திங்கள், 18 மே, 2015

"தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்" - தந்தை பெரியார்(1938)

தமிழ் மொழியும், தமிழ் இனமும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களுக்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களுக்கும் 2016 தேர்தலை நோக்கிய ஒரு பொது அறிவிப்பு

"தமிழர்" என்னும் தமிழ் பெயரே "திராவிடர்" என்று சமசுகிருதத்தில் குறிக்கப்படுகின்றது என்பது எவராலும் மறுக்க இயலாத வரலாற்று உண்மை.

திராவிடர் கழகத்தின் நோக்கம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், 1944 இல் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் அடங்கியிருந்த சென்னை மாகாணத்தில் ஆரியப் பிராமணர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை எதிர்த்து, ஆரியரல்லாத மக்களை ஒன்றிணைக்க திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தமை காலத்தின் கட்டாயமாக இருந்தது.

திராவிட அரசியல் கட்சியின் துரோகம்

பெரியாரின் திராவிடர் கழகத்தின் பிராமண எதிர்ப்புக்கு எதிராக, பிராமணர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு பிராமணர்களின் ஆதரவுடன், திராவிடர் என்னும் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சி 1949 இல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஐந்து வகை நாத்திகப் பிரிவுகளில், "நானே கடவுள்" எனக் கூறும் பிராமணர்கள் நயவஞ்சக நாத்திகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுடன் இணைந்த திராவிட அரசியல் கட்சி, பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டு, பெரியாரை நாத்திகராகக் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியது. 

இதன் பயன் பெரியார் என்றால் நாத்திகர் என்று மட்டுமே பொது மக்கள் நம்புகின்றனர். இது பெரியாருக்கு எதிரான துரோகச் செயல் ஆகும்.

எந்த பிராமணர்களுக்கு எதிராகப் பெரியார் இயக்கத்தை உருவாக்கினாரோ அந்த பிராமணர்களே, பெரியார் இயக்கத்தின் பெயரால் தமிழ் நாட்டை ஆளும் கொடிய நிலை திராவிட அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது கொடிய துரோக நிலையாகும்.

ஆதிக்க வெறி

இந்தியா 1947 இல் விடுதலையடைந்து, 1956 க்குப் பின்னர் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கு தனித்தனி நாடுகள் தோன்றின. தெலுங்கர் தெலுங்கு நாட்டையும், மலையாளி மலையாள நாட்டையும், கன்னடர் கன்னட நாட்டையும் ஆண்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை மட்டும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் மாறி மாறி ஆள வேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மையுடன், தமிழ்நாட்டில் "தமிழர்" என்னும் தமிழ் பெயருக்குப் பதில், "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி ஆண்டு வருவது ஆதிக்க வெறியைக் காட்டுவதாகும்.

தமிழரல்லாதார் ஏன் இணைவதில்லை?

தமிழரல்லாத, தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும், சமசுகிருத மொழியின் செல்வாக்கில் இருக்கின்ற காரணத்தால், "திராவிடர்" என்று குறிப்பிடும் பொழுது "தமிழர்" என்றே நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றார்கள். இதனால் அவர்கள் தமிழ் நாட்டுத் திராவிட கட்சிகளுடன் இணைவது இல்லை.

இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி தெலுங்கு நாட்டிலோ, மலையாள நாட்டிலோ, கன்னட நாட்டிலோ, திராவிட இயக்கக் கிளைகளோ, திராவிட அரசியல் கட்சிகளின் கிளைகளோ இல்லை. தப்பித்தவறி அவ்விடங்களில் இருந்தாலும் தமிழர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளிலும் இதுவே நிலை.

நயவஞ்சகம்

இதனால், தமிழர்களைத் தமிழ்நாட்டில் அடிமைப்படுத்துவதற்காக மட்டுமே தெலுங்கர், மலையாளி, கன்னடர்களால் நயவஞ்சகமாகப் பயன்படுத்தப்படும் "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் விடுதலை அடைய வேண்டும். தாங்களே தமிழ் இனத் தலைவர் என்று ஏமாற்றி தமிழ் மொழியை அழிப்பதைக் கைவிட வேண்டும்.

நம்பிக்கைத் துரோகம்

ஆரியப் பிராமணர்களின் இயக்கமான RSS இன் இந்துத்துவா இயக்கங்களுடனும், அதன் அரசியல் கட்சியுடனும் கூட்டு வைத்து, தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் கூட்டுச் சதியும் நம்பிக்கைத் துரோகமும், இவர்களால் செய்யப்பட்டு வந்ததையும், செயல்படுவதையும் இவர்களால் மறுக்க முடியாது. ஏனெனில் இவர்கள் தங்கள் தாய் மொழிப் பற்றினால் தமிழ் மொழியை அழிக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்களின் இகழ்ச்சி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டு, தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் திராவிடக் கட்சிகளின் சதிச் செயலால் தமிழ் தேசியச் சிந்தனையாளர்கள் தந்தைப் பெரியாரை இகழும் நிலையை உருவாக்கி இருப்பதை மறுக்க இயலாது.

வெட்கப்படத்தக்க சாதிப் பெருமையும், நிலவுடைமையும்

தமிழ் இனத்தை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தமையால், அந்நியர்களிடம் பெற்ற சாதிப்பட்டமாகிய சற்சூத்திரர் (சிறந்த அடிமை), சூத்திரர் (அடிமை) என்னும் இரு பிரிவினரின் ஆரிய அடிமைத்தனத்தையே தந்தை பெரியார் வன்மையாகக் கண்டித்து, சாதி ஒழிப்பில் ஈடுபட்டார் என்பது வரலாறு. இந்த நோக்கில் இலங்கையில் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த கருணாவும், டக்லஸ் தேவானந்தாவும் இன்று அமைச்சர் பதவியில் இருப்பதும், அந்நியர்களை எதிர்த்தவர்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டும் வேட்டையாடப்படுவதும் எண்ணிப் பார்கத்தக்கவை.

இந்த நோக்கில் தமிழ் ஞானப் பரம்பரையில் பிறந்து தமிழர் சமயக் கோவில்களில் பூசாரிகளாயிருந்து அந்நியர்களை எதிர்த்தமையால் கொலை செய்யப்பட்ட நந்தனார் பரம்பரையும், திருப்பாணாழ்வார் பரம்பரையும் கோவில்களில் இருந்து விரட்டப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு தீண்டத்தகாத கீழ் சாதி என இழிவு படுத்தப்படுவதும், அந்நியர்களுக்கு தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த சற்சூத்திரர்களே தமிழர்களில் மேல் சாதி என சைவ மடாதிபதிகளாக இருப்பதும், இவர்கள் அனைவரும் நில உடைமையாளர்களாக இருப்பதும், ஏன் என்பது நமக்கு விளங்கும். இந்த நோக்கில் தம் சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்து மனித நேயத்திற்கு எதிராக அந்நியர்களிடம் பெற்ற சாதிப் பெருமையும், நிலவுடைமையும் மிகவும் வெட்கப்படத்தக்கது ஆகும். நியாயமான சிந்தனையுடைய அனைவரும் வெட்கப்படுவார்கள், திருந்துவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

புதைகுழியில் சாதி ஒழிப்புக் கொள்கை

இன்று சற்சூத்திரரிலும், சூத்திரரிலும் ஒரு பகுதியினர் திராவிடர் என்னும் பெயரிலுள்ள இயக்கங்கள் மற்றும் கட்சிகளிலும், மறுபகுதியினர் தமிழ் தேசியச் சிந்தனையாளர் என்னும் பெயரிலும் நுழைந்துக் கொண்டு, தந்தைப் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இவர்களைப் பின் இருந்து ஆரியப் பிராமணர்கள் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. இதனால் தந்தை பெரியாரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் இயக்கங்கள், கட்சிகளின் வழியாகவும், தமிழ் தேசியச் சிந்தனையாளர் வழியாகவும் தந்தை பெரியாருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பிராமணர்களின் சூழ்ச்சியால் புதை குழியில் இருக்கின்றது. கடவுள் பெயரால் சாதிப் பெருமையை நம்புகின்றவர்களை எதிர்த்த பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே காட்டப்படுகின்றார். அவருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கிறது.

வெட்கப்பட வேண்டிய சாதிப் பெருமையிலிருந்து விடுதலையடைந்த தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களும், திராவிட இயக்கம் மற்றும் கட்சியினரும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

சாதி ஒழிப்பும், பொருளாதார சமத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். மன்னர் ஆட்சிக்கால வன்முறை இல்லாமல், மக்கள் ஆட்சிக்கால மனம் திருந்துதலால் வரும் ஆன்மீகப் பொது உடைமை இதற்கு ஏற்ற தீர்வு ஆகும். இதற்கு இப்பொழுது இருக்கும் ஐ.நா சபை பயன்படாது. இதில் பொதுமக்களுக்கு இடமில்லை, நாடுகளுக்கு மட்டுமே இடம் உண்டு. இதனால், உலக மக்களாட்சியும், உலக மக்கள் நீதிமன்றமும் அமைக்கப்பட வேண்டும். இது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் தமிழர் சிந்தனையால் உருவாக்கக்கூடியது ஆகும். இதற்கு அடிப்படையாக வேண்டுவது கடவுள் அனுபவம்.

இந்துத்துவாவும் இந்து மதமும்

தந்தை பெரியார் காலத்தில் நயவஞ்சக நாத்திகப் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கும், தமிழ் ஞானிகளால் வளர்க்கப்பட்ட இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படவில்லை. அப்படியிருந்தும், பெரியாருடன் நெருக்கமாக இருந்த குன்றக்குடி அடிகளார், பெரியாரின் நெற்றியில் திருநீற்றைப் பூசிய பொழுது, அதைப் பெரியார் அழிக்கவில்லை என்னும் வரலாற்றில் ஆழமான கருத்து பொதிந்து கிடக்கிறது. பெரியார் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கு எதிரானவரே தவிர, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனக் கூறும் தமிழ் ஞானிகளின் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்லர் என்பதுவே அது ஆகும்.

மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கும் இந்து மத வரலாறு

கடவுள் இப்பேரண்டத்தை ஆளுகின்றார் என்பதை தமிழ் ஞானிகள் மட்டுமே உலகின் மற்ற எந்த மொழியிலும் இல்லாமல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியலின் வழி நிலை நாட்டி இருக்கின்றார்கள். ஆன்மவியலில், அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மற்ற மூன்றும் அடங்கி இருக்கின்றன. இதற்குரிய ஒப்பற்ற தமிழ் நூல் சிவஞான போதம் ஆகும். இதிலே ஆன்மீகப் பொதுஉடைமை அடங்கி இருக்கின்றது(சூத்திரம் 12).

தமிழ் ஞானிகளில் சிறந்தவராக திருவள்ளுவர் விளங்குகின்றார். அவர் வாழ்ந்த மயிலாப்பூரில் வேதாந்தக் கொள்கையின் விளக்கமாக முதன் முதலில் அமைந்த ஆதிக் கபாலீசுவரர் கோவிலே இந்து மதத்தின் முதல் கோவில்.

1. இந்தவரலாற்று உண்மை மறைக்கப்பட்டுமறைந்து கிடக்கின்ற காரணத்தால், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இந்துத்துவாவிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய 7 நீதிபதிகளை அரசியல் சட்ட பெஞ்சிக்கு நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

2. ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கை தமிழர்களின் இந்து மதத்தை அடிமைப்படுத்தி உள்ளது. இதனால் உண்மை இந்திய மக்கள் ஆரியர்களின் சாதி ஏற்றத் தாழ்விற்கு அடிமைப்பட்டு பயங்கரத் துன்பங்களில் இன்றளவும் இருக்கின்றனர். இந்திய மக்களின் இந்தத் துன்பங்களை நீக்கப் போவதாக உலகளாவிய கிருத்துவ, இசுலாமியத் தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்தியாவின் உள்விவகாரத்தில் அந்நிய நாட்டிலிருக்கும் மதத் தலைவர்கள் தலையிட உரிமை இல்லை. இந்த உரிமை தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்களுக்கும் சாதிப் பெருமையிலிருந்து விடுதலை அடைந்த தமிழ் தேசியச் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இதற்குப் புதை குழியிலிருந்து தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை தூக்கி எடுக்கப்படல் வேண்டும். இந்தியா முழுவதும் சாதி ஒழிப்பு செயல்படுத்தப் பட வேண்டும்.

தந்தை பெரியாரின்உண்மைத் தொண்டர்களுக்கு

இந்தியாவின் உச்ச நீதி மன்றமும், உலகளாவிய கிருத்துவ, இசுலாமிய அமைப்புகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை நோக்குவனவாக இருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் மறைந்து கிடக்கும் இந்து மதத்தை அறிய முற்படுகின்றது. உலகளாவிய கிருத்துவ இசுலாமிய அமைப்புகள் இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வை நிலை நாட்டும் மனுநூல் கொள்கையான இந்துத்துவாவினால் துன்புறுத்தப்படும் இந்திய மக்களைப் பற்றிக் கவலை கொள்ளுகிறது. இது நியாயமான தன்னலமற்ற கவலையா? என்பது போகப் போக தெரியும்.

இந்துத்துவா சமசுகிருதத்தினில் இருக்கின்றது. இந்து மதம் தமிழ் மொழியில் இருக்கின்றது. இந்துத்துவாவின் பிடியில் இருந்து இந்து மதத்தை விடுவிக்க தமிழ் மொழியாலும், தமிழ் இனத்தாலும் மட்டுமே முடியும்.

தமிழ் மொழியும், தமிழ் மொழியும் அழிக்கப்பட்டு முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது. காரணம் அந்நியர்களின் நயவஞ்சகத்தாலும் நம்பிக்கைத் துரோகத்தாலும் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டினை ஆள முடியவில்லை. 2016 இல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தந்தை பெரியாரின் 1938 கூற்றுப்படி "தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்". அதற்குத் தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் சாதிக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்பும் இந்து மத விடுதலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதனால் இந்து மத விடுதலைக்கு பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை புதைக் குழியில் இருந்து தூக்கி எடுக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். பெரியாரின் உண்மைத் தொண்டர்களும் விடுதலை அடைந்த தமிழ் சிந்தனையாளர்களும் இந்து மத விடுதலையில் ஒன்றிணைந்து சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வர வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. போலிகள் அகற்றப்பட வேண்டும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் பக்குவப்படுத்தும் ஆர்வமுள்ள தன்மானத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அந்நியர்களின் அழிவில் இருந்து காக்க நியாயமான எந்தத் தியாகத்திற்கும் ஆயுத்தமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தியாகச் சிந்தனையுடைவர்களை வரவேற்கின்றோம் - மு.தெய்வநாயகம்

தொடர்பு:

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்
நிறுவனர் : இந்துமத விடுதலை முன்னணி
ஒருங்கிணைப்பாளர்: அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு
எண் 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம் சென்னை - 600 023
044-26743842
You might like:

புதன், 13 மே, 2015

     சூத்திரம் 12 : ஆன்மாவே கோயில்



 


 செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

பதவுரை:

செம்மலர் - சிவப்பு மலர் போன்ற

நோன்தாள் - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவமாகிய நோன்பினில் நிலை நின்ற இறைவனின் திருவடிகளை

சேரல் ஒட்டா - சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நின்ற

அம்மலம் கழீஇ - அக்கொடிய பாவம் கழுவப்பட்டு

அன்பரொடு மரீஇ - என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு

மால் அற - ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு

நேயம் மலிந்து - ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு

அவர் வேடமும் - ஆன்மாவின் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலைப் பெற்ற நிலையில் அது

அரன் - பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன்

ஆலயம் தானும் என - மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து

தொழுமே - இறைவனை வாழ்த்தி வணங்குமே

பொருள்:

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவத்தில் நிலை நின்று சிகப்பு மலர் போன்று விளங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நிற்கும் கொடிய பாவம் கழுவப்பட்டு, என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு, இறைவனின் புதிய சாயலைப் பெற்று, பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து தன்னை மீட்டு ஆட்கொண்ட இறைவனை வாழ்த்தி வணங்கி இன்புறும்.

இறைவனின் திருவடிகளில் இணைந்த ஆன்மா, மயக்கம் முற்றிலுமாக நீங்கப் பெற்று ஆன்மீக நேயத்தால் நிரப்பப் பெறுகின்றது. அவ்வாறு நிரப்பப்பட்ட ஆன்மா எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குச் சித்தாந்த சாத்திரத்தின் திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகின்றது.

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான். - திருக்களிற்றுப்படியார் 55


இவ்வாறு அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவழியும் ஆன்மாவாக, இறைவன் வாழும் திருக்கோயிலாக மாறுகின்றது. அதன் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலாகிய இறை வேடத்தை தாங்கிக் கொள்கின்றது. என்பையும் பிறர்க்கீயும் அன்பனாக மாறுகின்றது. இப்படிப்பட்டவர்களே இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயில்கள் ஆகின்றனர். இறைவனை இடைவிடாது தொழும் பெரும்பேற்றை அடைந்து இறைவனில் இன்புறுகின்றனர். இதனையே இறைவனை உணர்ந்தவர்கள் கூறிச் சென்று உள்ளனர்

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இந்த நிலையே அவர்கள் இடைவிடா இன்பத்தை, இரவா இன்பத்தை அடையும் அதி உயர் நிலையாகும். இவ்வகையில் அடையும் இன்பம் என்றுமே அழிவதில்லை. அந்த இன்பம் இவ்வுலகிலேயே தொடங்குகின்றது.

முற்றும்.

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:

ஞாயிறு, 10 மே, 2015

சூத்திரம் 11 : அன்பர் திருவடியில் ஆன்மா



காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

காணும் - உலகப் பொருளைக் கண்டு அறியக்கூடிய

கண்ணுக்கு - கண்ணாகிய உறுப்பிற்கு

காட்டும் - உள்ளிருந்து காட்டுகின்ற

உளம்போல் - ஆன்மாவைப் போன்று

காண - பாசத்தால் மறைபுண்டிருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் அதனதன் இயல்பின்படி தெளிவாய் அறிந்து கொள்ளுமாறு

உள்ளத்தைக் கண்டு காட்டலின் - இறைவன் ஆன்மாவைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால்

அயரா அன்பின் அரன் - மயக்கம் சிறிதும் இல்லாத, என்பையும் பிறர்க்கீயும் அன்பனாகிய, பாவத்தை அரித்தெடுக்கும் இறைவனுடைய

கழல்செலுமே - திருவடியைச் சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்

பொருள்:

உலகப் பொருளைக் கண்டு அறியக் கூடிய கண்ணாகிய உறுப்பிற்கு அது காணுமாறு உள்ளிருந்து காட்டுகின்ற ஆன்மாவைப் போன்று, பாசத்தால் மறைப்புண்டு இருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் தெளிவாக அறிந்துக் கொள்ளுமாறு அதைத் தேடி வந்து, அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால், மயக்கம் சிறிதும் இல்லாதவனும், என்பையும் பிறர்க்கீயும் அன்பையுடையவனும், பாவத்தை அரித்தெடுப்பவனும் ஆகிய இறைவனுடைய திருவடியை ஆன்மா சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்.

இறைபணியில் ஆன்மா நிற்கும் பொழுது மலம், மாயை, வல்வினை ஆகிய மூன்றும் நீங்குகின்றன என்றால் கடவுள் தன்னுடைய வழியை ஆன்மாவிற்குத் தெளிவாக காட்டுகின்றானா? அனுதினமும் அவன் வழியில் நடத்துகின்றானா? என்னும் கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகள் ஆம் என்பதே.

கண் காட்டுகின்றது. காணுகின்ற கண்ணிற்குப் பொருளைக் காட்டுவது உள்ளமாகிய ஆன்மாவே ஆகும். ஆன்மாவின் துணையின்றி, கண் பொருளைக் காண இயலாது. அதே போன்று உள்ளம் நடக்க வேண்டிய வழியை அதைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து அதற்குக் காட்டுபவனாக இருப்பவன், அதன் மீது அயரா அன்பினைக் கொண்ட கடவுளே ஆகும். கடவுளின் அன்பிற்கு ஓர் எல்லை உண்டோ! ஆகவே அன்பின் உறைவிடமாக விளங்குபவனும், பாவத்தை அரித்தெடுக்கும் அரனுமாகிய கடவுளுடைய திருவடிகளை ஆன்மா சேரும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:

சூத்திரம் 10 : ஆன்ம ஈடேற்றம்



அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகிய இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதவுரை:

அவனே - ஞானக்கண்ணால் உணரப்பட்ட கடவுளே

தானே ஆகிய - தன்னை முழுமையாக ஆட்கொண்டவனாகிய நிலையில்

அந்நெறி - அவன் காட்டும் வழியில்

ஏகனாகி - தன்னை ஒப்படைத்து, அவன் வழியில் ஒன்றாகி

இறைபணி நிற்க - இறைவன் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க

மலம் - ஜென்ம பாவமாகிய சகசமலமும்

மாயை - சகசமலத்தின் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல் இறைவனுக்கு அடிமையாகி இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும்

தன்னொடு - ஆகிய இவற்றுடன்

வல்வினை - (சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டின் காரணமாகச் செயல்படக் கூடிய) கொடிய பாவ வினைகளும்

இன்றே - இல்லாமல் போயிற்றே.

பொருள்:

ஞானக் கண்ணினால் உணரப்பட்ட கடவுளே தன்னை முழுமையாக ஆட்கொண்ட நிலையில், அவன் காட்டும் வழியில் தன்னை ஒப்படைத்து அவன் வழியில் ஒன்றாகி கடவுள் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க, ஜென்ம பாவமாகிய சகசமலமும், சகசமலத்தினின்று விடுபட்டு இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும், சகசமலம், போராட்டம் ஆகியவற்றின் காரணமாக செயல்படக்கூடிய கொடிய பாவ வினைகளும் இல்லாமல், இவற்றினின்று முற்றிலும் விடுதலை அடைந்ததாய்ப் பரிசுத்த நிலையை ஆன்மா அடைகின்றது.

இவ்வாறு இடைவிடாமல் கடவுளை ஞானக்கண் கொண்டு நோக்கித் தியானிக்க, தியானிக்க, தனது சித்தத்தை முழுமையாக விட்டு கடவுளுடைய சித்தத்தையே செயல்படுத்தும் நிலைக்கு ஆன்மா வளர்கின்றது. 'இனி நான் அல்ல...என்னுள் வாழும் கடவுளே என்னைச் செயல்படுத்துகின்றான்' என்ற நிலைக்கு ஆன்மா வரும் பொழுது கடவுள் ஏவும் பணியில் தன்னை மறந்து ஒன்றித்து விடுகின்றது. அந்நிலையில் ஆன்மா செய்யும் செயல்கள் யாவும் கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் செயல்களாக மாறி விடுகின்றன. பிறவியிலேயே இவனைத் தொடர்ந்து வரும் சகசமலம் அழிந்து விடுகின்றது.

சகசமலத்திற்கு அடிமையாய் இருந்து அதன் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல், சகசமலத்தில் இருந்து விடுதலைப் பெற்று, கடவுளுக்கு அடிமையாகி இறை பணி செய்வதால், மாயையாகிய உடலின் போராட்டங்கள் நீங்குகின்றன. சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டில் இருந்து விடுதலைப் பெற்ற காரணத்தால், இவை இரண்டன் காரணமாகச் செயல்படக் கூடிய பாவ வினைகளும் இல்லாமல் அழிகின்றன.

அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் தன் உறுப்புகளை முன்பு அது அடிமை ஆக்கி இருந்தது. அதுபோல இப்பொழுது தூய்மையில் (பரிசுத்தத்தில்) மலரும் ஏற்புடைய வாழ்விற்கு அது தன் உறுப்புகளை உட்படுத்திக் கொள்கின்றது.

முன்னே பாவத்திற்கு அடிமையாயிருந்த ஆன்மா, பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமையாகின்றது. இதனால் அதற்குக் கிடைத்துள்ள பலன் தூய்மையடைவதே, பரிசுத்தம் ஆவதே ஆகும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:
சூத்திரம் 9 : ஆன்ம முயற்சி
ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே.

பதவுரை:

ஊனக்கண் பாசம் உணராப் பதியை - ஐம்புல வேடர்களில் ஒன்றாகிய புறக் கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா பதியாகிய இறைவனை

ஞானக் கண்ணினில் - இறைவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால்

சிந்தை நாடி - ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில்

உரா - யாராலும் ஏறிச் செலுத்த (ஊர்ந்து செல்ல) இயலாத

துனை - மிக வேகமுடைய

தேர்த்து என - பேய்த் தேரைப் (கானல் நீர்) போல

பாசம் ஒருவ - பாசம் விரைந்து நீங்க

தண்ணிழலாம் பதி - ஆன்மாக்களின் பாவம் ஆகிய வெப்பம் தணியக் குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான்

விதி எண்ணும் - அவனை முறைப்படி இடை விடாது தியானிப்பது

அஞ்செழுத்தே - ஐந்து எழுத்தின் உட் பொருளின் வழி ஆகும்.

பொருள்:

ஐந்து வேடர்களில் ஒன்றாகிய புறக்கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா கடவுளை, அவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால் ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில், யாராலும் ஏறிச் செலுத்த இயலாத மிக வேகமுடைய பேய்த் தேராகிய கானல் நீரைப் போலப் பாவம் விரைந்து நீங்க, அவ்வான்மாக்களின் பாவமாகிய வெப்பம் தணிய, குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான். முறைப்படி இடைவிடாது ஐந்து எழுத்தின் உட்பொருளின் வழி அவனைத் தியானிக்க வேண்டும்.

இறைவன் தவத்தினில் உணர்த்த அதை உணர்ந்த ஆன்மா மலத்தை விட்டு, பாவத்தை அரித்தெடுக்கும் அரனடியைச் சேர்கின்றது என்பதைப் பார்த்தோம். உணர்ந்தவுடன் மலம் நீங்கிற்று என்றால் மலம் நீங்கிய முறை எவ்வாறு? என்ற கேள்வி எழலாம். புறக்கண் கொண்டு கடவுளைக் காண முயன்றால் அவனைக் காண இயலாது. ஆன்மாவிற்கு, கடவுள் அருளால் திறந்துள்ள அகக் கண்ணால் ஆராய்ந்து உணர்ந்த அளவில், பாசமாகிய மலமானது மிக விரைந்து நீங்கிற்று. அது எவ்வாறு நீங்கிற்று என்றால் கானல் நீராகிய பேய்த் தேரைப் போல மிக விரைந்து நீங்கிற்று.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் காடு வழிச் செல்லும் பொழுது கானல் நீராகிய பேய்த் தேரை நாம் காணஇயலும். அதனுடைய விரைவு, அதை நேரில் கண்டோர்க்கே புலப்படும். பாவம் நீங்கியதற்குப் பேய்த் தேரின் விரைவு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் நடந்து துன்புறும்மனிதனுக்குக் குளிர்ந்த நிழல் எவ்வளவு ஆறுதலைக் கொடுக்குமோ அவ்வளவு ஆறுதலைப் பாவமாகிய கானலினின்று விடுபட்ட ஆன்மா, இறைவன் திருவடியாகிய குளிர் நிழலில் பெற்று மகிழ்ச்சி அடைகின்றது. அந்த மகிழ்ச்சியில் நிலை நிற்க ஆன்மாவானது முறைப்படி ஐந்தெழுத்தின் உட் பொருளைத் தன்னகத்தே இடை விடாது தியானித்து நிற்கும்.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:

சூத்திரம் 8 : ஆன்ம மீட்பு



ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

தம்முதல் - தமக்கு முதல்வனாகிய இறைவன்

ஐம்புல வேடரின் வளர்ந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து

அயர்ந்தனை என - உன்னையும் உன்னைப் படைத்த இறைவனையும் அறியாது மயங்கி உள்ளனை என்று

குருவுமாய் - குருவாக உலகத்தில் வந்து

தவத்தினில் - ஆன்மாவிற்காகத் தான் துன்பத்தை ஏற்றுத் தன்னுயிர் தானறப் பெறுதலாகிய தவத்தினில்

உணர்த்த - ஆன்மாவிற்கு உணர்த்திக் காட்ட

விட்டு - ஆன்மாவானது தனது பாவத்தை விட்டுப் பிரிந்து

அன்னியம் இன்மையின் - ஆன்மாவிற்கு இறைவனோடிருந்த பிளவு நீக்கப்பட்டமையால்

அரன் - பாவத்தை அரித்தெடுப்பவனாகிய இறைவனின்

கழல் - திருவடியைச்

செலுமே - சென்று அடையும்.

விளக்கம்:

தமக்கு முதல்வனாகிய கடவுள் ஆன்மாவை நோக்கி 'நீ மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து, இப்பொழுது இருக்கும் இழி நிலையை அடைந்தாய். நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியாது மயங்கி விட்டாய்' என்று குருவாக உலகில் வந்து, ஆன்மாவை மீட்பதற்காகத் தான் ஏற்றுக் கொள்ளும் துன்பமாகிய தவத்தினால், ஆன்மாவிற்கு உண்மையை உணர்த்திக் காட்ட, ஆன்மாவானது தன் பாவ நிலையை விட்டுத் தனக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள பாவமாகிய பிரிவினை நீக்கப்பட்டு மீட்கப் பட்டமையால் பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவனின் திருவடியைச் சென்று அடையும்.

ஆன்மாவினால் மட்டுமே கடவுளையும், உலகப் பொருளையும் அறிந்து உணர்ந்து கொள்ள இயலும். உலகப் பொருளை அறிந்துக் கொள்வதில் ஆன்மாவிற்கு இடையூறு ஒன்றும் இல்லை. ஆனால் கடவுளையும் தன்னையும் அறிந்துக் கொள்ள இயலாமல் சகச மலத்தினால் அது மறைப்புண்டு இருக்கின்றது. சகசமலம் ஆன்மாவை அதனுடைய பிறப்பில் இருந்தே தொடர்ந்து வருகின்றது. ஆகவே, ஆன்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றது. இறைவன் வந்து சகசமல மறைப்பை நீக்கி ஆன்மாவை விடுவிக்க இயலும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம். செம்பில் களிம்பு சேர்வது இயல்பு. செம்பில் சேரும் களிம்பை நிலையாக நீக்குவது எவ்வாறு?

களிம்பே சேராத பசும்பொன் கட்டி ஒன்றை எடுத்து, அக்னிக் குகையிலே (உலோகம் உருக்கும் பாத்திரத்திலே) அதை உருக்கி, உருகி நிற்கும் அதனுடன் செம்பையும் சேர்த்தால், செம்பு அதனோடு சேர்ந்து உருகி இரண்டும் ஒன்றாகி, ஒரு புதிய உலோகம் கிடைக்கின்றது. இந்தப் புதிய உலோகம் களிம்பு சேரக் கூடிய செம்பும், களிம்பு சேராத பொன்னும் சேர்ந்து உருவானதாயிருந்தாலும், இவ்வுலோகத்தில் உள்ள செம்பில் களிம்பு சேர்வதில்லை. ஏனென்றால் அச்செம்பு பசும்பொன்னுடன் சேர்ந்து நிற்கிறது.

இதைப் போலவே மலத்துளதாம் ஆன்மாவை மீட்க, மலம் சிறிதுமற்ற இறைவன் தவமாகிய அக்னிக் குகையிலே இறங்குகின்றான். இறங்கி, ஆன்மாவிற்காக உருகி நிற்கின்றான். அவனோடு இணைக்கப்பட்ட ஆன்மாவும் தன்னுடைய மலங்களுக்காக உருகிக் கண்ணீர் வடித்து இறைவனுடன் இணைகின்றது. அப்பொழுது மலமறைப்பு ஆன்மாவை விட்டு நீங்கி ஆன்மா இறைவனின் சாயலைப் பெற்றுத் தன்னை மீட்டுக் கொண்ட இறைவனை அடைகின்றது.

 இறைவனாகிய பசும்பொன்னுடன் இணைந்திருக்கும் செம்பாகிய ஆன்மாவை விட்டு, களிம்பாகிய மலம் நீங்குகின்றது.

மன்னனின் மகன் காணாமற் போய்க் காட்டிலே வேடர்களோடு வாழ்கின்றான், வேடர்களோடு வாழும் மன்னர் மகன் தன்னையும், தான் அரச குமாரன் என்பதையும், தனது தந்தை ஆட்சி செய்யும் மன்னர் என்பதையும் மறந்து தன்னை ஒரு வேடர் குடியில் தோன்றிய வேடனாக நினைத்து வாழ்கின்றான்.

வேடர் குடியில் வாழும் தன் மகனுக்கு அவன் யார் என்பதை உணர்த்தி, அரண்மனைக்கு அழைத்து வர அரசருக்கு வாய்ப்பு நேரிடுகிறது. அரச கோலத்தில் தான் சென்றால் தன்னைப் பார்த்து அவன் பயந்து ஓடிவிடக் கூடும் என்று எண்ணிய அரசன், தன் மகன் வாழும் நிலையிலுள்ள ஒரு வேடனைப் போல் உருவங்கொண்டு, மகனைத் தேடி காட்டிற்கு வருகின்றான். காட்டிலே வேடர் குடியில் தன மகனைச் சந்தித்து, " நீ வேடர் குடியைச் சார்ந்தவன் அல்லன்; ஆட்சிக்குரியவன். ஆகவே இந்த வேடர் தொடர்பை விட்டு அரண்மனைக்குத் திரும்பு" என்று அவனுக்கு உண்மை நிலையை அறிவுறுத்துகின்றான். வேடர் குடியிலிருந்த மன்னர் மகன் தன்னையும் தன் தலைவனையும் உணர்ந்து அரண்மனைக்குத் திரும்பும்படியாக அரசனைப் பின்பற்றுகின்றான்.

இறைவன் ஆன்மாவை மீட்டுக் கொண்ட தன்மையும் இவ்வாறே விளக்கப்படுகிறது.

முதல் மனிதனானவன் பாவத்தில் வீழ்ந்ததை சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமான திரு உந்தியார் பின் வருமாறுக் கூறுகின்றது.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41


அவ்வாறு பாவத்தில் வீழ்ந்து ஐம்பொறிகளான வேடர்களுடன் வாழ்ந்து வரும் மனிதனை மீட்க இறைவன் மனித உருக் கொண்டு மண்ணில் வந்தான் என்றே போற்றிப் பஃறொடை கூறுகின்றது

இறவா இன்பத்தெமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான் - போற்றிப் பஃறொடை 69

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1


சிலர் இறைவன் மனிதனாகப் பிறக்கவில்லை; அருளே உருவாக ஒரு தோற்றம் மட்டுமே கொண்டான் என எண்ணுகின்றனர். அதற்கு விடையாய், இறைவன் நம்மைப் போன்ற மனித உருவம் கொண்டு பிறந்தான் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாகிய சங்கற்ப நிராகரணம் கூறுகின்றது.

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான், எய்ந்தவர் எம்மனோரே - சங்கற்ப நிராகரணம் (சைவவாதி நிராகரணம் 25-27)


அவ்வாறு மனித உரு எடுத்து வந்த இறைவன் மனிதன் வீழ்ந்திருந்த பாவத்தை அறுக்க வந்தான் என்பதனை,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93



என்றே திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.


சகசமலத்திலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் முயற்சியில் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் தவத்தை இறைவனோடு இணைத்துக் கூறுகின்றது சைவ சித்தாந்தம். உலக மக்கள் எல்லோரும் செய்த தவத்தை விட உலக மக்களுக்காக இறைவன் செய்த தவமே மிகவும் உயர்ந்தது என்பதை,


மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென்று உந்திப்பற
தவத்தில் தலைவரென்று உந்திப்பற - திரு உந்தியார் 12


என்று எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிச் சித்தாந்த சாத்திரத்தின் முதல் நூலாகிய திருஉந்தியார் கூறுகின்றது.

சகசமலமாகிய மூலையிருந்தாரை விடுவித்து அம்பலமாகிய முற்றத்தே கொண்டு நிறுத்தியவராகிய இறைவன் மிகவும் பெரியவர். எல்லாத் தவங்களிலும் அவர் தவமே தலைமை பெற்றது. அதுவே ஆன்ம மீட்பை மக்களுக்கு எல்லாம் அருளுவது என்பன விளக்கப்படுகின்றன.

தொடரும்...!!!

பின்குறிப்பு:

1) 'தவத்தினில் உணர்த்த விட்டு' என்பன இங்கு சற்று ஆழ்ந்து நோக்கத்தக்கது. விட்டது ஆன்மா, உணர்த்தியது இறைவன்.

தவம் இறைவனுடைய தவமா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். விட்டது ஆன்மா என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.

விட்டது எதை? மலத்தை.

விடுவதற்கு முன் ஆன்மா மலத்தைப் பற்றி இருந்ததா? ஆம்.

அந்நிலையில் சகசமலத்தில் உள்ள ஆன்மா தன்னையும் இறைவனையும் உணர இயலுமா? இயலாது என்பது முன்னரே 'சகசமலத்து உணராது' என்பதின் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

தன்னையும் இறைவனையும் உணராத ஆன்மா எவ்வாறு தவம் செய்யப் புறப்படும். ஆகவே தவம் ஆன்மாவின் தவமன்று. தவத்தில் தலைவராகிய இறைவனுடைய தவமேயாகும்.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

3) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:

சூத்திரம் 7: அறியும் தன்மை ஆன்மாவிற்கே



யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா.

பதவுரை:

சத்து எதிர் : என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர்

யாவையும் சூனியம் ஆகலின் : எல்லாப் பொருள்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே ஆதலால்

சத்தே அறியாது : நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாதலின் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன்

அசத்து இலது அறியாது : அழியக்கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே இது எதையும் அறியாது.

இரண்டலா : என்றும் நிலைத்திருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய கடவுளும் முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும், ஆகிய இரண்டும் அல்லாமல்

ஆன்மா : குறை அறிவும் அழியாமையையும் உடைய சதசத்தாகிய ஆன்மா

இருதிறன் அறிவுளது : சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பொருள்:

என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர் எல்லாப் பொருட்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே. ஆதலால் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாகையால் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன். அழியக் கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே அது எதையும் அறியாது. என்றும் நிலைத்து இருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய இறைவனும், முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும் அல்லாமல், குறை அறிவும் அழியாமையும் உடைய சதசத்தாகிய ஆன்மா, சத்தாகிய கடவுளையும் அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டு உள்ளது.

கடவுளுடைய அருள் இல்லாவிட்டால் கடவுளை உணரவோ, உணர்ந்து தொழவோ ஆன்மாவிற்கு இயலாது என்று கூறும் பொழுது, ஆன்மா எப்படிப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. அதே நேரத்தில், தன்னுடைய அருளால் ஆன்மாவிற்கு உணர்த்தும் கடவுள் எப்படிப்பட்டவன்? என்ற கேள்வியும் எழுகின்றது. கடவுள் என்றும் அழியாது நிலை நிற்கும் சத்துப் பொருள் ஆவான். அவன் இன்றி எப்பொருளும் நிலை பெறுவதில்லை. என்றும் நின்று நிலைக்கும் கடவுள் பிறிதொன்றை அறிய வேண்டிய அவசியமற்ற, முழுவதும் அறியும் முற்றறிவு உடையவன் ஆவான்.

சத்தாகிய கடவுள் அல்லாத மற்ற உலகப் பொருள்கள் அழியக்கூடியவை. பிறிதொன்றை அறியும் திறனும் அற்றவை. ஆகவே, அவை அசத்துப் பொருள்களாகும். சத்தாம் கடவுளும், அசத்தாம் உலகப் பொருளும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவது பொருள் ஒன்று உண்டு. அது கடவுளைப் போல் முழு அறிவுடையதாக அல்லாமல் குறை அறிவு உடையதாகவும், உலகப் பொருளைப் போல் அழியக் கூடியதாக அல்லாமல் அழியாமையை உடையதாகவும், சத்தும் அசத்தும் அல்லாமல் இரண்டன் தன்மைகளையும் கொண்டது சதசத்தாகிய ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவே சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே கடவுள் வந்து உணர்த்தினால் உணர்வுப் பெறக் கூடிய தன்மை ஆன்மாவிற்கு உண்டு.

தொடரும்....!!!

பி.கு:

1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...