக்க வழக்கங்கள் எவ்வாறு இந்திய சமயங்களில் காணப்படுகின்றன என்று அறிஞர்கள் ஆராயும் பொழுது தான் அந்த இணைப்பு அவர்களின் கண்ணுக்கு புலப்படுகின்றது.
அந்த இணைப்பு தான் - தோமா!!!
ஆம். தோமா இந்தியாவுக்கு வந்தார் என்று கூறப்படும் காலத்திற்கு பின்னரே மேலே நாம் கண்ட வழிபாட்டு முறைகள் பற்றிய குறிப்புகள் தமிழ் இலக்கியங்களிலே நமக்கு கிடைக்க பெறுகின்றன. அவை சைவ இலக்கியங்களாக இருக்கட்டும் வைணவ இலக்கியங்களாக இருக்கட்டும் அனைத்தும் தோமாவின் காலத்திற்கு பின்னரே உருவானவைகளாகவே இருக்கின்றன.
எனவே தோமா கொண்டு வந்த கருத்துக்களின் படி தான் மேலே நாம் கண்ட வழிபாட்டு பழக்க வழக்கங்கள் இந்தியாவினுள் தோற்றம் பெற்றன என்று நாம் கருத முடிகின்றது என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
அதாவது அவர்களின் கூற்றுப்படி தமிழர்களின் சிவலிங்க/கல் வழிபாடு தெற்கில் இருந்து சிந்து சமவெளியை அடைந்து பின்னர் மேற்கே சென்று யூதர்களின் பழக்கமாகவும் மாறுகின்றது. பின்னர் அதேப் பழக்கம் கிருத்துவுக்கு பின்னால் தனது மாறுபட்ட நிலையில் தோமாவின் வாயிலாக இந்தியா வந்தடைகின்றது...!
அவ்வாறு வந்த கருத்துக்களும் பழக்க வழக்கங்களும் தான் சைவ வைணவ சமயங்களாக வளர்ந்தன என்றும் அவர்கள் கருதுகின்றனர். நிற்க.
வில்லங்கமான கூற்று தான்....இல்லையா!!! ஆனால் இந்தக் கூற்றினை முற்றிலுமாக மறுக்கவும் முடியவில்லை ஏனெனில் அனைத்து சைவ வைணவ இலக்கியங்களும் சரி அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் சரி எல்லோரும் தோமா இந்தியாவுக்கு வந்த காலத்திற்கு பின்னரே தான் தோன்றி இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக முதல் ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என வழங்கப்படும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், காரைக்கால் அம்மையார் ஆகியோர் அனைவருமே தோமா மறைந்ததாக கூறப்படும் மயிலையை சுற்றி உள்ள இடத்தில இருந்தே தோன்றி உள்ளனர். மேலும் திருவள்ளுவரும் அதே காலத்தில் திருமயிலையில் தோன்றி இருப்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
இந்த தகவல்கள் அனைத்தும் வெறும் ஒற்றுமைகளாக இருக்கலாம் அல்லது ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக இருக்கலாம். அதனை அறிந்துக் கொள்ள நாம் கிருத்துவ மதத்தின் கொள்கையையும் காண வேண்டும்...சைவ வைணவ மதங்களின் கொள்கைகளையும் காண வேண்டும்.
காண்போம்...!!!
மூவொரு கடவுள் கோட்பாடு...!!!
கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவம். இதன்படி ஒரே கடவுள் மூன்று விதமான தன்மைகளில் தோன்றுகின்றார் என்று கிருத்துவம் கூறுகின்றது. இதனை சற்று விரிவாக பார்க்கலாம்.
கிருத்துவத்தின் படி ஒரே கடவுள் மூன்று வகையான நிலையில் இருக்கின்றார். அதாவது...
தந்தை நிலை - பரம பிதா.
பரிசுத்த ஆவி நிலை.
மகன் நிலை - இயேசு.
இதுவே கிருத்துவத்தின் அடிப்படைத் தத்துவம்.
மேலும் இறைவன் மனித வடிவில் மனிதர்களுக்காக வந்தார் என்ற அவதாரக் கோட்பாடும், பாவ மன்னிப்பு கோட்பாடும் கிருத்துவத்தின் மற்ற முக்கிய தத்துவங்களாகும். நிற்க.
இப்பொழுது நாம் கிருத்துவின் கருத்துக்கள் தான் சைவ வைணவ சமயங்களாக மாறி இருக்கின்றன என்று கூறினால் அச்சமயங்களில் கிருத்துவத்தின் அடிப்படை தத்துவங்களான மூவொருக் கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட வில்லை என்றால் சைவ வைணவ சமயங்கள் கிருத்துவ கருத்துக்களின் அடிப்படையில் எழுந்தவை என்ற கருத்து பொய்த்து விடும். எனவே இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களின் கோட்பாடுகளை கண்டு விட வேண்டிய தேவை இருக்கின்றது. சைவ வைணவ சமயங்களில் மூவொரு கடவுள் கோட்பாடும் மற்ற கோட்பாடுகளும் இருக்கின்றனவா...காண்போம்!!!
சைவ வைணவ சமயங்களைப் பற்றி நாம் அறிந்துக் கொள்வதற்கு முன்னர் ஒரு முக்கியமான விடயத்தை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆரம்ப காலத்தில் சைவம் மற்றும் வைணவம் என்ற மதங்கள் இரண்டாக பிரிந்து இருக்கவில்லை. இரண்டும் இணைந்து சைவம் என்றே இருந்தன. பிற்காலத்தில் தான் வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்து செல்கின்றது. இது வரலாறு.
சரி இப்பொழுது அந்த சமயங்களைப் பற்றி நாம் காண்போம்.
சைவம் - சிவனை முழுமுதல் கடவுளாக கொண்டது.
வைணவம் - பெருமாளை முழுமுதல் கடவுளாக கொண்டது.
இவ்விரு சமயங்களிலும் அவதாரக் கோட்பாடுகள் உள்ளன என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
வைணவத்தில் பெருமாளின் அவதாரங்களாக பத்து அவதாரங்கள் குறிக்கப்பட்டு உள்ளன. அதிலும் மனித உரு எடுத்து வந்த அவதாரங்களும் இருக்கின்றன.
அதே போல் சைவத்திலும் முருகன் மனித உரு எடுத்து உலகிற்கு வந்ததாக அவதாரக் கதைகளும் உள்ளன.
ஆனால் மீண்டும் இந்த அவதாரக் கதைகளுக்கான சான்றுகள் வேதங்களிலோ அல்லது கிருத்துக்கு முற்பட்ட கால இலக்கியங்களிலோ காணப்படவில்லை. சில கதைகள் உதாரணமாக இராமாயணக் கதைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்டாலும் அதற்குரிய சான்றுகள் இது வரை கிருத்துக்கு முற்பட்ட காலத்தில் காணப்படவில்லை என்பதே உண்மையான நிலையாக இருக்கின்றது. இதனைப் பற்றி நாம் பின்னர் தனி ஒரு பதிவில் காண்போம்.நிற்க.
இப்பொழுது நாம் சைவ வைணவ சமயங்களில் மூவொருமை கடவுள் கோட்பாடு இருக்கின்றதா என்று நாம் காண்போம்.
நாம் ஏற்கனவே மேலே கண்டுள்ளோம் சைவம் என்பது சிவனை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும் வைணவம் என்பது திருமாலை முழுமுதற் கடவுளாக கொண்டது என்றும். ஆனால் அந்த சமயங்கள் அவர்கள் இருவரை மட்டும் வணங்குவதோடு நிற்கவில்லை. அந்த சமயங்கள் அவர்களின் குடும்பத்தினை வழிபடுவதாகவும் இருக்கின்றன.
சைவ மதம் சிவனை வழிபடுவதோடு நில்லாமல் அம்மனையும் முருகன்/விநாயகரையும் சேர்த்து வழிபடும் ஒரு மதமாக இருக்கின்றது.
அதாவது,
தந்தை - சிவன்
தாய் - அம்மன்
பிள்ளை - முருகன்/பிள்ளையார்.
அதேப்போல் வைணவமும் பெருமாளின் குடும்பத்தினை வழிபடும் ஒரு சமயமாக இருக்கின்றது. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிவன் வைணவத்திலும் வணங்கப்படுகின்றார்.
அதாவது வைணவத்தின் படி வணங்கப்படும் கடவுள்கள்,
சிவன்
திருமால்
பிரமன்.
இவர்களைத் தான் நாம் மும்மூர்த்திகள் என்று வழங்குகின்றோம். அதாவது சிவன் - அழிக்கும் கடவுள்.
திருமால் - காக்கும் கடவுள்.
பிரமன் - படைப்புக் கடவுள் என்றே நாம் அறிந்து இருக்கின்றோம்.
ஆனால் நம்மில் பெரும்பாலோர் அறியாத ஒரு விடயம் என்னவென்றால் படைப்புக் கடவுளாக கூறப்படும் பிரமன் - திருமாலின் மகனாக கூறப்பட்டுள்ளார்.
திருமால் கனவு காண்பதாகவும் அதிலிருந்து பிரமன் தோன்றியதாகவும் நமது புராணக் கதைகள் நீள்கின்றன. ஆனால் இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு தொப்புள் கொடி உறவாக குறிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக தொப்புள் கொடி உறவு என்பது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் உள்ள உறவு தான். அவ்வாறு இருக்க ஆணான பெருமாளுக்கும் பிரமனுக்கும் இடையில் உள்ள உறவு ஏன் தொப்புள் கொடி உறவாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது.
மேலும் புராணக் கதைகளில் விஷ்ணு பல இடங்களில் பெண் உருவம் எடுப்பதாக கதைகள் வருகின்றன. மேலும் சிவனும் பெருமாளும் இணைந்து ஐயப்பன் தோன்றுவதாகவும் நமது கதைகள் இருக்கின்றன. அதாவது
தந்தை - சிவன்
தாய் - பெருமாள்
பிள்ளை - ஐயப்பன்.
ஆனால் இந்தக் கதைகள் அனைத்திலும் சிவன் ஆணாகவே குறிக்கப்பட்டு உள்ளார். பெருமாள் ஆணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார் பெண்ணாகவும் சித்தரிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் ஏன் இந்த வேறுபாடு என்றும் இந்தக் கதைகளுக்கு வேறு அர்த்தம் ஏதாவது இருக்குமோ என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
மேலும் நாம் இதுவரை கண்ட விடயங்கள் அனைத்திலும் தந்தை தாய் மகன் ஆகிய மூன்று கடவுள்களை வழிபடும் பழக்கம் இருப்பதை கண்டு இருக்கின்றோம். இந்த பழக்கங்கள் கிருத்துவம் கூறும் மூவொருக் கடவுள் கோட்பாட்டினை ஒத்து இருப்பதையும் நாம் காணுகின்றோம். இந்நிலையில் கிருத்துவம் கூறும் கோட்பாடும் சைவ வைணவ சமயங்களில் காணப்படும் கோட்பாடுகளும் ஒன்றா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் முதலில் அம்மனையும் பெருமாளையும் பற்றி காண வேண்டி இருக்கின்றது.
காண்போம்...புராணங்கள் அழைக்கின்றன.
அம்மனும் பெருமாளும் -
"செல்வனின் தங்கை நன்றாக நடனமாடினான்.
செல்வன் அவன் தங்கையின் நடனத்தை மகிழ்ச்சியுடன் கண்டு கொண்டு இருந்தாள்."
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியான வாக்கியங்களா என்றால் இல்லை என்பதே பதிலாக வரும்.
காரணம்... அந்த வாக்கியங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தான விகுதிகள் தவறாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
விகுதிகளா...அப்படி என்றால் என்ன? என்பவர்களுக்காக விகுதிகளை சற்று பார்த்து விடுவோம்.
விகுதி என்பது ஒரு சொல்லின் பொருளை தெளிவாக குறிக்க அச்சொல்லின் இறுதியில் சேர்க்கப்படும் ஒரு சொல். உதா - 'ன்' 'ள்' 'ஆர்'
தமிழ் இலக்கணத்தின் படி,
ஆண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ன்'. எடு: அவன், வந்தான்,நடந்தான்,முருகன்...
பெண்களைக் குறிக்க பயன்படும் விகுதி 'ள்'. எடு: அவள்,ஓடினாள்,ஆடினாள்...
ஆணுக்குரிய விகுதி பெண்ணுக்கு வாராது. அதேப் போல் பெண்ணுக்குரிய விகுதியும் ஆணுக்கு வாராது. எப்பொழுது இந்த விகுதிகள் மாறுகின்றனவோ அப்பொழுது அச்சொல் தவறான ஒன்றாக மாறுகின்றது. இந்நிலையில் தான் நாம் மேலே உள்ள வாக்கியங்களைக் காண வேண்டி இருக்கின்றது.
செல்வனின் தங்கை, 'ன்' என்ற ஆண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றாள்.
செல்வனோ, 'ள்' என்ற பெண் விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றான்.
ஒரு ஆண் விகுதி பெண்ணுக்கும், பெண் விகுதி ஆணுக்கும் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இவை தமிழ் இலக்கண முறைப்படி தவறான வாக்கியங்களாகும்.
சரி இப்பொழுது நாம் இதன் அடிப்படையில் நம்முடைய கதைக்கு வருவோம்.
அம்மன் - பெண் தெய்வம். ஆனால் ஆண்களுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.
பெருமாள் - ஆண் தெய்வம். ஆனால் பெண்ணுக்குரிய விகுதியால் குறிக்கப்பட்டு இருக்கின்றார்.
ஏன் இந்த வேறுபாடு? விகுதிகளை மாற்றிக் கூறுவது தவறென்று அறியாத சிலர் தெரியாது இந்த பெயர்களை இட்டு விட்டார்களா? அல்லது அவர்கள் இந்தப் பெயர்களை இட்டதற்கு வேறு காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்பதனை நாம் இப்பொழுது ஆராய்ந்து பார்க்க வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் சென்ற பதிவில் பார்த்த சில விடயங்களை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது.
சென்ற பதிவில் நாம் கண்டபடி,
சைவம் என்பது ---> சிவன், அம்மன், முருகன் பிள்ளையார் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.
வைணவம் என்பது ---> சிவன் , பெருமாள், பிரமன் ஐயப்பன் ஆகியோரை வணங்கும் சமயமாக இருக்கின்றது.
இங்கே நாம் நோக்க வேண்டிய விடயம் என்னவென்றால்,
சிவனுக்கு அம்மன் மூலமாக இரு குழந்தைகள் இருக்கின்றனர். அதேப்போல் பெருமாளின் மூலமாகவும் இரு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் எவ்வளவு தான் புராணக் கதைகளில் தேடினாலும் பெருமாளுக்கு என்று தனியே குழந்தைகள் இருப்பதாக செய்திகள் இல்லை. சைவ வைணவ சமயங்களில் காணப்படும் பிள்ளைக் கடவுள்கள் அனைவரும் தந்தை சிவனாகவே காணப்படுவது இங்கே கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் தான் நாம் கிருத்துவ தத்துவத்தையும் காண வேண்டி இருக்கின்றது. சென்ற பதிவில் கண்டவாறு கிருத்துவம் இறைவனை 'தந்தை நிலை', 'பரிசுத்த ஆவி நிலை' மற்றும் 'பிள்ளை நிலை' என்ற மூன்று நிலைகளில் வைத்தே கூறுகின்றது.
இப்பொழுது ஒரு கேள்வி.
மூன்று பேர்களைக் கொண்ட ஒரு குடும்பம் இருக்கின்றது. அந்த குடும்பத்தில் தந்தை இருக்கின்றார்...பிள்ளையும் இருக்கின்றார்...அப்படி என்றால் இடையில் விடப்பட்டு உள்ள அந்த இன்னொருவர் யார்?
அன்னை என்பதே விடையாக இருக்கும் தானே.
எனவே இதன் அடிப்படையில் 'தந்தை தாய் மகன்' என்பதே இயல்பான உறவு என்றுக் கொண்டு 'தூய ஆவி' என்பது ஒரு பெண் தான் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆனால் விவிலியத்தின்படி மரியாளுக்கு தூய ஆவியின் மூலம் குழந்தை உருவாவதால், ஒரு ஆணின் மூலமே ஒரு பெண்ணுக்கு குழந்தை உண்டாக முடியும் என்ற கருத்தின் படி தூய ஆவியை ஆணாக வேறு சிலர் கருதுகின்றனர்.
ஆய்வாளர்களின் கருத்துப்படி இந்த வேறுபாடுகளே சைவ வைணவப் சமயங்களின் பிரிவின் அடிப்படைக் காரணமாகும்.
அதாவது தூய ஆவியை பெண்ணாக கருதி 'தந்தை - தாய் - பிள்ளை (சிவன் -அம்மன்-முருகன்/பிள்ளையார்)' என்ற உறவின் அடிப்படையில் சைவம் வளருகின்றது. அதற்கு மாறாக தூய ஆவியை ஆணாகக் கொண்டு 'தந்தை -தந்தை-பிள்ளை(சிவன்-பெருமாள்-பிரமன்/ஐயப்பன்)' என்ற உறவின் அடிப்படையில் வைணவம் வளருகின்றது.
இங்கே தூய ஆவி ஆணா இல்லை பெண்ணா என்று தெளிவாக கூற முடியாததால் அவ்விரு குணங்களுமே தூய ஆவிக்கு உண்டு என்றுக் கருதி,
அம்மன் - பெண் கடவுள் தான் ஆனால் ஆண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ன்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும்
பெருமாள் - ஆண் கடவுள் தான் ஆனால் பெண் தன்மையும் உண்டு என்பதைக் குறிக்க 'ள்' விகுதி பயன்பட்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் அம்மனும் பெருமாளும் வேறுவேறு அல்லர் என்பதை கூற நமது புராணக் கதைகளில் இருவரும் அண்ணன் தங்கையாக குறிக்கப்பட்டு உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும் சைவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி அம்மன் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அர்த்தநாரீஸ்வரர் என்று வழங்கப்படுகின்றது. அதேப்போல் வைணவத்தில் சிவன் உடம்பின் இடதுப் பகுதி பெருமாள் வடிவாக சித்தரிக்கப்பட்டு அவ்வடிவம் அரிஅரன் என்று வழங்கப்படுகின்றது. இவ்விரண்டு வடிவத்திலும் வலப் பகுதி ஒன்றாகவே கூறப்பட்டு இருப்பதும் இடப்பகுதி மட்டும் மாற்றிக் கூறப்பட்டு இருப்பதும் கவனிக்கத்தக்க விடயங்களாகும்.
அதேப்போல் கிருத்துவத்தில் தூய ஆவி கடவுளின் ஆற்றல் என்று வழங்கப் பெறுவதும் இங்கே அம்மன் 'சக்தி' என்று வழங்கப் பெறுவதும் ஒப்பிட்டு நோக்க வேண்டிய ஒரு விடயமாகவும் உள்ளது.
சரி...பெருமாளையும் அம்மனையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது இன்னொரு கேள்விக்கு பதில் நாம் காண வேண்டி இருக்கின்றது.
கிருத்துவின் கருத்துக்கள் தான் நம் மண்ணிலும் வளர்ந்து உள்ளன என்றால் ஒரு குழந்தை வழிப்பாட்டு முறை தானே இங்கே இருக்க வேண்டும். கிருத்துவக் கொள்கைகள் படி இறைவனுக்கு ஒரு குழந்தை தானே. அனால் இங்கேயோ பிள்ளையார், முருகன், பிரமன் மற்றும் ஐயப்பன் என்று நால்வர் இருக்கின்றார்களே?... இதற்கு என்ன விளக்கம் என்று கேட்கின்றீர்களா....
நல்ல கேள்வி தான்...இதற்குரிய விடையையும் நாம் தேட வேண்டி இருக்கின்றது...தேடுவோம்...!!!
வினைத் தீர்க்கும் விநாயகர் நமக்காக முதலில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-8



இந்தியாவில் தோமா -
தூய தோமா (St. Thomas)!!!
நிச்சயம் கிருத்துவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெயராக இருக்கக் கூடும். சென்னை வாழ் மக்களுக்கும் ஒருவேளை சாந்தோம் (Santhome), பரங்கி மலை (St.Thomas Mount) போன்ற இடங்களின் வாயிலாக இந்த பெயர் அறிமுகமாகி இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு இந்தப் பெயர் அவ்வளவு பரிச்சியமாக இருக்குமா என்பது சந்தேகமே...எனவே தூய தோமா இந்தியாவிற்கு வந்தாரா இல்லையா என்பதனை காணும் முன் நாம் சற்று அவரைப் பற்றி அறிந்துக் கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்.
விவிலியத்தின்படி தோமா இயேசுவின் பன்னிரு சீடர்களில் ஒருவர். இயேசுவின் கூடவே இருந்து அவரின் கருத்துக்களை கேட்டு, பின்னர் அக்கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்காக மற்ற சீடர்களைப் போலவே இவரும் வேறு நாடுகளுக்கு கிளம்பியவர். அவ்வாறு கிளம்பி இவர் வந்தடைந்த நாடு தான் இந்தியா. இங்கே தான் பிரச்சனை தொடங்குகின்றது.
தோமா இந்தியா வந்தார் என்று ஒரு கூட்டம் கூற மற்றொரு கூட்டமோ தோமா இந்தியா வந்தது வெறும் கட்டுக்கதை, தோமா இந்தியா வந்ததற்கு சான்றுகள் எதுவும் இல்லை என்கின்றது. எனவே இப்பொழுது தோமா இந்தியா வந்தாரா இல்லையா... வந்தார் எனில் அதற்கு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதனை நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் தோமாவின் இந்திய வரலாற்றினை சற்று சுருக்கமாக கண்டு விடலாம்.
வரலாற்று குறிப்புகளின் படி தோமா இந்தியாவிற்கு கி.பி 52 ஆம் ஆண்டில் வருகின்றார். வந்து இறங்கிய இடம் அன்றைய சேர நாடான இன்றைய கேரளா. பின்னர் 20 ஆண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து இயேசுவின் கருத்துக்களைப் பரப்பியப் பின் தமிழகத்தில் சிலரால் அவர் கொல்லப்படுகின்றார். அவ்வாறு அவர் கொலையுண்ட இடமே இன்றைய பரங்கி மலையாகும். பின்னர் அவர் அன்றைய தமிழகத்தின் அரசனால் சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றார். அவ்வாறு அவர் அடக்கம் செய்யப்பட்ட இடமே இன்றைய சாந்தோம் ஆகும். நிற்க.
இப்பொழுது நாம் அந்தக் கதையினையும் அதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களின் கூற்றினையும் சற்று காண்போம்.
௧) தோமா இந்தியா வந்து இருக்கவே முடியாது. ஏனெனில் அத்தனை தூரம் அக்காலத்தில் பயணித்து ஒருவர் வந்து இருக்க முடியும் என்பது நம்ப முடியாத ஒன்று. எனவே தோமா இந்தியாவுக்கு அதுவும் சேர நாட்டிற்க்கு வந்தார் என்பது கட்டுக்கதையே என்பது தோமாவை மறுப்பவர்களின் ஒரு முக்கிய கூற்றாகும்.
ஆனால் உண்மையோ வேறாக இருக்கின்றது, தோமாவின் காலத்துக்கு முன்பே கிரேக்கர்களும், ரோமர்களும், யூதர்களும் இந்தியாவுடன் வணிக தொடர்பில் இருந்தது...அதுவும் குறிப்பாக தமிழகத்துடன் தொடர்பில் இருந்தது சங்க இலக்கியங்களின் மூலமும் மற்றும் பல்வேறு சான்றுகள் மூலமும் நமக்கு புலனாக வருகின்றது. தமிழர்கள் அவர்கள் அனைவரையும் யவனர் என்ற பொது பெயரினைக் கொண்டே அழைத்தனர். உதாரணமாக...
'யவனர் தந்த வினைமாண் நன்கலம்...' அகநானூறு 149
'யவனர் இயற்றிய வினைமாண் பாவை ...' நெடுநல்வாடை 101
போன்ற சங்க இலக்கியங்கள் மூலம் யவனர்கள் அக்காலத்திலேயே தமிழகத்துடன் தொடர்பில் இருந்து இருக்கின்றனர் என்பது நமக்கு புலனாகின்றது.
மேலும் இயேசுவின் காலத்தில் ரோமப் பேரரசினை ஆண்ட ஆகசுடசு (Augustus Ceaser) என்ற மன்னனின் காலத்துக்கு உட்பட்ட ரோம நாணயங்கள் பல மதுரை மற்றும் தென் தமிழகப் பகுதிகளில் அதிகமாக கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.
மேலும் அசோகரின் கல்வெட்டுகளில் கூட அவரின் ஆளுமைக்கு கீழே இருந்த யவன மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மேலும் அசோகரின் கல்வெட்டுகள் அரேமிய மொழியிலும் கிடைப்பது இங்கே கவனிக்கத்தக்கது ஏனெனில் இயேசு பேசிய மொழி அரேமியமே.
எனவே சான்றுகள் இவ்வாறு இருக்க தோமா இந்தியா வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கத் தான் செய்கின்றன. சரி... இப்பொழுது நாம் மறுப்பவர்களின் மற்றொரு கூற்றினையும் கண்டு விடலாம்.
௨) தூய தோமா இந்தியாவின் வட பகுதியில் தட்சசீலத்தில் கொண்டாபோரோசு (Gondophares) என்னும் மன்னனை சந்தித்ததாக செய்திகள் இருக்கின்றன. ஆனால் அத்தகைய ஒரு அரசன் அங்கே வாழ்ந்ததாக எந்த ஒரு சான்றுமே இல்லை. கொண்டாபோரோசு என்பது ஒரு கற்பனைப் பாத்திரமே. எனவே தோமா இந்தியாவிற்கு வந்தார் என்பதும் ஒரு கற்பனையே. இது தோமாவை மறுப்பவர்களின் மற்றுமொரு கூற்றாகும்.
ஆனால் சமீத்திய ஆராய்ச்சிகள் கொண்டோபோரோசு என்ற மன்னன் ஒருவன் வட நாட்டில் ஆட்சி செய்து வந்து இருக்கின்றான் என்று கண்டு பிடித்து இருக்கின்றன. அவ்வரசனின் நாணயங்களும் பல கண்டு எடுக்கப்பட்டு உள்ளன. எனவே தோமாவின் வரலாற்றில் கூறப் படும் இந்த அரசன் உண்மையாகவே இருந்து இருக்கும் பொழுது தோமாவும் உண்மையாகவே இந்தியாவுக்கு வந்து இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
௩) தோமாவை மறுப்பவர்கள் கூறும் மூன்றாவது கருத்து. அவ்வாறே தோமா இங்கே வந்து இருந்தார் என்றால் அவரின் தாக்கங்கள் இங்கே தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. எனவே அவர் இந்தியா வந்தது என்பது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்கும்.
ம்ம்ம்....உண்மையான கூற்று. தோமா இந்தியா வந்து இருந்தார் என்றால் அவர்தம் கருத்துக்கள் இங்கே பல மாற்றங்களை உருவாக்கி இருக்க வேண்டுமே....அத்தகைய மாற்றங்கள் உருவாக்கி இருந்தன என்றால் தானே தோமா இங்கே வந்தார்...அவர் இயேசுவின் கருத்துக்களை பரப்பினார் என்பதனை நாம் நம்ப முடியும். எனவே இப்பொழுது தோமா பரப்பிய கருத்துக்களை நாம் அறிய வேண்டி இருக்கின்றது.
தோமா ஒரு கிருத்துவர் தான். அதில் மாற்றுக் கருத்துக்களே கிடையாது. ஆனால் அவர் இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கக் கூடிய ஐரோப்பியக் கிருத்துவரா என்றால் இல்லை என்பதே பதில் ஆகக் கூடும். தோமா ஒரு ஆசியக் கிருத்துவர்.
என்னங்க குழப்புறீங்க...ஐரோப்பிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க...ஆசிய கிருத்துவம் அப்படின்னு சொல்றீங்க... கிருத்துவம் அப்படினாலே ஒண்ணுதானுங்களே அத எப்படி நீங்க பிரிக்குறீங்க என்று கேட்கின்றீர்களா...!!! அந்தக் கேள்விக்கு விடையினைக் காணும் முன் உங்களுக்கு ஒருக் கேள்வி.
கிருத்துவ சமயத்தின் சின்னம் எது?
சிலுவை அப்படின்னு சொல்றீங்களா. அப்படி என்றால் உங்களுக்கு ஒருத் தகவல்.
கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக இருக்கவில்லை. நான்காம் நூற்றாண்டில் எப்பொழுது ரோம பேரரசின் மன்னனான கான்சண்டீன் (Constantine) கிருத்துவ சமயத்தை அரச சமயமாக ஏற்றுக் கொள்கின்றானோ அப்பொழுது தான் சிலுவையும் கிருத்துவத்தின் சின்னமாக உருவாகின்றது.
அதற்கு முன்னர் வரை, இயேசுவின் காலத்திலும் சரி...தோமாவின் காலத்திலும் சரி சிலுவைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான். சிலுவை என்பது மக்களைக் கொள்ளும் ஒரு ரோமானிய கொலைக் கருவி. அவ்வளவே. அத்தகைய சிலுவையைத் தான் ரோமர்கள் கிருத்துவத்தின் சின்னமாக ஆக்குகின்றார்கள். அப்படியாக்கப்பட்ட கிருத்துவத்தைத் தான் நாம் ஐரோப்பியக் கிருத்துவம் என்கின்றோம்.
தோமா அப்படிப்பட்ட கிருத்துவர் அல்ல. அவர் சிலுவையை வழிபடவில்லை. அவர் வழி வேறு.
அது என்ன வழி... சான்றுகள் இருக்கின்றனவா... என்றுக் கேட்கின்றீர்களா...!!!
ஆம்...சான்றுகள் இருக்கின்றன. அச் சான்றுகளுடன் இயேசுவுக்கு பின்னர் வளர்ந்த கிருத்துவத்தைப் பற்றியும் நாம் இப்பொழுது நம் பயணத்தில் காண வேண்டி இருக்கின்றது....!!!
காண்போம்... அடுத்த பதிவில்....!!!
பயணிப்போம்...!!!
இன்னொரு முக்கியத் தகவல்:
தமிழகம் வந்த தோமாவினை அவரின் மரணத்திற்குப் பின் சாந்தோம் என்ற இடத்தில அடக்கம் செய்தனர் என்பதனை நாம் கண்டோம்.
'சாந்தோம்' என்பது போர்சுகிசிய சொல்.
சாந்தோம் என்றால் தூய தோமா என்றே அர்த்தம். இன்று அந்த இடத்தில தூய தோமாவின் நினைவாக ஒரு தேவாலயம் இருக்கின்றது.
சாந்தோம் தேவாலயம். நிச்சயம் சென்னையில் இருக்கும் அனைவரும் இதனைக் கண்டு இருப்பர் என்றே நம்புகின்றேன்.
இந்த தேவாலயம் தோமாவின் நினைவாக கட்டப்பட்டது என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் நாம் அறியாத சில விடயங்களும் இந்த தேவாலயத்தில் இருக்கின்றன.
தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். ஆனால் இந்த தேவாலயம் கட்டப்பட்டதோ கி.பி 16 ஆம் நூற்றாண்டில். இந்தியாவுக்கு அப்பொழுது வந்த போர்சுகிசியர்களால் தான் இந்த தேவாலயம் கட்டப்பட்டது.
இப்பொழுது ஒரு கேள்வி எழுகின்றது.
தோமா இறந்தது கி.பி 72 ஆம் ஆண்டில். வரலாற்றின் படி அன்றைய தமிழக மன்னன் அவரை சிறப்பித்து அவரை அடக்கம் செய்த இடத்தில் ஒரு ஆலயத்தினை கட்டுகின்றான் என்று நாம் கண்டு இருக்கின்றோம். அப்படி இருக்க, கி.பி 16 நூற்றாண்டில் போர்சுகிசியர்கள் வந்து ஒரு தேவாலயத்தினைக் கட்டுகின்றார்கள் என்றும் காண்கின்றோம். அப்படி என்றால் தமிழக அரசன் தோமாவினை சிறப்பித்து கட்டிய ஆலயம் என்ன ஆனது...அது எந்த ஆலயம் என்றக் கேள்விகள் எழலாம்...!!! அக்கேள்விகளுக்கு விடை இதோ...
தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது மயிலாப்பூரில், அவரை மதித்து தமிழக அரசனால் கட்டப்பட்ட ஆலயம் - கபாலீஸ்வரர் கோவில். அந்தக் கோவிலை கி.பி 16 நூற்றாண்டில் வந்த போர்சுகிசியர்கள் இடித்து விட்டு சாந்தோம் தேவாலயத்தினை கட்டுகின்றனர். அவ்வாறு இடித்த கபாலீஸ்வரர் கோவிலை வேறு இடத்தில் கட்டுகின்றனர். இது வரலாறு. (சாந்தோம் வரலாறு)
அதாவது இன்று சாந்தோம் தேவாலயம் இருக்கும் இடத்தில் சுமார் 400 ஆண்டுகள் முன்னர் வரை இருந்தது கபாலீஸ்வரர் கோவில். அக்கோவில் ஆனது தூய தோமாவினை சிறப்பித்துக் கட்டப்பட்டதாகும். நிற்க.
இத்தகவலை நான் இங்கே கூறியது, இந்து கோவிலை கிருத்துவர்கள் இடித்து விட்டனர் என்ற ஒரு கருத்தினை விதைக்க அல்ல. ஏனெனில் தோமாவின் காலத்தில் அவ்விரு மதங்களுமே வேர் ஊன்றி இருக்க வில்லை. மாறாக கிருத்துவராக சித்தரிக்கப்படும் தோமாவை சிறப்பித்து இந்து கோவில் என்றுக் கூறப்படும் ஒரு கோவில் ஏன் கட்டப்பட்டது என்றக் கேள்வியினை எழுப்பத் தான் அக்கருத்தினை நான் பகிர்வு செய்து இருக்கின்றேன். மேலும் இக்கோவிலே சைவ சமயத்தின் முதல் கோவில் என்று கூறப்படுவதும் இங்கே முக்கியமான ஒரு தகவலாகும்.
தோமா - கிருத்துவர்.
கபாலீஸ்வரர் கோவில் - சைவ கோவில்.
இவ்வாறு இருக்க தூய தோமாவை சிறப்பித்து ஒரு சைவ கோவில் கட்டப்பட்டது எதனால்?....இதையும் நம்முடைய பயணத்தில் காண்போம்..
கிருத்துவத்தின் வரலாறு - 
கிருத்துவம்...!!!
இன்று உலகில் உள்ள மக்களில் அதிகப் பேரால் பின்பற்றக் கூடிய ஒரு மதம். இன்று அதன் பலம், செல்வாக்கு போன்றவற்றினை எண்ணிப் பார்த்தால் வியக்க மட்டுமே செய்ய முடியும். அப்பேர்ப்பட்ட அரசியல் செல்வாக்கினையும் பண பலத்தினையும் ஆன்மீகத்தோடு கொண்டு விளங்கும் ஒரு அமைப்பாக கிருத்துவம் இருக்கின்றது. ஆனால் ஆரம்பக் காலம் முதலே கிருத்துவம் இவ்வாறு பலம் பொருந்திய அமைப்பாக இருந்ததா என்றால் இல்லை என்பதே உண்மையான பதிலாக இருக்கும். ஆரம்பக் காலத்தில் கிருத்துவத்தின் வளர்ச்சி சீரான ஒன்றாக இருக்கவில்லை.
ஆரம்பக்கால கிருத்துவர்கள் பல இன்னல்களை அனுபவித்தார்கள்....ரோமர்களின் வாயிலாக. கிருத்துவினைக் கொன்ற ரோமர்கள் அடுத்து கிருத்துவினை பின்பற்றியவர்களை குறி வைக்க ஆரம்பித்தனர்.
"ஐயா வணக்கங்கள்...இயேசுவின் கருத்துக்களை தாங்கள் போதிக்கின்றீர்களா...நல்லது. உங்களின் சேவை முடியும் நேரம் வந்து விட்டது. அதோ உங்கள் இயேசு அலைகின்றார். சென்று வாருங்கள்" என்றவாறே இயேசுவினை பின்பற்றியவர்களை தேடித் தேடி கொன்றுக் கொண்டு இருந்தனர் ரோமர்கள் மற்றும் யூதர்கள்.
இயேசுவின் கருத்துக்களை பரப்ப உலகம் முழுவதும் சென்ற அவரின் சீடர்களில் பலர் ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு இடத்தில் கொல்லப்படுகின்றனர். அவர்களுள் சிலர் சிலுவையிலும் அறையப்படுகின்றனர்.
இந்நிலையில்...அதாவது கிருத்துவின் கருத்துக்களும் பரப்பப்பட வேண்டும்...ஆனால் ரோமர்களும் அதனைக் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற நிலையில் சில ரகசியக் குறியீடுகளை உருவாக்குகின்றனர் அன்றைய கிருத்துவர்கள். அப்படிப்பட்ட ஒரு குறியீடு தான் மீன் சின்னம்.
வரலாற்றுக் கூற்றுகளின் படி கிருத்துவர்கள் ரோமர்களால் வேட்டையாடப் பட்ட பொழுது அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள இந்த மீன் சின்னத்தினையே பயன்படுத்தினர். ஒருவர் மற்றொருவர் கிருத்துவரா என்பதனை அறிந்துக் கொள்ள மீனின் மேல்பகுதி போன்ற தோற்றமுள்ள அரை வட்டத்தினை வரைவார். அதனைக் கண்ட மற்றொருவர் அவரும் கிருத்துவராக இருக்கும் பட்சத்தில் மீனின் அடிப்பகுதியை போன்ற அரை வட்டத்தினை வரைந்து சின்னத்தினை முற்றுப் பெற செய்வர். இவ்வாறே கிருத்துவர்கள் ஆரம்பக் காலத்தில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுக் கொண்டனர்.
மேலும் மீன் சின்னம் பல இடங்களில் கிருத்துவினையும் கிருத்துவர்களையும் குறிக்க பயன்பட்டு இருக்கின்றது.
எடுத்துக்காட்டுக்கு... கிரேக்கத்தில் மீனைக் குறிக்கும் 'இக்தைசு' என்னும் சொல் 'இயேசு கிருத்து கடவுளின் மகன் - மீட்பர்' என்னும் பொருள் தரும் வண்ணம் பயன்பட்டு இருக்கின்றது.
ரோமர்களின் சுரங்கக் கல்லறைகளில் இயேசு கிருத்து மீன் சின்னத்தில் குறிக்கப்பட்டு உள்ளார்.
இன்னும் பல இடங்களில் கிருத்துவுக்கு பின் பட்ட காலத்தில் மீன் சின்னம் கிருத்துவர்களை குறிக்க பயன்பட்டு இருக்கின்றது. நிற்க.
இங்கே நாம் இந்த மீன் சின்னத்தைத் சற்று உற்று கவனிக்க வேண்டியிருக்கின்றது. வரலாற்றின் தொடக்கத்தில் இருந்தே இந்த சின்னம் மக்களின் வாழ்வோடு இணைந்து வந்து இருக்கின்றது. நம்முடைய கூற்றின் படி குமரிக்கண்டதினை ஆண்ட பாண்டியனின் சின்னமாகவும் பின்னர் சுமேரியர்கள், மேசொபோடமியர்கள் வணங்கிய கடவுளின் வடிவமாகவும் மீன் இருந்து இருக்கின்றது. இந்த மீன் சின்னமானது பண்டைய மக்களின் பண்பாட்டினில் தொடர்ச்சியாக பயனில் இருந்து உள்ளது என்ற விடயம் இங்கே கவனிக்கத்தக்கது.
சரி இப்பொழுது மீண்டும் நாம் வரலாற்றுக்கு வருவோம். ரோமர்கள் கிருத்துவர்களை தொடர்ந்து துன்புறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இருந்தும் கிருத்துவம் மக்களின் மத்தியில் செல்வாக்கினை பெற்றுக் கொண்டே இருக்கின்றது.
சில கிருத்துவர்கள் ரோமர்களின் அச்சுறத்தல் காரணமாக வேறு நாடுகளுக்கு செல்லுகின்றனர். அவ்வாறு பிழைப்பதற்காக கிளம்பிய கிருத்துவர்கள் சிலர் இந்தியாவுக்கும் வருகின்றனர். இந்தியா என்றால் தமிழகத்தில் உள்ள சேர நாட்டுக்கு (தமிழகத்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வணிக தொடர்பு பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்தது என்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்). அவ்வாறு குழுக்களாய் தமிழகம் வந்த கிருத்துவர்கள் சேர நாட்டிலையே தனி குழுவாக தங்கி விடுகின்றனர். இவர்கள் பிழைப்பதற்காக வந்தவர்களே அன்றி மதத்தினை பரப்புவதற்கோ அல்லது எந்த ஒரு ஆன்மீக விடயமாகவோ வந்தவர்கள் அல்ல. இவர்களே சீரியக் கிருத்துவர்கள் எனப்படுபவர். இவர்கள் தமிழகம் வந்தக் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டு என்றே கருதப்படுகின்றது.
இவ்வாறு பலர் பல நாடுகளுக்கு சென்றாலும் கிருத்துவம் அடக்குமுறையை எதிர்த்து வலுவாய் வளருகின்றது. ஒரு கட்டத்தில் நாட்டில் பெருன்பான்மையான மக்கள் கிருத்துவர்களாக இருப்பதை ரோம அரசன் கான்சண்டீன் உணருகின்றான். தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்களின் எண்ணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...அதாவது கிருத்துவத்தினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிந்துக் கொள்ளுகின்றான்.
பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள என்ன காரியம் வேண்டும் என்றாலும் செய்வார்கள் என்பது நாம் அறிந்த/ நேரில் காணுகின்ற ஒரு விடயம் தானே. ரோம அரசன் மட்டும் அந்த விதிக்கு விதி விலக்கா என்ன.
அவனும் மாறுகின்றான். அது வரை தானும் மற்ற ரோமபுரி மன்னர்களும் எதிர்த்து வந்த கிருத்துவத்தினை அரச மதமாக ஏற்றுக் கொள்கின்றான். கிருத்துவம் அரச அரியணை ஏறுகின்றது. அது வரை இல்லாத பல பழக்கங்கள் கிருத்துவத்தில் இணைக்கப்படுகின்றன. காரணம் மக்களை ஈர்க்க வேண்டும். அவ்வாறு ஈர்த்தால் தான் மதமும் வளரும் அதனை முன்னிட்டு அந்த தலைவர்களும் வளருவார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட பழக்கங்களுள் சில,
௧) மரியாள் வணக்கம்.
௨) சிலுவை சிறப்பிக்கப்படுதல்
௩) அரசர், பிரபுக்கள் மற்றும் பணக்காரர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்றக் கொள்கை.
இந்தக் கொள்கைகள் எல்லாம் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னால் வரை அதாவது கான்சண்டீன் மன்னன் எப்பொழுது கிருத்துவத்தை அரச மதமாக எற்றுக்கொள்கின்றானோஅதற்கு முன்னர் வரை கிருத்துவத்தில் கிடையாது. அக்காலத்தில் சிலுவை என்பது ஒரு கொலைக் கருவி. அவ்வளவே!!!.
அவ்வாறு கிருத்துவம் அரசியல் சாயம் பூசப் பெறுகின்றது. இது நடப்பது கி.பி நான்காம் நூற்றாண்டில். அன்று ஐரோப்பிய அரசியலோடு ஒன்று இணைந்த கிருத்துவ மதம் இன்று வரை வெளிவர இயலாது அவ்வரசியலோடு பிண்ணி பிணைந்துக் கொண்டு நிற்கின்றது.
இதுவே ஐரோப்பிய கிருத்துவத்தின் வரலாறு.
சரி வரலாறு இருக்கட்டும். கிருத்துவர்களின் சின்னம் சிலுவை அல்ல என்று சொல்லுகின்றீர்களே அப்படி என்றால் கிருத்துவர்களின் சின்னம் என்ன? கிருத்துவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கினார்கள்? தோமா எவ்வாறு வணங்கினார்... முன்னர் கண்டது போல் மீன் தான் கிருத்துவர்களின் சின்னமா? போன்ற கேள்விகள் எழுகின்றனவா...!!! சரி அக்கேள்விக்கான விடையினைக் காண்போம்.
இல்லை மீன் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. இறைவனைக் குறிக்க பயன்பட்ட ஒரு சின்னம் அவ்வளவே. இவ்வாறுக் கூறுவதினால் மீன் சின்னத்தின் மதிப்பினை குறைத்து எண்ணி விடாதீர்கள்...அனைத்து நாகரீகங்களிலும் இச் சின்னம் பயன்படுத்தப் பட்டு இருக்கின்றது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
கிருத்துவர்கள் இறைவனை நினைத்து வணங்க பயன்படுத்திய சின்னம்... திருநீறு!!! ஆம்... இன்று சைவர்களும் வைணவர்களும் பூசிக் கொண்டு இருக்கின்றோமே அதே திருநீறு தான்!!!
"என்ன இந்துக்களின் சின்னத்தை கிருத்துவர்களின் சின்னம் என்றுக் கூறுகின்றாயா!!! தெளிவாகத் தான் இருக்கின்றாயா... எதற்கும் ஒரு அளவு வேண்டும்..." என்றும், இதனைத் தாண்டியும் பல எண்ணங்கள் தோன்றுகின்றனவா....
சற்றுப் பொறுங்கள்... இதனை நான் சொல்லவில்லை.
விவிலியம் தான் அவ்வாறு கூறுகின்றது.
என்ன விவிலியத்தில் திருநீற்றினைப் பற்றியச் செய்தி இருக்கின்றதா...என்கின்றீர்களா...
கிருத்துவமும் திருநீறும் -
திருநீறு!!!
என்று சொன்னாலே அது சைவத்தையும் வைணவத்தையும் குறிக்கும் ஒரு சொல்லாகவே இன்று இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் சின்னமும் திருநீறு தான் என்று நாம் எவ்வாறுக் கூறுகின்றோம் என்பதனை இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் பழைய ஏற்பாட்டினை மீண்டும் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் திருநீறு என்றால் என்ன என்பதனை சற்று சுருக்கமாக பார்த்து விடுவோம்.
திருநீறு என்பது சாம்பலே என்றும், அதனை நெற்றியில் இறைவனை நினைத்து வைத்துக் கொள்வது வழக்கம் என்பதனை நாம் அறிந்து இருப்போம். சாதாரண சாம்பல் இறைவனை நினைத்து இடப் படுவதால் 'திரு' என்னும் சிறப்பு விகுதி பெற்று திருநீறு என வழங்கப்படுகின்றது. சரி இப்பொழுது இப்பழக்கம் விவிலியத்தில் கூறப்பட்டு உள்ளதா என்பதனை நாம் காண்போம்.
பழைய ஏற்பாட்டினில் பல இடங்களில் சாம்பலை மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் மனம் திரும்புதலின் அடையாளமாகவும் பயன்படுத்தி இருக்கின்றனர் என்ற விடயம்  பின்வரும் பழைய ஏற்பாட்டுச் செய்திகள் மூலமாக நமக்கு தெரிய வருகின்றது.
"தாமார் தன் தலைமீது சாம்பல் தூவினான்; தன் மீதிருந்த பல்வண்ண ஆடையைக் கிழித்தாள்; தன் தலை மீது கைவைத்து அழுதுக் கொண்டே சென்றாள்." - சாமுவேல் II - 13 -19
"மன்னரின் வார்த்தையும் நியமமும் எந்தெந்த மாநிலங்களை அடைந்தனவோ, அங்கெல்லாம் இருந்த யூதரிடையே பெரும், புலம்பலும், நோன்பும், கண்ணீரும், அழுகையும் விளங்க, அனைவரும் சாக்கு உடை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டனர்."  - எசுதர் 4 : 3
"இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான்." - யோனா 3 : 6
மேலும் பழைய ஏற்பாட்டினில் திருநீற்றினை எவ்வாறு செய்கின்றனர் என்பதனை பற்றியக் குறிப்புகளும் உள்ளன. அதன் படி
ஒரு பழுதற்ற செங்கிடாரி (ஆடு) ஒன்றினை பலியிட்டு அதன் தோல் தசை இரத்தம் ஆகியவற்றினை சாணியுடன் சுட்டு எரித்து, அவ்வாறு எரிப்பதனால் கிடைக்கும் சாம்பலை ஒரு தூய்மையான இடத்தில் வைக்க வேண்டும். அந்த சாம்பல் மக்களின் பாவத்தினை போக்குவதற்கு பயன் படும். (எண்ணாகமம் : 18 - 1 : 9 )
இந்தச் செய்திகள் வாயிலாக சாம்பலின் பயன்பாடு யூதர்கள் மத்தியில் இருந்தது என்பதனை நாம் அறிய வருகின்றோம். ஆனால் இது வரை நாம் கண்ட செய்திகள் அனைத்தும் பழைய ஏற்பாட்டினைச் சார்ந்தவை. இயேசு கிருத்து வருவதற்கு முன்னர் நிலவிய பழக்கங்கள். எனவே இப்பொழுது நம் முன் ஒரு கேள்வி வருகின்றது. இயேசு கிருத்து வந்ததிற்கு பின்னரும் சாம்பலின் பயன்பாடு மக்களிடத்து இருந்து இருக்கின்றதா? புதிய ஏற்பாடு அதனை விளக்குகின்றதா?
ஆம்!!! புதிய ஏற்பாட்டிலும் சாம்பலின் பயன்பாடு வருகின்றது. புதிய ஏற்பாட்டிலும் சாம்பல் மனம் திரும்புதலின் அடையாளமாகவும் பாவத்தினை நீக்கும் சின்னமாகவும் பயன்பட்டு இருக்கின்றது. இதனை பின் வரும் வரிகள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.
"கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்." - மத்தேயு 11 : 21
"வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள்." - எபிரெயர் 9 : 13
இந்தச் செய்திகள் மூலமாக சாம்பலினை பயன்படுத்தும் பழக்கம் யூத மக்களிடம் கிருத்துவுக்கு முன்பும் கிருத்துவுக்கு பின்னாலும் இருந்து இருப்பதனை நாம் அறிய முடிகின்றது.
மேலும் அவர்கள் அந்த சாம்பலினை தங்களின் நெற்றியில் இட்டார்கள் என்பதனை விளக்கும் செய்தியும் விவிலியத்தில் இருக்கின்றது.
"ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும். ஏனெனில் ஆண்டவர் தம் கைவன்மையால் எகிப்திலிருந்து உன்னை வெளியேறச் செய்தார்." - விடுதலைப் பயணம் 13 : 9 (பழைய ஏற்பாடு)
"மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்." - திருவெளிப்பாடு 14 : 1 (புதிய ஏற்பாடு)
மேற்கண்ட செய்திகள் மூலமாக சாம்பல் அல்லது திருநீற்றின் பயன்பாடு விவிலியத்தில் விளக்கப்பட்டு உள்ளது  என்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.
ஆனால் இன்னும் சந்தேகங்கள் இருக்கலாம். இவை அனைத்தும் வேறு அர்த்தங்கள் தரலாம் என்ற எண்ணமும் இருக்கலாம். அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு தகவல்.
சாம்பலின் பயன்பாடு இன்றும் கிருத்துவர்களின் மத்தியில் இருக்கின்றது. இறைவனை நினைத்து அவர்கள் தங்கள் நெற்றியில் இன்றும் திருநீற்றினை அணிந்துக் கொண்டு தான் இருக்கின்றனர். திருநீற்றின் வடிவம் மாறி இருக்கின்றது. ஆனால் அர்த்தம் மாறவில்லை. அதனை அவர்கள் ஒரு புனித நாளாகவே கொண்டாடுகின்றனர்.
இயேசு கிருத்துவின் மரணம் மற்றும் உயிர்த்து எழுதலினை நினைவுக் கூர்ந்து அதற்கென்று நோன்பு மேற்கொள்ளும் காலத்தின் தொடக்க நாளிலேயே தான் அவர்கள் திருநீற்றினை அணிந்துக் கொண்டு சிறப்பிக்கின்றனர்.
அந்த நாள் தான் சாம்பல் புதன்கிழமை என்று வழங்கப்பெறும் திருநீற்றுத் திருநாள் ஆகும். அந்நாளில் தான் கிருத்துவர்கள் இன்றும் அவர்கள் நெற்றியில் திருநீற்றினை சிலுவை வடிவில் அணிந்துக் கொண்டு வழிபடுகின்றனர்.
ஆனால் நாம் சென்ற பதிவில் பார்த்த செய்திகளின் படி சிலுவை என்பது கிருத்துவர்களின் சின்னம் அல்ல என்றும் கி.பி நான்காம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் தான் அரசியல் காரணமாக சிலுவை கிருத்துவர்களின் சின்னமாக ஆக்கப் படுகின்றது என்பதனையும் நாம் அறிந்துக் கொண்டோம். எனவே சாம்பல் புதன்கிழமை என்று வழங்கப்பெறும் நாளில் வெறும் திருநீறே முதலில் கிருத்துவர்கள் பூசிக் கொண்டு இருந்து இருக்க வேண்டும் என்றும் பின்னர் காலத்தில் சிலுவையினை சின்னமாக கொண்டு வந்த பொழுது வெறும் திருநீறு, சிலுவை வடிவமாக மாறி இருக்க வேண்டும் என்றும் நாம் கருத முடிகின்றது.
எனவே கிருத்துவ மக்கள் திருநீற்றினையே தங்களின் சின்னமாக கொண்டு இருந்தனர் என்று நாம் அறிய முடிகின்றது. அவ்வாறே அவர்கள் பயன்படுத்திய அந்த சின்னத்தினைக் கொண்டே தூய தோமாவும் தமிழகம் வருகின்றார்.
சரி கிருத்துவத்தில் திருநீறு பயன் பட்டு இருக்கின்றது சரி... ஆனால் சைவ வைணவ சமயங்களிலும் திருநீறு பயன் படுகின்றதே... ஏன் இந்த ஒற்றுமை என்ற கேள்வி இங்கே இயல்பாகவே எழும்.
அந்தக் கேள்விக்கும் மேலும் பல ஒற்றுமைகளுக்கும் விடை அளிக்க தோமா காத்துக் கொண்டு இருக்கின்றார்.
தோமாவை சந்திப்போம்...!!!!

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!





பகுதி-7



'எல் (EL)'...!!!
சுமேரியர்களும் பின்னர் யூதர்களும் வழிப்பட்டக் கடவுள்.
இந்தக் கடவுள் உலகினைப் படைத்தக் கதை தான்  'ஈனும் -மா - எல் - இசு' என்னும் நூலில் உள்ளது!!!
ஈனும் - படைத்த
இசு - இசைதல் - செய்தல்
மா - பெரிய
தன்னுடைய செயலால் உலகினைப் படைத்த மாபெரும் கடவுளான 'எல்'லின் கதை என்பதே 'ஈனும் -மா - எல் - இசு' என்ற சொல்லின் அர்த்தம் என்றே அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் கதையினைப் பொறுத்த வரை இது சுமேரியர்களின் கதை என்ற ஒரு விடயத்தினைத் தவிர மற்ற அனைத்து விடயங்களும் நாம் முன்னர் கண்ட கதைகளை ஒத்தே இருக்கின்றன. முதல் மாந்தன்...வெள்ளம்...வெள்ளத்தில் இருந்து இறைவன் ஒருவனை காப்பாற்றுதல்... என நாம் முன்னர் பாபிலோனிய இலக்கியங்களில் கண்ட அதே நிகழ்வுகள் இதிலும் வருகின்றன. பெயர்கள் மாறி இருக்கின்றன...ஆனால் கதை அதே தான்...கூடவே அதே கேள்விகளும் தான்.
எவ்வாறு வெள்ளத்தினைக் கண்டிராத ஒரு பிரதேசத்தில் வெள்ளத்தினைப் பற்றிய கதைகள் வரலாறாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன?...அதுவும் அனைத்து இலக்கியங்களிலும்...!!! உண்மையிலையே இங்கே வெள்ளம் வந்ததா...இல்லையேல் இவை வெறும் கதைகளா?
மேலே உள்ள இந்தக் கேள்விக்கு இன்னும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் விடைத் தேடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று நாம் கண்டோம் எனவே அவர்களின் உதவி இந்தக் கேள்விகளுக்கு இப்பொழுது நமக்கு கிடைக்கப் போவதில்லை. எனவே நாம் நமது அறிஞர்கள் என்ன சொல்லுகின்றனர் என்பதனை சற்றுக் கண்டுக் கொண்டு வந்து விடுவோம்...!!!
அவர்களின் கூற்றுப் படி 'பெரு வெள்ளம்' என்று அக்கதைகள் குறிப்பிடுவது குமரிக்கண்டத்தின் அழிவையே ஆகும். குமரிக்கண்டத்தினை பெருங் கடல் கொள்ள பிழைத்து வெளியேறிய மக்கள் சிலர் மேற்க்கே சென்று குடி ஏறினர். அவ்வாறு குடியேறிய மக்கள் தங்களின் வரலாற்றினை தாங்கள் உணர்ந்தப் படி கதையாக பதிவு செய்து வைத்தனர். அக்கதைகள் தான் மேலே கூறிய அந்த இலக்கியங்கள். எனவே தான் வெள்ளமே அவ்விடத்தில் தோன்றியிராத பொழுதும், வெள்ளத்தில் இருந்து மக்கள் தாங்கள் மீண்டு வந்த செய்தியை அந்த இலக்கியங்கள் சுமந்துக் கொண்டு இருக்கின்றன என்று அந்த அறிஞர்கள் கருதுகின்றனர்.
"அட...இது என்னப்பா வம்பா போச்சி... வெள்ளத்தப் பத்தி அப்ப எவன் பேசுனாலும் அவன் குமரிக்கண்டத்துல இருந்து தப்பிச்சி வந்து இருப்பான் அப்படின்னு சொல்லுவீங்க போல இருக்கே!!!" என்று எண்ணுகின்றீர்களா...
சரி தான். அப்படி என்றால் நாம் மேலும் சில தகவல்களைக் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னால் ஒரு கேள்வி...!!!
உங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்று இருக்கின்றீர்களா? அங்கே கல் வழிப்பாட்டினைக் கண்டு இருக்கின்றீர்களா? ... கல் வழிபாடு என்றால் சிலையினைச் சொல்லவில்லை... வெறும் கல்... அதனை நட்டி வைத்து வணங்குவார்கள்...அவற்றினைக் கண்டு இருக்கின்றீர்களா?... மேலும் 'நடுகல் வழிபாடு' என்ற ஒன்றையும் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?
இவை இரண்டும் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகள். இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இதே பழக்கம் சுமேரியர்களிடமும் பாபிலோனியர்களிடமும் யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது....அதே முறையில்...அதே பெயரில்!!!
'நேர்கல் (Nergal)' - இவன் பாபிலோனியர்களின் போர்க் கடவுளாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். இங்கே தமிழர்கள் போரில் இறந்தவர்களுக்கு 'நடு கல்' நடும் பழக்கம் நம்மில் சிலருக்கு நினைவுக்கு வரலாம்.
மேலும் இதேக் கல் வழிபாடு 'கல்கால் (Gilgal)' என்று எபிரேயச் சமயத்திலும் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இங்கே கல்கால் என்பதும் நேர்கல் என்பதும் தூயத் தமிழ் சொற்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. கற்களை நட்டு வழிபடும் தமிழர் பழக்கங்கள் இதன் மூலம் பாபிலோநியர்களிடமும் சுமேரியர்களிடமும் பின்னர் யூதர்களிடமும் இருந்தது என்பது தெரிய வருகின்றது. இதே போல தமிழர்களின் வழக்கமான ஊர் காவல் தெய்வங்கள் முறையும் அவர்களிடேயே இருந்து இருப்பது அவர்களின் இலக்கியங்கள் மூலம் புலனாகின்றது.
மேலும் சுமேரியர்கள் வழிப்பட்ட சில கடவுள்களின் பெயர்களை நாம் காணும் பொழுது அவை தமிழ் சொற்களை ஒத்து இருப்பதை நாம் அறிய முடிகின்றது...உதாரணம்...அணு (Anu),மருது க(Maruduk), நேர்கல், நின்கல், இன்னானா(Innaana)...!!!
ஆனால் மேலே நாம் கண்ட அந்த பெயர்கள் அனைத்தையும் விட ஒரு பெயர் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றது....சுமேரியர்கள் வழிப்பட்ட ஒரு இளைய கடவுளின் பெயர் தான் அது...... தமுழ்(Tammuzh) - இது தான் அந்தக் கடவுளின் பெயர்!!!
தமுழ் இளைஞனாக சித்தரிக்கப் பட்டு இருக்கின்றான். அவனுக்காக சுமேரியர்கள் கொண்டாடிய திருவிழாக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நாம் தை திருநாள் கொண்டாடும் காலத்தினை ஒட்டியே அமைந்து உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...!!! தமிழ் நாட்டில் தமிழை பெண்ணாக உருவகப்படுத்திக் கொண்டாடிய தமிழர்கள், சுமேரியாவில் தமிழை இளைஞனாக உருவகப்படுத்தி கொண்டாடி இருக்கின்றார்கள் என்பதே அறிஞர்களின் கருத்து. அந்த பெயரினைத் தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் மொழிப் பெயர்க்க அறியாது தமுழ் என மாற்றி விட்டார்கள் எனவே தமிழ் கடவுள்....தமுழ் கடவுளாக மாறி விட்டான் என்பதும் அவர்கள் கூற்று.
சரி...இப்பொழுது நாம் 'எல்' என்று வழங்கப்படும் கடவுளினை பற்றி சற்றுப் பார்ப்போம். இந்த 'எல்' என்னும் கடவுள் மலை மேல் வீற்று இருக்கும் கடவுள் என்று அறியப்படுகின்றார். மேலும் இலக்கியங்களில் 'எல் சடை (El Shaddai)' என்றும் எல்லோன் (Elyon) என்றும் குறிக்கப்பட்டு இருக்கின்றார். எல்லோன் என்னும் சொல்லும் தமிழ் சொல்லாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
இந்தக் கடவுளைத் தான் சுமேரியர்கள் சமயமும் எபிரேயச் சமயமும் வழிப்பட்டு இருக்கின்றன...!!!
சரி...இப்பொழுது ஒரு கேள்வி...'எல்' என்ற இந்தக் கடவுளின் பெயரை நீங்கள் இதற்கு முன்னால் கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா.
என்ன இல்லையா???... கொஞ்சம் யோசிங்க... இன்னும் இல்லையா... சரி அப்படி என்றால் இந்தப் பெயர்களையாவது கேள்விப் பட்டு இருக்கின்றீர்களா... மைகேல் (Michael) ,தானியல் (Daniel) ,இசுமாயில் (ismael) ,இசுரேல் (Israel) ,ராபல் (Raphael)...!!!
கேள்விப்பட்டு இருக்கின்றீர்கள் தானே...!!!சரி நல்லது.
இப்பொழுது இன்னொருக் கேள்வி...அருள் முருகன், வேல் முருகன், பால கணேசன், செந்தில் குமரன் போன்றப் பெயர்களைக் கேள்விப் பட்டு இருக்கின்றீர்கள் தானே. இந்தப் பெயர்கள் மக்கள் தாங்கள் வழிப்படும் இறைவனின் பெயரை தங்களின் குழந்தைகளுக்கு வைத்து அழகுப் பார்த்தவை. இறைவனின் பெயரால் குழந்தைகளை அழைப்பது வழக்கம். நம்மிடையே இருக்கும் இந்தப் பழக்கம் சுமேரியர்களிடமும் இருந்து இருக்கின்றது...யூதர்களிடமும் இருந்து இருக்கின்றது. எனவே தான் 'எல்' என்று தாங்கள் வழிப்பட்ட இறைவனின் பெயரை வைத்தே தங்களின் குழந்தைகளுக்கு பெயர் இட்டு இருக்கின்றார்கள்.
மைகேல் (மை - கா - எல்) - மை என்பது கருப்பினைக் குறிக்கும் தமிழ் சொல். மேலும் அது உருவமற்ற என்ற அர்த்தத்தினையும் தரும். எனவே உருவமற்ற கடவுள் 'எல்' என்ற அர்த்தத்தில் மைக்கேல் என்ற பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.
இரப்பேல் (இறப் - எல்) - இறத்தல் என்னும் சொல் தணிப்பது அல்லது குறைப்பது என்னும் அர்த்தத்தினையும் தரும். எனவே மக்களின் பிணியினையும் கவலைகளையும் குறைக்கும் கடவுள் 'எல்' என்னும் பொருளில் இப்பெயர் அமைந்து உள்ளது என்பது அறிஞர்களின் கருத்து.
மேலும் விவிலியத்தில் ஆதாமின் மகனான அபெல் என்றப் பெயரினையும் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
அபெல் (ஆப் - எல்) - தந்தையாகிய எல் என்னும் கடவுள் என்பதே இந்தப் பெயரின் அர்த்தம் என்கின்றனர் அறிஞர்கள். தன்னுடைய தந்தையான கடவுளின் பெயரையே ஆதி மனிதன் தனது மகனுக்கு வைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.
எனவே எல் என்னும் சொல் இன்று உலகம் முழுவதும் இருந்தாலும் அது அறியப்படாத நிலையில் இருக்கின்றது. காரணம் அந்தச் சமயம் இன்று உலகில் இல்லை... யூத மதமும் சுமேரிய மதமும் அழிந்து அதன் இடத்தில கிருத்துவமும் இசுலாமும் வளர்ந்து இருக்கின்றன. யூதப் பெயர்களும் சுமேரியப் பெயர்களும் கிருத்துவப் பெயர்களாகவும் இசுலாமியப் பெயர்களாகவும் மாறி இருக்கின்றன.
ஆனால் என்ன தான் மாறினாலும் சில வழக்கங்கள் மாறவில்லை... அவை கிருத்துவத்தையும் இசுலாமையும் தமிழுடன் இணைத்து கொண்டுத் தான் இருக்கின்றன...!!!
அவை என்ன... காண்போம்!!!!
கிருத்துவம்...!!!
ஆசிய கண்டத்திலே தோன்றிய மற்றுமொரு சமயம். இயேசு கிருத்துவினால் தோற்றுவிக்கப்பட்டு அவர்தம் பன்னிரு சீடர்களால் உலகெங்கும் கொண்டு செல்லப்பட்ட ஒரு சமயம். இங்கே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ஏசுவும் சரி அவர்தம் பன்னிரு சீடர்களும் சரி ஆசியாவினைச் சார்ந்தவர்கள். ஆனால் அவ்வாறு ஆசியர்களால் ஆசியாவினில் தோற்றுவிக்கப்பட்ட அந்தச் சமயம் இன்று ஐரோப்பியர்களின் பிடியின் கீழ் உள்ளது. காரணம் எளிது ...அரசியல்!!!
ஆனால் அந்தக் கதைக்குள் நாம் இப்பொழுது செல்லப் போவதில்லை. இப்பொழுது நம்முடைய பயணம் கிருத்துவ சமயத்திற்கும் தமிழுக்கும் தொடர்புண்டா என்ற கேள்விக்கு விடையினைத் தேடியே. ஆனால் அதற்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டு இருந்த கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கின்றது.
"'எல் சடை (EL Shaddai)' என்ற சொல்லுக்கு மலையில் வாழும் கடவுள் என்பது தானே பொருள்... எல் சடை அல்லது யாகோவா (Jehovah) என்னும் அந்தக் கடவுளை யாருமே கண்டதில்லையே பின் எவ்வாறு சடை என்பதற்கு முடி என்றும் அக்கடவுள் சிவன் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள்" என்பதே அந்தக் கேள்வி.
இப்பொழுது அந்தக் கேள்விகளுக்கு விடையினைத் தேடுவோம்...!!! முதலில் 'எல் சடை' என்னும் பெயரில் இருந்தே தொடங்குவோம்.
'எல் சடை' என்பவர் மலையில் வாழும் கடவுள் என்ற அர்த்தமும் உண்டு. மேலும் எல்லா கதைகளிலும் இறைவன் மலையில் இருந்தே மக்களிடம் பேசியதாகவுமே வருகின்றது. ஏன் அவ்வாறு இருக்கின்றது?... உலகினை கடவுள் படைத்தான் என்றால் அனைத்திலும் அவன் சிறப்பாக இருக்க வேண்டும் அல்லவா... மாறாக அவனை ஏன் பெரும்பாலும் மலையில் இருப்பவனாகவே சித்தரித்து இருக்கின்றனர் என்று எண்ணுகின்றீர்களா? அதற்குரிய விடை தமிழில் இருக்கின்றது.
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி" என்னும் வாக்கியத்தில் இருக்கின்றது.
"அட அது எப்படிங்க மண்ணும் கல்லும் தோன்றுவதற்கு முன் ஒரு இனம் தோன்றி இருக்கும்... இது தமிழன் சும்மா அவன் சுய பெருமைய போற்றுவதற்காக சொன்ன ஒரு கூற்றுங்க அவ்வளவு தான்" என்று பெரும்பாலும் இந்த வாக்கியத்தின் அர்த்தம் தவறாகவே எடுக்கப்பட்டு உள்ளது. இதன் உண்மையான அர்த்தம் தமிழர்களின் வாழ்வின் படிநிலைகளை விளக்குவதாக உள்ளது.
தமிழர்கள் நிலத்தினை ஐந்து வகையாக பிரித்து வைத்து இருக்கின்றனர்.
குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடமும்.
முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை - குறிஞ்சி நிலத்துக்கும் முல்லை நிலத்துக்கும் இடையில் தோன்றும் இடம்.
மேலே உள்ள இந்த நில அமைப்புகள் மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர் என்பதனை விளக்கிக் கொண்டு இருக்கின்றது. முதலில் கற்கள் சூழ்ந்த மலையினில் வாழத் தொடங்கிய மனிதன் பின்னர் காடுகளுக்குள் குடியேறி பின்னர் வயல்வெளிகள், கடற்கரை ஓரங்கள் என்று படிப்படியாக தங்களது வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர். மேலும் மனிதன் எவ்வாறு வயல்வெளிகளுக்கும் கடலோரங்களுக்கும் வந்து நகரங்களை அமைத்து வாழ ஆரம்பித்தானோ அன்று தான் பல நாகரீகங்களும் வளரத் தொடங்கின. இதைத் தான் தமிழர்கள் மேலே உள்ள அந்த வாக்கியத்தின் மூலம் விளக்குகின்றனர்.
அதாவது, மற்ற நாகரீகங்கள் வயல்வெளிகளிலும் நகரங்களிலும் மனிதன் வாழக் கற்றுக் கொண்டப் பின்பு தான் தோன்றின ஆனால் தமிழ் நாகரீகமோ, மண் பிரதேசங்களில் அந்த நாகரீகங்கள் தோன்றும் முன்னரே, மனிதன் முதன் முதலில் தோன்றிய மலைகளிலேயே தோன்றி விட்டது. இதைத் தான் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி' என்ற வாக்கியம் விளக்குகின்றது.
சரி...இப்பொழுது 'எல் சடை' என்ற பெயரில் சடை என்னும் சொல் எவ்வாறு முடியினைக் குறித்தது என்றுப் பார்ப்போம்.
சடை என்ற சொல் சல் + தை எனும் சொற்களின் தொகுப்பே ஆகும். அதாவது நீண்ட பகுதிகளை சேர்த்து தைப்பது என்னும் அர்த்தத்தில் நீண்டுக் கொண்டே செல்வது என்பதுப் பொருள். இதன் மூலம் இறைவன் முடிவற்றவன் என்பதனை விளக்கவே அவன் சடையன் என்றும் வழங்கப்பெற்றான்.
எனவே அச்சொல்லினைத் தான் சுமேரியாவிலும் மக்கள் பயன் படுத்தி இருக்கின்றார்கள் என்று நாம் கருத முடிகின்றது. ஆனால் சடை எனும் சொல்லுக்கு எபிரேயத்தில் நீண்டு கொண்டு இருக்கும் மலைத் தொடர் என்ற அர்த்தமும் வருகின்றது. எனவே தான் அதனை ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் மலை மேல் உள்ளக் கடவுள் என்று விளக்கம் தருகின்றனர். சரி இப்பொழுது நாம் யூதர்கள் எல் சடை என்னும் கடவுளுக்கு வழங்கிய மற்றுமொரு பெயரினைப் பற்றிப் பார்ப்போம்.
'செகொவா (Jehovah)' என்று இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் தான் அது. இசுரேலியர்கள் தங்களின் கடவுளுக்கு 'யாகோவா (yaahowah)' என்று இட்டப் பெயர் தான் 'செகொவா(Jehovah)' என்று ஆங்கிலத்தில் மருவி நிற்கின்றது. இப்பொழுது நாம் அந்தப் பெயர் எவ்வாறு தமிழ் பெயராக இருக்கின்றது என்பதனைக் காண்போம்.
'யாகோவா' என்றச் சொல்லினை 'யா-கோ-ஆ' என்றும் கொள்ளலாம்.
யா என்றால் தமிழில் நீண்ட நாள் வாழ்கின்ற என்றப் பொருளும் இருக்கின்றது.
கோ - அரசன்
ஆ - தொடக்கம்.
எனவே 'யாகோவா' என்றச் சொல் 'யா-கோ-ஆ' என்றப் பெயரின் திரிபே என்றும் அதன் அர்த்தம் 'தொடக்கத்தில் இருந்தே ஆண்டுக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் அல்லது 'தொடக்கத்தில் இருந்தே வாழ்ந்துக் கொண்டு இருக்கும் இறைவன்' என்றும் கொள்ளலாம்.
மேலும் இந்த பெயர் தோன்றிய வரலாறும் மேலே நாம் கண்டுள்ள பொருளினை மெய்ப்பிப்பது போலவே உள்ளது.
விவிலியத்தில் இறைவனுக்கு யார் 'யாகோவா' என்று பெயர் இட்டது என்பது தெரியவில்லை. அநேகமாக மோசே இப்பெயரினை இட்டு இருக்கலாம் என்றே கருதப் படுகின்றது. விவிலியத்தின் படி மோசே என்பவன் இறைவனுடன் உரையாடும் பொழுது 'இசுரவேல் மக்கள் உங்களின் பெயர் என்னவென்று கேட்டால் நான் என்ன சொல்வது' என்று வினவுகின்றான். அதற்கு இறைவன் 'நானே உனது முன்னோர்களான ஆபிரகாம், ஈசாக்கு,யாக்கோபு வழிப்பட்டக் கடவுள்' என்றும் 'நானே இருக்கின்றவன்' என்றும் கூறியதாக இருக்கின்றது.
எனவே மோசே, தன் மூதாதையர்கள் காலத்திலும் சரி தன் காலத்திலும் சரி இருப்பது ஒரே கடவுளே என்ற அர்த்தத்திலும் தொடக்கத்தில் இருந்து அவரே இருக்கின்றார் என்ற அர்த்தத்திலும் அவரை 'யா-கோ-ஆ' என்று பெயர் இட்டு அழைத்தான் என்று நாம் கருத முடிகின்றது.
எனவே விவிலியத்தில் வழங்கப்பெறும் இறைவனின் பெயர்களான எல் சடையும் சரி யாகோவா வும் சரி தமிழ் பெயர்களாகவே அமைந்து இருப்பது நமக்கு புலப்படுகின்றது.
சரி...விவிலியத்தில் கூறப்பட்டு உள்ள மக்கள் தமிழர்கள் என்றால் தமிழர்களின் வழிப்பாட்டு முறையான கல் வழிபாடு விவிலியத்தில் இருக்க வேண்டுமே?... இருக்கின்றதா என்கின்றீர்களா....!!!
ஆம்...விவிலியத்தில் கல் வழிபாடு/சிவலிங்க வழிபாடு இருக்கவே செய்கின்றது....
பி.கு:
ஒவ்வொரு சமயத்தினரும் அவர்கள் வழிபடும் இறைவன் தான் உலகின் முதல் கடவுள் அல்லது ஒரே கடவுள் என்றே கருதுவர். அந்நிலையிலேயே தான் நாம் யாகோவா என்றப் பெயரினைக் காண வேண்டி இருக்கின்றது. அப்பெயர் தமிழ் சொல்லில் இருந்தே வந்து இருக்கின்றது என்பதனைக் காணவே நாம் அதனை இங்கே கண்டு இருக்கின்றோம். அதைத் தவிர்த்து முழு முதற் கடவுளான உலகைப் படைத்த இறைவனுக்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அக்காலத்தில் குல தெய்வ வழிபாட்டு முறையே இருந்ததே அன்றி முழுமுதற் கடவுட் கொள்கை இருக்கவில்லை. யாகோவா என்பது யூதர்களின் குல தெய்வமே அன்றி முழு முதற் கடவுள் அல்ல. இயேசுவிற்கும் யாகோவாவிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
பி.கு:
இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய மொழி அறிஞர் ம.சோ.விக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள். அவருடைய நூல்கள் தமிழர் சமயமும் , குமரிக்கண்டமும் தான் இந்தக் கருத்துக்களை நான் அறிந்துக் கொள்ள உதவிய நூல்கள்....
விவிலியம்...!!!
கிருத்துவர்களின வேத நூல் உலகின் தோற்றத்தில் தொடங்கி பின்னர் யூதர்களின் வரலாறாய் பயணித்து இறுதியில் இயேசு கிருத்துவின் வாழ்வினையும் கொள்கைகளையும் விளக்குவதாய் அமைந்த ஒரு நூல். கிருத்துவத்தினைப் பற்றி நாம் அறிய வேண்டுமானால் விவிலியத்தினை பற்றி முதலில் அறிய வேண்டும். எனவே தான் நாம் முன்னரே விவிலியத்தின் சில பகுதிகள் பற்றி பார்த்து இருந்தோம். அதன் அடிப்படையில்,
௧) ஆதாம் மற்றும் ஏவாள் என்ற பெயர்கள் தமிழ் பெயர்கள் என்றும் (ஆதாம்)
௨) வெள்ளத்தால் உலகம் அழிவது குமரிக்கண்ட அழிவு என்றும்
௩) நோவா என்பதும் தமிழர்களை குறித்த சொல் என்றும் கண்டு இருந்தோம். (நோவா)
சரிங்க...இது எல்லாம் நம்ம ஏற்கனவே பார்த்த செய்திகள் தான். விவிலியத்துல சிவலிங்க வழிபாடு/கல் வழிபாடு இருக்கு அப்படின்னு சொன்னீங்களே அதப் பத்தி சொல்லுங்க அப்படிங்கிறீங்களா... அதனை பார்ப்போம்...ஆனால் அதற்கு முன் நாம் இன்னொரு தகவலையும் கண்டு விட்டால் நன்றாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.
நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்..விவிலியம் கூறும் கதையினை ஒத்த கதைகள் சுமேரிய இலக்கியத்திலும், பாபிலோனிய இலக்கியத்திலும் காணப்படுகின்றன என்று. அவ்விலக்கியங்களில் கதைகள் மட்டும் ஒரே மாதிரியாக அல்லாது சில பெயர்களும் கூட ஒரே மாதிரியாக இருக்கின்றன என்பதனையும் நாம் கண்டு இருக்கின்றோம். விவிலியத்தில் ஆதாம் என்றுக் கூறப்படும் மனிதன் சுமேரிய இலக்கியத்திலும் பாபிலோனிய இலக்கியத்திலும் ஆதப்பா என்று வழங்கப்படுகின்றான். விவிலியத்தில் நோவா என்று வழங்கப்படுபவன் சுமேரிய இலக்கியங்கள் மற்றும் பாபிலோனிய இலக்கியங்களில் 'ஊற்றுநாவிபித்தன்' என்று அழைக்கப்படுகின்றான்.
மேலும்,
ஆதாம் தொடங்கி நோவா வரை விவிலியம் பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.
அதேப் போல் சுமேரியக் கதைகளும் ஆதப்பா தொடங்கி ஊற்றுநாவிபித்தன் வரை பத்து தலைமுறையினரை விவரிக்கின்றது.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கின்றது. அந்தக் கதைகள் கூறும் பத்து தலைமுறையினரில் ஏழாம் தலைமுறையினராக கூறப்படுபவனின் பெயர் அந்த இரண்டு கதைகளிலும் ஒன்றாகவே இருக்கின்றது.
'ஏனோக்கு' - அந்தக் கதைகளின் படி இவன் ஒருவன் தான் இறைவனை நேரில் கண்டு இறைவனோடு சென்றுக் கலந்தவன். இப்பொழுது இந்தப் பெயரைத் தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
'ஏனோக்கு' என்பது 'யானோக்கு' என்ற சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
'யானோக்கு' என்னும் சொல் - யா + நோக்கு என்று பிரிந்து - யா என்னும் கடவுளை நோக்கியவன்/கண்டவன் என்னும் பொருளினைத் தருவதினை நாம் காணலாம். விவிலியமும் இவனை இறைவனை நேரில் கண்டவன் என்று கூறுவது இங்கே நோக்கத்தக்கது.
"ஏனோக்கு மொத்தம் முந்நூற்று அறுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்தான். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்தான். பின்பு அவனைக் காணவில்லை. ஏனெனில் கடவுள் அவனை எடுத்துக்கொண்டார்." (தொடக்க நூல் 5: 20-24)
இங்கே 'யா' என்பதும் 'நோக்கு என்பதும் தமிழ் சொற்கள் என்பது கவனிக்கத்தக்கது. இது விவிலியம் கூறும் முதல் மனிதர்கள் தமிழர்கள் என்பதற்கும் முதல் மொழி தமிழ் என்பதற்கும் இன்னொரு சான்றாக நாம் எடுத்துக்கொள்ளத் தக்க ஒன்றாகும். சரி.. இனி விவிலியத்தில் கல் வழிபாடு இருந்ததா என்பதனைக் காண்போம். அதற்கு நாம் யாக்கோபுவை காண வேண்டி இருக்கின்றது.
அந்தக் கதையின்படி யாக்கோபு ஆரான் என்னும் இடத்துக்கு பயணம் செய்கின்றான். அவ்வாறு பயணிக்கும் பொழுது இரவு நெருங்கவே தலைக்கு ஒரு கல்லினை தலையணையாக வைத்துக் கொண்டு உறங்குகின்றான். அன்று இரவு அவன் கனவு காணுகின்றான். அக்கனவில் இறைவன் அவனிடம் உரையாடுகின்றார். தூக்கம் கலந்து எழுந்த யாக்கோபு 'இந்த இடத்தில இறைவன் உண்மையாகவே இருக்கின்றார்' என்றுக் கூறி தான் இறைவனை உணர்ந்த இடத்தில தான் தலைக்கு வைத்த கல்லினை எடுத்து நட்டி அதற்கு எண்ணெயினை ஊற்றி 'இக்கல் தேவனோட வீடாக' இருக்கும் என்றுக் கூறி அந்த இடத்துக்கு பெத்தேல் என்று பெயரிட்டான். (ஆதியாகமம் -28 : 10 - 12 )
மேலும் விவிலியத்தில் பல இடங்களில் இதே மாதிரியான வழிப்பாட்டு முறைகளை நாம் காண முடிகின்றது.
யாக்கோபு அவனுக்கும் லாபான் என்பவனுக்கும் இடையே ஒரு உடன்பாடு ஏற்படும் பொழுது சாட்சியாக ஒரு கல்லினை நட்டி வைத்து விட்டு அதனை சுற்றி கற்களைக் குவித்து வைத்துக் கொள்கின்றான். அதற்கு கலீடு என்றும் அவன் பெயரிடுகின்றான். (ஆதியாகமம் - 31 : 44 - 50 )
"மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்." - யாத்திராகமம் (24 - 4 )
"அவர்கள் யோர்தானிலிருந்து எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி," - யோசுவா (4 - 20 )
"அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்." - சாமுவேல் (7 - 12 )
இவ்வாறு விவிலியம் கூறும் பழைய ஏற்பாட்டில் கல்லினை நட்டி வைத்து அதனை வழிபடும் பழக்கம் மக்களிடம் இருந்து இருக்கின்றது என்பது நமக்கு தெரிய வருகின்றது. அவர்கள் கல்லினை இறைவனாக கருதவில்லை மாறாக இறைவன் இருப்பதற்கு ஒரு அடையாளமாகவே கருதினார்கள் என்றும் நாம் காண முடிகின்றது. மேலும் மற்றக் கல்லில் இருந்து இந்தக் கல்லினை வேறுப்படுத்திக் காட்டவே அதில் எண்ணெயும் ஊற்றினர் என்றும் அறிய முடிகின்றது.
சரிங்க... அவங்க கல்லினை வைத்து வழிப்பட்டாங்க. ஆனா அத எப்படி சிவலிங்க வழிப்பாடு அப்படின்னு சொல்றீங்கனு கேட்குறீங்களா...
சிவலிங்கம் என்பது இறைவனை அடையாளப்படுத்திய கல்லினைக் குறிக்க பயன்படுத்திய சொல்லே ஆகும். கிருத்துக்கு முன்பட்ட நூற்றாண்டுகளில் சிவலிங்கம் என்ற சொல் எந்த இலக்கியங்களிலும் கிடைக்கப்படவில்லை. கிருத்துக்கு பின்பட்ட நூற்றாண்டுகளில் தான் சிவலிங்கம் என்ற சொல் காணப்பெறுகின்றது. எனவே மக்களால் ஆதி இறைவனை குறிக்க பயன்பட்ட கல்லுக்கு பின்னாளில் சிவலிங்கம் என்று பெயர் வந்தது என்று நாம் கருத வேண்டியிருக்கின்றது.
மேலும் சிவலிங்க வழிப்பாட்டில் சிவலிங்கம் இருக்கும், அதன் முன்னர் நந்தி எனப்படும் சிவனின் வாகனமான காளை இருக்கும். ஆனால் காளை என்றால் கொம்புகள் இருக்க வேண்டும், ஆனால் சிவலிங்கத்தின் முன் இருக்கும் நந்திக்கோ முழுதாய் வளர்ந்த கொம்புகள் கிடையாது...கொம்புகள் வளர்ந்துக் கொண்டு இருக்கும் நிலையிலேயே நந்தியின் சிலைகள் காணப்படுகின்றன. எனவே நந்தி என்று சிவலிங்கத்தின் முன் வைக்கப்பட்டு இருப்பது காளை அல்ல என்றும் அது வளர்ந்துக் கொண்டு இருக்கும் கன்றுக்குட்டி தான் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே சிவலிங்கம்...அதன் முன்னர் ஒரு கன்றுக் குட்டி - இதுவே தான் சிவலிங்க வழிப்பாட்டு முறையின் தோற்றம் ஆகும்.
இதே மாதிரியான வழிபாடு விவிலியத்திலும் இருக்கின்றது.
எரோபெயாம் என்பவன் மக்கள் வழிபடுவதற்கு இரண்டு கன்றுக் குட்டி சிலைகளை உருவாக்கி ஒன்றை பெத்தேலிலும் மற்றொன்றினை தானிலும் வைத்தான். அதுவரை கல்லும் பலிபீடமும் மட்டுமே இருந்த இடத்தில இப்பொழுது கன்றுக்குட்டியும் சேர்ந்தது. (இராஜாக்கள் I - 12 : 28 : 32 )
மேலே உள்ள விவிலிய பகுதியின் மூலம் அதுவரை கல்லினை மட்டுமே பலி கொடுத்து வணங்கிக்கொண்டு இருந்த மக்களின் வழிப்பாட்டு முறையில் புதிதாக கன்றுக்குட்டியும் சேர்க்கப் பட்டது என்பதனை நாம் அறிந்துக் கொள்ளுகின்றோம்.
சரி இதுவரை நாம் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டு உள்ள செய்திகளில் கல் வழிப்பாட்டினை பற்றிப் பார்த்தோம். தமிழர்களின் பழக்கமான கல் வழிபாடு சிந்து சமவெளியில் இருந்து மேற்கே சுமேரிய மற்றும் பாபிலோனிய வழிப்பாட்டு பழக்கமாக மாறி பின்னர் இசுரவேலர்களின் பழக்கமாகவும் மாறி இருப்பதனை நாம் கண்டு இருக்கின்றோம்.
இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இறைவனை கல்லினால் அடையாளப்படுத்தி இருக்கின்றார்களா என்பதனைக் காண்போம்.
"மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்," - (பேதுரு I - 2 : 4 )
மேலே உள்ள வாக்கியத்தில் பேதுரு, இயேசுவை உயிருள்ள கல் என்று குறிப்பிட்டு உள்ளார். இங்கே அவர் ஏன் கல் என்ற சொல்லினை பயன் படுத்த வேண்டும். அதுவும் உயிர் உள்ள கல் என்றுக் கூறி இருக்கின்றார். கல்லுக்கு தான் உயிர் கிடையாதே...பின்னர் ஏன் அவர் உயிருள்ள கல் என்று கூறி இருக்கின்றார்? விடையினைக் காண்போம்...
நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம்...மக்கள் கல் நட்டி தங்களின் கடவுளை வழிப்பட்டு வந்தனர் என்று. கல் என்பது ஒரு அடையாளம். அவ்வளவே. தாங்கள் உயிரில்லாத கல்லின் மூலமாக வழிபட்டு வந்த இறைவன் உயிருள்ள மனிதனாக அவர்களுக்காக வந்ததை தெரிவிக்கவே உயிருள்ள கல் என்று பேதுரு கூறி இருக்கின்றார் என்கின்றனர் அறிஞர்கள்.
உயிரற்ற கல் வழிப்பாடு - அருவ நிலை - சிவலிங்கம்.
உயிருள்ள கல் - உருவ நிலை - இயேசு.
இவ்வாறே விவிலியத்தில் கல் வழிபாடு கூறப்பட்டு/பின்பற்றப்பட்டு உள்ளது. சரி...இதைப் போலவே இசுலாம் சமயத்திலும் கல் வழிப்பாட்டு முறை இருக்கின்றது. ஆனால் அதனை நாம் மற்றொரு பதிவில் பின்னர் காண்போம். இப்பொழுது தோமா நமக்காக தமிழகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றார்.
என்ன தோமாவா....தமிழகத்திலா??? என்கின்றீர்களா!!! ஆமாங்க... தோமா தான். அதுவும் நம்ம சென்னையில தான். அவரின் வரலாற்றின் கூடவே சாந்தோம்...பரங்கி மலை..ஆகியவற்றின் வரலாறும் காத்திருக்கின்றன ...பயணிப்போம்!!!
மேலும் சில தகவல்கள்:
நாம் மேலே இறைவனை நினைத்து நட்டப்பட்ட கற்களுக்கு எண்ணெய் ஊற்றி மக்கள் வேறு கற்களில் இருந்து அவற்றினை வேறுப்படுத்தினர் என்றுக் கண்டு இருந்தோம். அதன் அடிப்படையில் இரு தகவல்கள்.
மேசியா என்றால் 'எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்பது பொருள்.
கிருத்து என்றாலும் அபிசேகம் பண்ணப்பட்டவர் என்பதே பொருள்.
ஆனால் விவிலியத்தில் கிருத்துவினை எவரும் அபிசேகம் செய்ததாக செய்திகள் இல்லை. அது அப்படி இருக்க அவரை ஏன் அவ்வாறு அழைக்கின்றனர் என்றக் கேள்விக்கு 'அது வரை மக்கள் கல்லில் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டு வந்த இறைவன் இன்று மனித வடிவில் வந்து இருக்கின்றார். இவரைத் தான் நாம் எண்ணெய் ஊற்றி வழிப்பட்டோம். எனவே இவர் எண்ணெய் ஊற்றப்பட்டவர் என்று மக்கள் கருதி அவரை கிருத்து என்று அழைத்தனர்' என்றே விவிலிய அறிஞர்கள் கூறுகின்றனர்....

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...